கேள்வி 1: பகுத்தறிவாளர்கள் தங்கள் கொள்கை வெற்றியைக் காட்டவே பெரும் செலவில் (ஆடம்பரமாக) திருமண விழாக்களை நடத்துவதாகக் கூறுவது சரியா?
- சகா சசிகுமார், பெரவள்ளூர்
பதில 1: சரியல்ல; சுயமரியாதைத் திருமண முறையின் அடிப்படைத் தத்துவமே எளிமையும், சிக்கனமும் தான். வெற்று ஆடம்பரம், டாம்பீக வெளிச்சம் போட்டுத்தான் இக்கொள்கை வெற்றியைக் காட்டுகிறோம் என்பது ஓர் ஏற்க இயலாத விளக்கம்!
ஆடம்பரம் புகுந்ததுமே சுயமரியாதைக் கொள்கை தோற்றுவிடாது. வசதி படைத்தவர்களிடம் காணும் எளிமையும், சிக்கனமும் எடுத்துக்காட்டாகிறது என்பதை மறக்க வேண்டாம்!
----
கேள்வி 1: ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வுகளில் அவரவர் தாய்மொழியிலும், இந்தியிலும் மட்டுமே வினாக்கள் வழங்கப்படும் என்பதை எதிர்ப்பதை தமிழ் மொழி வளர்ச்சியை எதிர்ப்பதாக வலதுசாரிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்களே?
- அ.தமிழ்க்குமரன், ஈரோடு
பதில் 2: அதில் சாரமில்லை. அவரவர் தாய்மொழியினைப் பரப்ப அக்கறை காட்டுவது ஒன்றிய அரசின் நோக்கமானால், பின் எதற்கு ஹிந்தியில் கேள்விகள் தேவை?
கேள்வி 1: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மசோதாக்களை நிறைவேறவிடாமல் தடுக்கும் ஆளுநர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாதா?
- த.மணிமேகலை, வீராபுரம்
பதில் 3: உயர்நீதிமன்றத்தில் தொடர முடியாது. உச்சநீதிமன்றத்தில் தீர்வு காண முயற்சிக்கலாம்! - முன் மாதிரி தீர்ப்புகள் சில உள்ளன என்பதால்!
----
கேள்வி 1: 2025இல் நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கம் அதற்குள் ஜாதி ஒழிப்பில் தன் இலக்கை எட்டுமா?
- பழனிவேல், ஆதிவராகநல்லூர்
பதில் 4: மூன்றாண்டில் ஜாதி ஒழிப்புக்காக முழு முயற்சி செய்வோம். ஜாதி ஒழிப்புக்கு ஒன்றிய அரசின் ஒத்து ழைப்புக் கிட்டினால் அந்த இலக்குக்குள் நடப்பது பெரும்பாலும் சாத்தியம் - உறுதியாக இது போன்ற வற்றிற்கு கால அவகாசம் - கெடு வைக்க இயலாது!
----
கேள்வி 1: சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகளின் வாக்குரிமை பறிக்கப்படுவது சரியா?- மதியழகன், மறவனூர்
பதில் 5: சரியல்ல; அவர்களுக்கு உரிமை தர வேண்டும்.
----
கேள்வி 1: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகப்படுத்தும் ரிசர்வ் வங்கியின் செயலை - பொருளாதாரம் படித்தவராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
- சந்தோஷ், வேலப்பன்சாவடி
பதில் 6: வரவேற்கத்தக்க நடவடிக்கை; ஆனால், காலந்தாழ்ந்த நடவடிக்கையாகும்! தும்பை விட்டா வாலைப் பிடிப்பது?
கேள்வி 1: தி.மு.க. நிருவாகிகள் செய்யும் சிறு தவறுகளுக்குக்கூட `திராவிட மாடல்' என்னும் சொல் விமர்சிக்கப்படுகிறதே?
- சபாஷ் ராஜா, அரியலூர்
பதில் 7: "வேண்டாத மனைவி கை பட்டால், கால் பட்டால் குற்றம்" என்ற கிராமியப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! இப்படிப்பட்ட சொத்தை விமர்சனங்களுக்கு மக்களிடையே மதிப்பு கிடையாது!
----
கேள்வி 1: தெலங்கானாவில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது போல் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்குமா?
- கல. சங்கர், மதுராந்தகம்
பதில் 8: இந்த இரு மாநிலங்களிலும் அது அவ்வளவு எளிதாக நடக்க முடியாது! வடக்கேயே பருப்பு அதிகமாக வேகவில்லையே!
கேள்வி 1: குஜராத் தொங்குபாலம் அறுந்து விழுந்ததை அரசியலாக்க விரும்பாத ராகுல் காந்தி, எதையும் அரசியலாக்கும் பிஜேபியுடன் போட்டி போடத் தகுந்தவரா?
- தமிழ்மைந்தன், சைதாப்பேட்டை
பதில் 9: அவரது அரசியல் முதிர்ச்சிக்குப் பாராட்டு! பா.ஜ.க.வை எதிர்கொள்ள அவரே சரியானவர்!
----
கேள்வி 1: பொது இடங்களில் சிலை வைக்கக் கூடாது என்பதில் முனைப்புக் காட்டும் அதிகாரிகள் கோயில் கட்டுவதற்கு நன்கொடை தருகிறார்களே... இவர்களது கடமை என்ன என்பதை உணர்த்த தனித்துறை தேவையா?- கண்ணபிரான் கலையரசன், கோவர்த்தனகிரி
பதில் 10: எங்கும் இரட்டை வேடம்! பொது இடத்தில் சிலை வைக்க எதிர்க்கும் அதிகாரிகள் கோயில் கட்டுவதை அகற்ற முனைப்புக் காட்டுவதில்லையே - ஏன்?
No comments:
Post a Comment