பாரிஸ் விமான நிலையத்திலேயே 18 ஆண்டுகளாக வசித்த ஈரானிய அகதி மாரடைப்பால் மரணம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 19, 2022

பாரிஸ் விமான நிலையத்திலேயே 18 ஆண்டுகளாக வசித்த ஈரானிய அகதி மாரடைப்பால் மரணம்!

 

ஸ்பீல் பெர்க்கின் `தி டெர்மினல்' படத்துக்கு அடித்தளமாக அமைந்த ஈரானைச் சேர்ந்தவர் தன்னுடைய 77ஆவது வயதில் காலமானார். மெஹ்ரான் கெரிமி நாசேரி என்ற இந்த ஈரானியர் 18 ஆண்டுகளாக பிரான்சு நாட்டின் தலைநகர் பாரிஸில் உள்ள `சார்லஸ் டி கோல்' விமான நிலையத்தில் வசித்து வந்தவர். 

யார் இந்த கரிமி நாசேரி? எதற்காக 18 ஆண்டுகளாக பாரிஸ் விமான நிலையத்திலேயே தங்கினார்? 

1945ஆம் ஆண்டு ஈரானின் குசெஸ்தான் மாகா ணத்தில் உள்ள மஸ்ஜித் சுலைமான் என்ற இடத்தில் ஈரானிய தந்தைக்கும் பிரிட்டானிய தாய்க்கும் பிறந்தார். தன்னுடைய மேல் படிப்புக்காக 1974ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற நாசேரி அதன்பிறகு சொந்த நாட்டுக்கு திரும்பியிருக்கிறார். அங்கு, அப்போதைய ஈரானிய மன்னர் ஷாவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஸ்போர்ட் உள்பட எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் நாசேரி நாடு கடத்தப் பட்டிருக்கிறார். இதனையடுத்து அய்ரோப்பிய நாடுகளிடம் புகலிடம் கேட்டு விண்ணப்பித்திருந்த வேளையில் பெல்ஜியத்தில் உள்ள அய்க்கிய நாடுகள் அமைப்பு, நாசேரிக்கு அகதிகளுக்கான தகுதியை அளித்திருக்கிறது. ஆனால், அந்தச் சான்றிதழ்கள் அடங்கிய சூட்கேஸ் பாரிஸ் நகரின் ரயில் நிலையத்தில் திருடப்பட்டிருக்கிறது.

இதனால் கரிமி நாசேரியிடம் எந்த ஆவணமும் இல்லாததால் பிரெஞ்சு காவல்துறை அவரை கைது செய்தது. இருப்பினும் நாசேரியிடம் வேறு எந்த ஆவணமும் இலலாததால் நாடு கடத்தவும் முடியாமல் போயிருக்கிறது. இதனால் 1988ஆம் ஆண்டு பாரிஸின் `சார்லஸ் டி கோல்' விமான நிலையத்திலேயே தங்கியிருக்கிறார் நாசேரி. அங்கிருந்த காவலர்கள் மற்றும் விமான  நிலைய அதிகாரிகளுடனும் நட்பா கவும்  பழகியிருக்கிறார். ஆவணம் இல்லாததால் 

விமான நிலையத்தில் தற்காலிகமாக தங்கிய நாசேரிக்கு அதுவே வாழ்விடமாகப் போயிருக்கிறது. `சார்லஸ் டி கோல்' விமான நிலையத்தின் 2தி என்ற முனையத்தில் தங்கிய அவர், அந்த இடத்திலேயே தன்னுடைய உடைமைகளையும் வைத்திருந்திருக்கிறார். அங்கு தன்னுடைய வாழ்க்கை குறித்து எழுதிக்கொண்டும், புத்தகங்கள், செய்தித் தாள்களை படித்துக் கொண்டும் இருந்த கெரிமி நாசேரி, விமான நிலைய அதிகாரிகளுக்கும் அவ்வப்போது சிறு சிறு வேலை களை செய்து வந்திருக்கிறார்.

இதனால் அவரை `சர் ஆல்ஃபிரைட்' என அழைத் திருக்கிறார்கள். விமான நிலையத்திற்கு வந்துச் செல்லும் பயணிகளிடையேயும் நாசேரி பிரபலமாகியிருக்கிறார். இப்படி இருக்கையில், அகதிக்கான ஆவணங்கள் கரிமி நாசேரிக்கு கிட்டியிருக்கிறது. ஆனால் பாதுகாப்பின்மை மற்றும் விமான நிலையத்தில் இருந்து செல்ல விரும்பாததால் ஆவணத்தில் கையெழுத்திட மறுத்து அங்கேயே தங்கியிருக்கிறார். இப்படியாக 1988ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை விமான நிலையத்தையே தன்னுடைய இருப்பிடமாக்கி இருக்கிறார். இந்த நிலையில்தான் 2006ஆம் ஆண்டு உடல்நலிவுற்றதால் நாசேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பிறகு பாரிஸில் உள்ள காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு தன்னுடைய கடைசி நாட்களை விமான நிலையத்தில் கழிக்க எண்ணி அங்கு மீண்டும் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை யான நவம்பர் 12ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவருடைய இறுதிக் காலத்தின் போது நாசேரியின் உடைமைகளாக சில ஆயிரம் யூரோக்களே இருந்தது என விமான நிலைய அதிகாரிகள் கூறியதாக பிரான்சு நாளிதழ்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மெஹ்ரான் கரிமி நாசேரியின் விமான நிலைய வாழ்க்கை குறித்துதான் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் `தி டெர்மினல்' என்ற படத்தை டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் இயக்கியிருந்தார். இது 2004ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. முன்னதாக 1993ஆம் ஆண்டு `லாஸ்ட் இன் டிரான்சிட்` என்ற பெயரில் நாசேரியின் கதையை மய்யமாக கொண்டு பிரெஞ்சு திரைப்படம் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment