தீபாவளி தத்துவமும்-இரகசியமும்: மாணவர்கள் உரையாடல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

தீபாவளி தத்துவமும்-இரகசியமும்: மாணவர்கள் உரையாடல்!

தீபாவளி பற்றி சித்திரபுத்திரன் (தந்தை பெரியார்) எழுதியுள்ள ஆராய்ச்சி உரையாடலைக் கீழே தருகிறோம். பாமரர்களில் பல்லாயிரவர் உண்மை தெரிந்து வெறுத்துத் தள்ளியுள்ள தீபாவளியை படித்த கூட்டத்தார் கூடக் கொண்டாடுகிறார்களே! அதுதான் வெட்கக்கேடு. சைவர்கள் என்பவர்கள்கூடக் கொண்டாடுகிறார்களே! அது இன்னும் பெரிய வெட்கக்கேடு. எல்லோருமே இதைப் பார்க்கட்டும்!                       (ஆ-ர்).

டேவிஸ்: டேய், ராமானுஜம்... எங்கடா போகிறாய்?

ராமானுஜம்: எங்குமில்லை பிரின்ஸ் பாலைப் பார்த்து எனக்கு இரண்டு நாள் லீவ் கேட்கப் போகிறேன்.

டேவிஸ்: எதற்கு லீவு?

ராமா: 21ஆம் தேதி பண்டிகை லீவு, 22ஆம் தேதி சனிக்கிழமை 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலேஜ் இல்லை. இன்னும் ஒரு இரண்டு நாள் அதையொட்டி லீவு கிடைத்தால் ஊருக்குப் போய் 5 நாள் சாவகாசமாய் இருந்துவிட்டு வரலாம் என்று கருதி இன்னும் இரண்டு நாள் லீவு கேட்கிறேன்.

டேவிஸ்: என்ன பண்டிகை?

ராமா: தீபாவளிப் பண்டிகை

டேவிஸ்: தீபாவளி என்றால் அது ஒரு பண்டிகையா?

ராமா: ஆம்.

டேவிஸ்: அதற்காக எதற்கு?

ராமா: பண்டிகை கொண்டாடு வதற்கு.

டேவிஸ்: எப்படிக் கொண்டாடுவது?

ராமா: அதிகாலையில் எண்ணெய் தேய்த்து முழுகி புதிய உடை அணிந்து பலகாரம் சாப்பிட்டு பட்டாசு சுடுவது.

டேவிஸ்: குளித்து முழுகி புதிய உடை அணிந்து பட்டாசு சுடுவது ஒரு பண்டிகையா? இதற்காக நீ ஊருக்கு போக வேண்டுமா அதை அனுசரித்து சனி, ஞாயிறு வருவது போதாமல் மேற்கொண்டு இரண்டு நாள் தேவையா? இதென்னப்பா, நாட் களைக் கொலை செய்யும் பண்டிகை யாக இருக்கிறதே? லீவுக்கு கேள்வி கேட்பாடு இல்லையா?

வாரத்துக்கு சனி, ஞாயிறு லீவு; வருடத்தில் 2,3 மாதம் வெயில் கால லீவு. வருடத்தில் 15 நாள் ஜனவரி லீவு. பிறகு காஷுவல் லீவு. இவை போன்று என்னென்னமோ லீவு. இந்த 2,3 மாதத்தில் பல லீவுகள்! போதாக் குறைக்கு நாணயமாற்று லீவு! இப்படியே நாட்கள் பாழாகின்றன. நமக்கு படிக்கும் நேரமோ ஒரு நாளைக்கு 5 மணி நேரம் தான் தேறுகிறது. அப்படித் தேறும் நாட்களில் இப்படிக் கணக்கு வழக்கு இல்லாமல் நாட்கள் பாழாகின்றன அன்னிய ஆட்சி போய் சுய ஆட்சி வந்துகூடவா இந்தத் தொல்லை? நாட்களெல்லாம் இப்படி லீவு ஆகிவிட்டால் அப்புறம் படிப்புத் தான் எப்படி வரும்?

ராமா: நீ என்னப்பா! தீபாவளி வருஷத் துக்கு ஒரு நாள் பண்டிகையாக வருகிறது. அதுகூடஉனக்குப் பொறுக்க வில்லையா? மனிதனுக்கு ஓய்வு வேண்டாமா?

டேவிஸ்: வருஷத்துக்கு ஒரு நாளாக ஒவ்வொரு நாளும்தான் வருகிறது; அதற்காக எல்லா நாளும் லீவு விடுவதா? ஓய்வுக்கு என்ன குறை; சனி ஞாயிறு போதாதா?

ராமா: சனி ஞாயிறு நமக்குப் போதும். வீட்டிலே குடும்பத்துடன் கொண்டாட ஒரு ஓய்வு நாள் வேண்டாமோ? சனி ஞாயிறு களில் வீட்டில் உள்ளவர்கட்கு ஓய்வு ஏது?

டேவிஸ்: என்ன ஓய்வோ, என்ன கொண்டாட்டமோ, எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்தப் பண்டிகைகளின் பேரால் வேலை நாட்கள் பாழாகின்றன.

ராமா: நீ என்ன கருப்புச் சட்டைக் காரன்போல் தோன்றுகிறது. பண்டிகை களை இப்படி வெறுக்கிறாயே!

டேவிஸ்: கருப்புச் சட்டை இல்லை; ஒரு இழவும் இல்லை. என்ன பண்டிகை இது? நாசமாய்ப் போன பண்டிகைகள், இப்படி மாதா மாதம் வந்து உயிரை வாங்கு கின்றனவே.

ராமா: அப்படிச் சொல்லாதே; பண்டி கைகள் எல்லாம் மத சம்பந்தமானவைகள். நாம் மதத்தைச் சார்ந்தவர் களாகவும், கடவுள் நம்பிக்கை உடையவர் களாகவும் இருந்தால் இந்த மாதிரி பண்டிகைகளைக் குறை கூறக் கூடாது. மனிதனுக்கு மதமும் கடவுளுந்தான் முக்கி யமே ஒழிய இந்தக் கல்லூரிப் படிப்பு முக்கியமான தல்ல. இந்தப் படிப்பு என்பதெல்லாம் மதத்தை சரிவர பின்பற்றி கடவுளை சரிவர அறிந்து பக்தி செய்யத்தான். ஆதலால் இப்படி எல்லாம் பேசாதே.

டேவிஸ்: என்னப்பா பூச் சாண்டி காட்டுகிறாய்? பண் டிகை எதற்கு என்றால் லீவுக்கு என்கிறாய்! லீவு எதற்கு என்றால் குடும்பத்தோடு ஓய்வுபெறத்தான் என் கிறாய்! படிப்பு கெட்டு விடுகிறதே என்றால் மதத்துக்காகவும், கடவுளுக்காகவும் பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லிக் கொண்டு, இதைத் தவறு என்று சொன் னால் என்னைக் கருப்புச் சட்டைக்காரன் என்கிறாய்! முடிவாக படிப்பைவிட மதம் கடவுள்தான் பெரிது அதற்காகத்தான் படிக்கிறது என்கிறாய்! இது என்ன சமாதானம்? மேலும் ஒரு மனிதன் பிறக்கும் போதே மதம் அவன் கூடவே பிறக்கிறது கடவுளும் ஒரு மனிதன் பிறப்பதற்கு முன்பு இருந்தே அவன்கூடவே இருந்து அவன் சாகும்வரை அவனை நடத்துகிறது இந்த இரண்டு கெட்டியான சங்கதிக்கு ஒரு மனிதன் படிக்க வேண்டியது எதற்கு? அதுவும் காலேஜில் படிக்க வேண்டியது எதற்கு? அப்படியானால் காலேஜிலே படிக்காதவர்களுக்கெல்லாம் மதம் கடவுள் அறிவும்பக்தியும் இல்லை என்றும் வராது என்றுமா சொல்லுகிறாய்?

ராமா: நீ கருப்புச் சட்டைக்காரன்தான் சந்தேகமில்லை உன்னோடு பேசிப் பயனில்லை!

டேவிஸ்: கோபித்துக் கொள்ளாதே. உன் பண்டிகையை அறிய வேண்டுமென்று தான் கேட்டேன். சங்கதி எங்கேயோ போய் விட்டதே தீபாவளி என்ன பண்டிகை? எதற்காகக் கொண்டாடுவது? மதத்தை எப்படி அறிந்திருக்கிறாய்? அதில் கடவுள் பக்தி எப்படி ஏற்படுகிறது? சொல் பார்ப்போம்.

ராமா: அப்படிக் கேள் சொல்கிறேன்.

தீபாவளி என்பது உலகத்துக்கு கேடு விளைவித்த ஒரு அசுரன் கடவுளால் கொல்லப்பட்ட நாளை மக்கள் கொண் டாடுவதாகும். அதை நீயும் கொண்டாட லாம். இப்பொழுது வெள்ளையன் ஒழிந்த நாளை நாம் சுதந்தர நாளாகக் கொண்டாடவில்லையா? அதுபோல.

டேவிஸ்: அப்படியா? அந்த அசுரன் யார்? அவன் எப்படி உலகுக்குக் கேடு செய் தான்? அந்தக் காலத்தில் அணுக்குண்டு இருந்திருக்காதே? இந்தக் காலத்தில் அணுகுண்டு வைத்திருப்பவனையும் இன்னும் மக்கள் சமுதாயத்துக்கு என்னென்னவோ கேடு செய்கிறவர்களை யும்பற்றி நாம் ஒன்றுமே பேசுவ தில்லை; அப்படியிருக்க அந்த அசுரன் யார்? அவனென்ன கேடு செய்தான்?

ராமா: அந்த அசுரன் பெயர் நரகாசூரன். அவன் பூமியிலிருந்து பிறந்தவன். அவன் தகப்பன் மகா விஷ்ணு. அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்து தேவர்களின் பெண்களுக்கும் தொல்லை கொடுத் தான். அதனால் மகாவிஷ்ணுவும் அவர் மனைவியும் சேர்ந்து அவனைக் கொன்று விட்டார்கள்.

இனி எவரும் தேவர்களுக்குத் தொந்தரவு கொடுக் கக் கூடாது என்பதை மக்களுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அவன் செத்த நாளைக் கொண்டாடுவது தெரிந்ததா? இதுதான் தீபாவளித் தத்துவம்.

டேவிஸ்: தெரிந்தது. ஆனால் அதை விளக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனம் ஆசைப்படுகின்றது. அதா வது அவன் மகா விஷ்ணுவுக்கும் பூமிக்கும் எப்படிப் பிறக்க முடியும்? பூமியானது மண், கல் உருவத்தில் இருந்தே மகாவிஷ்ணுக்கு பூமியுடன் எப்படி கலவி செய்ய முடிந்தது? பூமி எப்படி கர்ப்பம் தரிக்கும்? அதற்கு எப்படி பிள்ளை பிறக்கும்? எனக்குப் புரியவில்லையே?

ராமா: அட பயித்தியக்காரனே! மகாவிஷ்ணு நேராகவா போய்க் கலவி செய்வார்? அதற்கு அவருக்கு மனைவிகள் இல்லையா? ஆதலால் அவர் நேராகக் கலவி செய்ய வில்லை. மகாவிஷ்ணு பன்றி உருவமெடுத்தார்.

டேவிஸ்: பொறு! பொறு! இங்கே கொஞ்சம் விளக்கம் தேவை மகா விஷ்ணு பன்றி உருவம் ஏன் எடுத்தார்?

ராமா: அதுவா! சரி சொல்கிறேன் கேள். இரண்யாட்சதன் என்று ஒரு இராட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான்.

டேவிஸ்: பொறு! பொறு! ஓடாதே இங்கே எனக்கு ஒரு மயக்கம்!

ராமா: இதிலென்னப்பா மயக்கம்? நான்தான் தெளிவாக சொல்லு கிறேனே!

பூமியைப் பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு சமுத்திரத்துக்குள் ஓடி ஒளிந்து கொண்டான் என்று. 

டேவிஸ்: சரி! அது அருத்தமாச்சுது.

ராமா: பின்னை எது அருத்தமாக வில்லை? சும்மா தொல்லை கொடுக் கிறாயே!

டேவிஸ்: தொல்லை ஒன்றுமில்லை, உன் சங்கதிதான் என் மூளைக்குத் தொல்லை கொடுக்கிறது. தலை சுற்றுகிறது அதாவது ஒரு இராட்சதன் அப்படியின்னா என்ன? அது கிடக் கட்டும். அவன் பெயர் இரண்யாட் சதன். அதுவும் போகட்டும். அவன் கதையை அப்புறம் கேட்போம். அந்த இராட்சதன் பூமியை எப்படி சுருட் டினான்? பூமிதான் பந்து போல இருக் கிறதே? அவன் அதை சுருட்டுவ தானால் ஒரு சமயம் உருட்ட முடியுமே தவிர சுருட்ட முடியாதே? அதுவும் போகட்டும் சுருட்டினான் என்கிறாய். சுருட்டினான் என்றே வைத்துக் கொள்வோம்.

சுருட்டினானே அவன் சுருட்டும் போதுதான் எங்கே இருந்து கொண்டு சுருட்டினான்? சுருட்டிக் கொண்டு ஓடினானே எதன் மேல் நடந்து ஓடினான்? ஆகாயத்தில் பறந்து கொண்டே சுருட்டியிருக்கலாம். ஆகாயத்தில் பறந்து கொண்டே ஓடியி ருக்கலாம். கருடன் மகாவிஷ்ணு வையும், அவன் பொண்டாட்டியையும் தூக்கிக் கொண்டு பறப்பதுபோல் பறந்திருக்கலாம்.

ஆனால் அவன் சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டான் என்கிறாயே அந்த சமுத்திரம் எதன்மேல் இருந்தது? பூமியின்மேல் இல்லாமல் அதுவும் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டோ அல்லது பறந்து கொண்டோ இருந்தது என்றால் சமுத்திரம் தண்ணீர் ஆயிற்றே அது ஒழுகிப் போய் இருக்காதா? அப் போது அடியில் ஒளிந்துகொண்டிருப் பவன் தொப்பென்று கீழே பூமியுடன் விழுந்திருக்க மாட்டானா? அல்லது அது வேறு உலகம், இது வேறு உலகமா? நமக்கு ஒன்றும் புரிய வேயில்லையே? இதை எனக்கு புரிய வைக்க வேண்டும். நானும் நீயும் பி.ஏ. 2ஆவது வருஷம் பூகோளம், வான நூல், சைன்ஸ் படித்தவர்கள். ஆதலால் இந்த சந்தேகம் வருகிறது. நாம் படிக்காத மடையர்களாய் இருந்தால் குற்றமில்லை; சற்று விளங்கச் சொல் பார்ப்போம்.

ராமா: இதெல்லாம் பெரியோர்கள் சொன்ன விஷயம் சாஸ்திரங்களில் உள்ள விஷயம், மத தத்துவம்! ஆனால் இவைகளை இப்படியெல்லாம் கேட்கக் கூடாது. நாஸ்திகர்கள் தான் இப்படிக் கேட்பார்கள் கருப்புச் சட்டைக் காரர் கள்தான் இப்படிக் கேட்பார்கள் இத்தனை ஆயிரம் காங்கிரசுக்காரர்கள் இருக்கிறார்களே ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா?

இந்து மகாசபையில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? சோஷியலிஸ்ட்களில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? இந்திய கம்யூனிஸ்ட்களில் ஒரு ஆள் இப்படிக் கேட்பாரா? நீதான் இப்படிக் கேட்கிறாய் நீ கருப்புச் சட்டைக்காரன் தான் சந்தேகமில்லை.

டேவிஸ்: நீ என்னப்பா இப்படி பேசறே, பி.ஏ. படிக்கிறவனாகத் தெரியவில்லையே! பூமிக்குப் பிறந்தான் என்கிறாய் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போனான் என்கிறாய், எப்படிப் பிறந்தான்? எப்படித் தூக்கிக் கொண்டு எப்படி போனான் என்றால் கோபித்துக் கொள்கிறாய்! இந்தக் கதையைப் பண்டிகையாக வைத்து கோடிக் கணக்கான மக்கள் கொண் டாடுகிறார்கள் என்கிறாய். சர்க்கார் இதற்கு லீவு விடுகிறது. பல லட்சம் பிள்ளைகள் அன்று படிப்பதை விட்டு தெரு சுற்றுகிறதுகள்! இவ்வளவு பெரிய சங்கதியைக் கேட்டால் என்னை கருப்புச் சட்டை என்கிறாய்.

கருப்புச்சட்டை போடாதவனுக்கு புத்தியே இருக்கக் கூடாதா? புத்தி கருப்புச் சட்டைக்குத்தான் சொந்தமா? சரி! அதிருக் கட்டும் அப்புறம் அவன் ஓடிப்போய் சமுத் திரத்தில் ஒளிந்து கொண்டான்! அப்புறம்?

ராமா: ஒளிந்து கொண்டதும் பூமியில் இருந்தவர்க ளெல்லாம் போய் மகா விஷ்ணுவிடம் முறையிட்டார்கள்.

டேவிஸ்: இரு! இரு! பூமியைச் சுருட்டின போது பூமியில் இருந்தவர்கள் ஓடிவிட் டார்களா? நோட்டீஸ் கொடுத்து விட்டுத் தான் சுருட்டினானோ?

ராமா: நீ என்னப்பா சுத்த அதிகப் பிரசங்கியாக இருக்கிறே; ஓடிப் போய் முறையிட்டார்கள் என்றால் எப்படிப் போனார்கள், வெங்காயம் வீசை என்ன விலை, கருவாடும் கத்தரிக்காயும் குழம் புக்கு நல்லாயிருக்குமோ? என்பது போன்ற அதிகப் பிரசிங்கித்தனமான கேள்விகளை முட்டாள்தனமாகக் கேட்கிறாயே?

டேவிஸ்: இல்லை, இல்லை கோபித்துக் கொள்ளாதே சரி! சொல்லித் தொலை! முறையிட்டார்கள்! அப்புறம்?

ராமா: முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி பகவான் மகா விஷ்ணு உடனே புறப்பட்டார். சமுத்திரத் தினிடம் வந்தார்.

பார்த்தார் சுற்றி. எடுத்தார் பன்றி அவதாரம், குதித்தார் தண்ணீரில். பாய்ந்தார் நிலத்துக்கு, கண்டார் பூமியை தன் கொம்பில் அதை குத்தி எடுத்துக் கொண்டு வந்து விரித் தார் பூமிப் பாயை; புரிஞ்சுதா.

டேவிஸ்: புரியாட்டா கோபித்துக் கொள்கிறாய் அதிகப் பிரசங்கி என்கிறாய் சரி புரிந்தது. விரித்தார் பூமியை பிறகு என்ன நடந்தது?

ராமா: பிறகா; பூமியை விரித்தவுடன் அந்த பூமிக்கு ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. ஒரு குஷால் உண்டாயிற்று. பூமி அந்தப் பன்றியைப் பார்த்தது. அந்தப் பன்றி இந்தப் பூமியைப் பார்த்தது அந்தச் சமயம் பார்த்து மன்மதன் இரண்டு பேரையும் கலவி புரியச் செய்து விட்டான். அப்புறம் சொல்ல வேண்டுமா, கலந்தார்கள் பிறந்தது பிள்ளை.

டேவிஸ்: சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன்; கோவிச்சுக்காதே.

ராமா: சரி கேள்.

டேவிஸ்: வராகம் என்பது பன்றி அது ஒரு மிருகரூபம் சரிதானா?

ராமா: சரி.

டேவிஸ்: பூமி கல் மண் உருவம் சரிதானா?

ராமா: சரி.

டேவிஸ்: இது இரண்டும் எப்படிக் கலவி புரியும்? எப்படிக் கருத்தரிக்கும்?

ராமா: பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என்பது கடவுள் பார்த்து எப்படி வேண்டுமானாலும் செய்யலாமல்லவா?

டேவிஸ்: என்னப்பா இராமானுஜம் பாத்தியா பாத்தியா என்று சாயபுமாதிரி பாத்தியா கொடுக்கிறே! இது பெரிய ஒரு சைன்ஸ்! ஸெக்சுவல் சையன்சு சங்கதி; இதைக் கேட்டால் போக்கிரிதனமான கேள்வி என்கிறாய். சரி. இதைபற்றி பிரின்ஸ்பாலைக் கேட்கலாம். அப்புறம் அந்தப் பிள்ளை என்ன ஆச்சுது?

ராமா: அந்தப் பிள்ளைதான் நரகாசுரன்.

டேவிஸ்: இந்தப் பெயர் அதற்கு யார்? இட்டார்கள் தாய் தந்தையர்களா?

ராமா: யாரோ அன்னக்காவடிகள் இட்டார்கள்? அதைப் பற்றி என்ன பிரமாதமாய் கேட்கிறாய், எனக்கு அவசரம் நான் போக வேண்டும் என்னைவிடு.

டேவிஸ்: சரி போகலாம் சீக்கிரம் முடி அப்புறம்?

ராமா: அந்த நரகாசூரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததான். அவனை மகாவிஷ்ணு கொன்றார்.

டேவிஸ்: அடபாவி! கடவுளுக்குப் பிறந்தவனா, தேவர் களுக்குத் தொல்லை கொடுத்தான்? அப்படியென்றால் தேவர் கள் என்ன அவ்வளவு அயோக்கியர்களா?

ராமா: இல்லேப்பா. இந்த நரகா சூரனின் பொல்லாத வேளை, தேவர்கள் கிட்டே இவன் வாலாட்டினால் அவர்கள் சும்மா விட்டு விடுவார்களா?

டேவிஸ்: அதற்கு ஆக தகப்பன் மகனுக்கு புத்தி சொல்லாமல் ஒரே அடி யாகக் கொன்றுவிடுவதா?

ராமர்: அது இவர் இஷ்டம், அதைக் கேட்க நாம் யார்? தேவரனையர்கயவர் அவருந்தான் மேவன செய்தொழுக லான் என்று நாயனார் சொல்லி இருக்கிறார் ஆதலால் நாம் அது ஏன் இது ஏன் என்று கேள்வி கேட்கலாமா?

டேவிஸ்: சரி கொன்றார் அதற்கும் தீபாவளிக்கும் என்ன சம்பந்தம்?

ராமா: அதைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் என்றால் இனிமேல் எவனும் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது என்பதற்காக அதை ஞாபகத்தில் வைப்பதற்கு அதை நினைவூட்டுவதற்கு நாம் அடிக்கடி கொண்டாட வேண்டியது என்பதுதான்.

டேவிஸ்: தேவர்கள் எங்கிருக்கிறார்கள்?

ராமா: வானதேவர்கள் வானத்தில் (மேல் உலகத்தில்) இருக்கிறார்கள்; பூ தேவர்கள் இந்தப் பூமியிலே இருக் கிறார்கள்.

டேவிஸ்: இந்த பூமியில் இருக்கும் தேவர்கள் யார்?

ராமா: அட முட்டாள்! அது கூடவா தெரியாது? அது தான் பிராமணர்கள், பிராமணர்கள் என்றாலே பூதேவர்கள் தானே? அகராதியைப் பார்.

டேவிஸ்: பிராமணர்கள் என்பவர்கள் என்ன வகுப்பு?

ராமர்: என்ன வகுப்பா நாங்கள் தான்!

டேவிஸ்: நீங்கள் என்றால், நீ அய்யங்கார், அய்யங்கார் தாசனா?

ராமா: நாங்கள் மாத்திரம் அல்ல அப்பா, நாங்களும் அய்யர், ஆச்சாரியார், சாஸ்திரி, சர்மா, தீட்சதர் முதலி யோர்கள்.

டேவிஸ்: அப்படியெனில் பார்பனர்கள் யாவருமே பூதேவர்கள் என்கிறாய்?

ராமா: ஆமாம்! ஆமாம்! கல்லாட்டமா ஆமாம்!

டேவிஸ்: சரி, தொலைந்து போகட்டும். நீங்கள் தேவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தொல்லை கொடுக்க அசுரர், ராட்சதர் ஒருவரும் இந்த உலகத்தில் இல்லையே? இங்கிருப்பவர்களைப் பயப்படுத்த தீபாவளி கொண்டாட வேண்டுமா?

ராமா: இங்கேயா அசுரர், ராட்சதர் இல்லை என்கிறாய்? இந்தக் கருப்புச் சட்டைக்காரர்கள், சு.ம.-க்கள், திராவிடர் கழகத்தார்கள் என்கிறார்களே அவர்களெல்லாம் வேறு யார்? பிராமணர்களைப் பார்த்து பொறாமைப்படு கிறவர்கள், குறை கூறுபவர்கள்; அவர் களைப் போலவே வாழ வேண்டு மென்பவர்கள் வேத சாஸ்திர புராண இதிகாசங்களை பகுத்தறிவால் ஆராய்ச்சி செய்பவர்கள் முதலிய இவர்கள் எல்லோரும் இராட்சதர்கள்! இரக்கமே இல்லாத அரக்கதர்கள்தாம்! தெரிந்ததா? அவர்களுக்கு பயம் உண் டாவதற்காக தேவர்களுக்கு இடையூறு செய் தால் நாசமாய்ப் போய் விடுவாய் என்று அறிவுறுத்துவதற் காகத்தான் தீபாவளி கொண்டாடுவதாகும். இது தான் இரகசியம், மற்ற மூன்று கதை எப்படி இருந்தால் என்ன?

டேவிஸ்: அப்படியா நீங்கள் நூற் றுக்கு மூன்று பேர்; நீங்கள் அல்லாத வர்கள் நூற்றுக்கு 97 பேர். இப்படி எத்தனை நாளைக்கு மிரட்ட முடியும்?

ராமா: அதைப்பற்றிக் கவலைப்படாதே? காங்கிரஸ் ஸ்தாபனம் இருக்கிறது. அந்தத் தொண்ணூற்றேழு பேர் களில் ஒரு பகுதி விபீஷணர்களாக, அனுமார்களாக இருந்து பிராமணத் தொண்டறவும் எதிரிகளை ஒழிக்க பயன்படுத்து வதற்கு மற்றும் பண்டிதர் கூட்டம், படித்துவிட்டு உத்யோகத் துக்கு காத்துக் கிடக்கும் கூட்டம், கோவில் மனுதர்ம ஸ்தாப னத்தில் இருக்கும் கூட்டம், புத்தக நடைக் கூட்டம் பூசாரிக் கூட்டம், பிரபுக் கூட்டம் பாதிரிக் கூட்டம், உயர் பதவி வகிக்கும் உத்தி யோகஸ்தர் கூட்டம் தாசிக் கூட்டம், சினிமா கூட்டம், நாடகப் பிழைப்புக் காரக் கூட்டம், அரசியல் பிழைப்புக் காரக்கூட்டம் இப்படியாக இடறி விழுந்தால் அவர்கள்மீது விழும்படி சர்வம் பிராமண அடிமையா என்பது போல இருக்கும்போது நூற்றுக்கு மூன்று, நூற்றுக்கு 97 என்ற கணக்கு முட்டாள்தனமான கணக்கு ஆகும்.

டேவிஸ்: ஓஹோ! அப்படியா? சரி, சரி. தீபாவளி என்பதன் தத்துவமும் இரகசியமும் தெரிந்து கொண்டேன். நன்றி வணக்கம்.

ராமா: நமஸ்தே, ஜெய்ஹிந்த்!

சித்திரபுத்திரன் என்னும் பெயரில் தந்தை பெரியார் எழுதியது. ‘விடுதலை’ 28.10.1956)


No comments:

Post a Comment