தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், அழகு தமிழில் பேசி அனைவரையும் ஈர்க்கும் ஆற்றலாளரும், மொழிப் பற்று, இனப்பற்று மிக்கவரும், நம்மிடத்தில் வாஞ்சையுடன் பழகும் பண்பாளருமான முனைவர் அவ்வை நடராசன் (வயது 86) அவர்கள் நேற்றிரவு மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து வருந்துகிறோம்.
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் அவ்வை நடராசன். தமிழ்நாடு அரசின் 'கலைமாமணி' விருது, ஒன்றிய அரசின் 'தாமரைத் திரு' விருதும் பெற்றவர் ஆவார். பல நூல்களை எழுதியவர்! ஆற்றல்மிகு சொற் பொழிவாளர்!
தமிழுலகு அருந்தமிழ் அறிஞரை இழந்து விட்டது. குடும்பத்தினர் தங்கள் தலைவரை இழந்து விட்டனர்.
அவர் பிரிவால் ஆறாத் துயர் அடைந்துள்ள மகன்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அவ்வை நடராசன் மூத்த மகன் முனைவர் ந. அருளிடம் தொலைபேசியில் தமது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment