இந்த மூடநம்பிக்கையை விளக்கவே திராவிடர் கழகத்தின் செயல்முறை விளக்க ஏற்பாடு தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 26, 2022

இந்த மூடநம்பிக்கையை விளக்கவே திராவிடர் கழகத்தின் செயல்முறை விளக்க ஏற்பாடு தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 சூரிய கிரகணத்தின்போது உணவு உண்டனர் - கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்

சூரிய கிரகணத்தின்போது சாப்பிட்டாலோ, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வந்தாலோ ஆபத்து என்பது மூடத்தனம்!


சென்னை, அக்.26  சூரிய கிரகணத்தின்போது சாப்பிடுவது கூடாது, கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது என்பதெல்லாம் மூடநம்பிக்கை. அதனை முறியடிக்கவே சூரிய கிரகண நேரத்தில் இங்கு உணவு உண்ண ஏற்பாடு; கர்ப்பிணிப் பெண்கள் வருகை என்பதை எடுத்துக் கூறி, நாடெங்கும் மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் பணிக்கு ஊடகங்கள் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்றார் திராவி டர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சூரிய கிரகணம் குறித்த

மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் நிகழ்வு

நேற்று (25.10.2022) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தின் முன் திறந்தவெளியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற சூரிய கிரகணம் குறித்த மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.

அவரது  சிறப்புரை வருமாறு:

கழகத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர், கழகப் பிரச்சார செயலாளர் மற்றும் இங்கே குழுமியுள்ள அருமை திராவிடர் கழக, பகுத்தறி வாளர் கழக, அதையும்  தாண்டி அறிவியல் மனப்பான்மை உள்ள ஆன்றோர்களே, நண்பர்களே, இந்த அறிவியல்பூர்வமான நிகழ்ச்சியை, தெளிவாகப் படம் பிடிக்கக் கூடிய, செய்தியாக்கக் கூடிய தொலைக்காட்சி ஊடகவியலாளர்களான நண்பர்களே, செய்தியாளர் களான நண்பர்களே, அருமைத் தாய்மார்களே, பெரி யோர்களே, துணிச்சலோடு இங்கே வந்து மூடநம்பிக் கையை நாங்கள் வெறுக்கிறோம் - தன்னம்பிக்கையோடு வாழ்வதுதான் தலைசிறந்த சுயமரியாதை சுகவாழ்வு என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கக் கூடிய கருவுற்ற சகோதரிகளே, அதேபோல, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சூரிய கிரகணம் குறித்த  மூடநம்பிக்கை நிகழ்வில் கருவுற்ற பெண்ணாகப் பங்கேற்று, நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தையைப் பெற்றெடுத்த சீர்த்தி அவர்களே உங்கள் எல்லோருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிற்போக்கின் அடையாளமே 

கிரகண மூடநம்பிக்கை!

நம்முடைய நாடு எவ்வளவு பிற்போக்காக இருக்கிறது என்பதற்கு அடையாளமே, இந்தக் கிரகண மூடநம் பிக்கை.

வேறு எந்த நாட்டிலாவது கிரகணம் அன்று கருவுற்ற தாய்மார்கள் வெளியில் வரக்கூடாது என்று சொல் கிறார்களா? அல்லது அந்நேரத்தில் சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறார்களா?

ஆனால், நம்முடைய நாட்டில்தான், சூரிய கிரகணம் நேரத்தில், சாப்பிடக்கூடாது; குளிக்கவேண்டும் என்றெல் லாம் யார் சொல்வது?

சந்திரன், சூரியன், பூமி மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால் ஏற்படுவதுதான் கிரகணம் என்று சொல்லிக் கொடுக்கிற அறிவியல் ஆசிரியர் - விஞ்ஞானத்தைப்பற்றி பள்ளிக்கூடத்தில் சொல்லிவிட்டு, வீட்டிற்கு வந்து தர்ப் பைப் புல்லை எடுத்துப் போட்டு முழுக்குப் போடுகிறார்.

இரட்டை மனப்பான்மை வைத்திருக்கின்ற மதமோ அல்லது மதத்தை ஒட்டிய மூடநம்பிக்கைகளோ தேவையா?

இதுபோன்ற இரட்டை மனப்பான்மை வைத்திருக் கின்ற மதமோ அல்லது மதத்தை ஒட்டிய மூடநம்பிக் கைகளோ தேவையா என்பதை சிந்திக்கவேண்டும்.

இந்த அறிவைக் கொளுத்தியவர் இந்த நாட்டிலே அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பஞ்சாயத்துப் போர்டிலிருந்து, குடியரசுத் தலைவர் வரை பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அரசமைப்புச் சட்ட நெறிப்படி நாங்கள் எங்களுடைய கடமைகளைச் செய்வோம் என்று உறுதிமொழி எடுக்கின்றனர்.

இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 51-ஏ(எச்)

அந்த அரசமைப்புச் சட்ட நெறியில், 51-ஏ(எச்) என்ற பிரிவில்,

It shall be the duty of every citizen: To abide by the Constitution and respect its ideals and institutions, the National Flag and the National Anthem. To cherish and follow the noble ideals which inspired our national 

‘‘ஒவ்வொரு குடிமகனுடைய கடமை அறிவியல் மனப்பான்மையை. மனப்பாங்கை பரப்பவேண்டும்; கேள்வி கேட்கக்கூடிய சிந்தனையை வளர்க்கவேண்டும்; மனிதநேயத்தைப் பெருக்கவேண்டும்; சீர்திருத்தத்தை நல்ல அளவிற்கு வலியுறுத்தவேண்டும்.''

திராவிடர் கழகம் - தந்தை பெரியார் அவர்களுடைய அமைப்பு மட்டுமே!

இதைத் தொடர்ந்து இந்த நாட்டில் செய்யக்கூடிய ஓர் அமைப்பு இருக்கிறது என்றால், அது திராவிடர் கழகம் - தந்தை பெரியார் அவர்களுடைய அமைப்பு மட்டுமே - அதையொட்டிய முற்போக்குக் கருத்துள்ள வர்கள் இருக்கிறார்கள்.

அன்றாடம் எங்களுக்கு இந்தப் பணியைத் தவிர, வேறு எந்தப் பணியும் கிடையாது. அதில் ஒரு பணிதான், இந்தக் கிரகண மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி!

எந்த அளவிற்கு மக்களை கேலிக்குரியவர்களாக ஆக்கியிருக்கிறது என்றால், இவன், கிரகணத்தைப் பார்த்து பயந்தது மட்டுமல்ல - கடவுளையும் சேர்த்து பயப்பட வைத்தான்.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கக்கூடியவனுக்கு ஏன் இவ்வளவு பயம்?

இன்றைக்குத் திருப்பதி கோவில் உள்பட மூடி வைத்துவிட்டார்கள்.

ராகு, கேது என்கிற பாம்புகள் சந்திரனை விழுங்குது என்றால், ‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன்'' என்றுதான் அங்கே போகிறார்கள்; தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கக்கூடியவனுக்கு ஏன் இவ்வளவு பயம்? ஏன் கதவை சாத்திக் கொண்டி ருக்கிறான்!

இதுபோன்ற கேள்விகளைக் கேட்கவேண்டாமா?

இதுபோன்ற கேள்விகளைக் கேட்டால், உடனே என்ன சொல்கிறார்கள், ‘‘ஆகா, எங்களைப் புண்படுத்தி விட்டார்கள்'' என்கிறார்கள்.

நோய் வந்தால், அந்த நோய்க்குரிய சிகிச்சையை செய்யவேண்டும்!

அட மடையர்களே,  நோய் வந்தால், அடிபட்டு புண் ஏற்பட்டால், அதில் சீழ் பிடித்திருந்தால், அந்தப் புண்ணைக் கீறி, மருந்து போட்டால்தான், நோயாளி காப்பாற்றப்படுவார் - அதுபோன்ற பணியைத்தான் நாங்கள் செய்கிறோம். யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல - யாரையும் கொச்சைப்படுத்துவது எங்கள் நோக்கமல்ல! அறிவியலை நினைத்துப் பார்க்கவேண்டும்.

எதைச் சொல்கின்றோமோ, 

அதை செய்வதுதான் 

திராவிடர் கழகம்!

இன்றைக்கு நாங்கள் இதுகுறித்து பேசும்போது, ‘‘எல்லாம் இவர்கள் சொல்வார்கள்; ஆனால், செய்வார்களா?'' என்று சிலர் புரியாமல் கேட்பார்கள்.

இந்த இயக்கம் எதைச் சொல்கிறதோ, அதைச் செய்கின்ற இயக்கம்; எதைச் செய்கின்றதோ, அதை மட்டுமே சொல்லக்கூடிய இயக்கம்.

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘‘பெரியார்'' திரைப்படமாக வெளிவந்தது. சத்யராஜ் அவர்கள் தந்தை பெரியாராக நடித்த அந்தத் திரைப் படத்தில் ஒரு காட்சி - ஏற்காடு என்ற ஊரில் 

பேசுவார் -

தாழ்த்தப்பட்ட தோழரின் கேள்வி!

அந்தக் கூட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தோழர் ஒருவர் தந்தை பெரியாரைப் பார்த்து, ‘‘ஜாதியில்லை, மதம் இல்லை என்று நீங்கள் சொல் கிறீர்களே, எங்கள் வீட்டில் வந்து சாப்பிடுவீர்களா?'' என்று கேட்கிறார்.

‘‘தாரளமாக சாப்பிடுகிறேன், நாளைக்கே ஏற்பாடு செய்யுங்கள்'' என்று தந்தை பெரியார் சொல்கிறார்.

மறுநாள் அந்தத் தாழ்த்தப்பட்ட தோழரின் வீட்டிற்குச் சென்று சாப்பிடுகிறார்.  மாட்டுக் கொட்டகை - சாணி நாற்றம், அங்கேதான் சாப்பாடு! குழம்பில் அதிகக் காரம், அந்தத் தோழர் வீட்டில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வைத்திருக்கிறார்கள். கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் தந்தை பெரியார் அவர்கள் சாப்பிடுகிறார். ஆரம்ப நிலை, மணியம்மையாருக்குக்கூட அந்த சாப்பாட்டை சாப்பிடுவதில் கொஞ்சம் சங்கடம். ஆனால், அய்யா அவர்கள் அம்மையாரை வற்புறுத்தி அவரையும் சாப்பிட வைக்கிறார்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், தொண்ட ராக இருந்தாலும் சரி, தலைவராக இருந்தாலும் சரி, எதையும் நடத்திக் காட்டக்கூடியவர்கள் நாங்கள்.

இவர்கள் எல்லாம் மேடையில் பேசிவிட்டுச் செல் வார்கள்; அதுபோன்று செய்வார்களா? என்று கேட்பார்கள் சிலர்.

சொந்த மகளையே கொலை செய்யக்கூடிய அளவிற்கு ஒருவனை மிருகமாக மாற்றியிருக்கிறது ஜாதி வெறி!

இன்றைக்கு ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஜாதி மறுப்புத் திருமணம் வேகமாக பரவுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிய வில்லை. அதற்காக கூலிப் படையைத் தேடுகிறார்கள்.

கூலிப் படையைத் தேடி, அவனும் முட்டாளாகி, ஜாதி வெறியனாகி, சொந்த மகளையே கொலை செய்யக்கூடிய அளவிற்கு அவனை மிருகமாகி விட்டிருக்கிறது ஜாதி வெறி.

மூடநம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான்!

ஆகவே, இன்றைக்கு ஏன் நாங்கள் சூரிய கிரகண நேரத்தில் சாப்பிடுகிறோம்? நான் மாலையில், என்னுடைய வயதைக் கருதியும், பழக்க வழக்கத்தைக் கருதியும் சிற்றுண்டியை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், இன்று சாப்பி டுகிறோம் என்றால், மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான். இப்பொழுது சாப் பிட்டதால், நாளைக்குக் காலையில் நன்றாகத்தான் இருப்பேன், நீங்கள் அலுவலகத்தில் வந்து பார்க்கலாம். அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம் உங்களுக்கு.

சுயமரியாதை வாழ்வு - 

சுகவாழ்வு!

எதற்காக?

இந்தக் கொள்கையை  வலியுறுத்துவதற்காக!

ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய முடியுமா?

செய்து காட்டியிருக்கிறோம்.

இந்தக் கொள்கையைத் தொடர்ந்து நடத்த முடியுமா?

நடத்திக் காட்டியிருக்கின்றோம்.

ஆகவே, சுயமரியாதை வாழ்வு - சுகவாழ்வு என்பதற்கு பொருள் இதுதான்.

இந்தப் பணி என்பது எங்களுக்காக அல்ல நண்பர் களே - சமுதாயத்திற்காகத்தான் இந்தப் பணியைச் செய்கின்றோம்.

தீபாவளி பட்டாசு புகையினால் 

காற்றின் மாசுபாடு அளவு அதிகரித்துள்ளது!

நேற்று தீபாவளியை மக்கள் கொண்டாடினார்கள். நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கப்பட்டது. வெடித்த பட்டாசு மூலமாக புகை ஏற்பட்டது.

இன்று தொலைக்காட்சிகளில் ஒரு செய்தி - நிறைய பேர் மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார்கள் என்று.

அதற்குக் காரணம் என்னவென்றால், பட்டாசு புகையினால், காற்று மாசடைந்திருக்கிறது. இவ்வள வுக்கும் பட்டாசு வெடிக்கும் நேரத்தைக் கட்டுப் படுத்தியிருக்கிறார்கள்.

அரைவேக்காடு தலைவர்

‘‘அறிவாளி தலைவர்கள் நம்முடைய நாட்டில் இருக் கிறார்கள்;'' பி.ஜே.பி. தலைவர் ஒருவர் அரைவேக்காடு தலைவர் இருக்கிறார். அவர் என்ன சொல்கிறார் என்றால், ‘‘ஆகா, பட்டாசு வெடிக்கும் நேரத்தை சுருக்கி விட்டார்களே'' என்று சொல்கிறார். அது உச்சநீதி மன்றத்தினுடைய தீர்ப்பு - அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.

ஏனென்று கேட்டால், அறிவியல் அடிப்படையில் வருகிறபொழுது, பட்டாசு வெடிப்பினால் காற்று மாசுபடுகிறது. வெடி சதத்தினால் காது செவிடாகிவிடுவது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.

காற்று மாசு 50 கீழ் இருக்கவேண்டும்; ஆனால், இன்றைக்கு 750, 800 அளவிற்கு வந்திருக்கிறது. அத னால், இன்றைக்குப் பல பேர் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி யாகும்.

இதை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக்கூடிய நண்பர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது - இந்த சமுதாயத்திற்காக - 

மக்களின் நல்வாழ்விற்காக!

எனவே, மூடநம்பிக்கை ஒழிப்பு என்பது ஏதோ திராவிடர் கழகப் பிரச்சாரம் - ஏதோ நாத்திகர்களுடைய பிரச்சாரம் - ஏதோ இவர்களுடைய கொள்கைப் பிரச்சாரம் என்று நினைக்காதீர்கள்.

எங்களுக்காக அல்ல - உங்களுக்காக - இந்த சமுதாயத்திற்காக - மக்களின் நல்வாழ்விற்காக!

அதற்காகத்தான் இதுபோன்ற பணிகளைச் செய் கின்றோம். இன்றைக்குப் பள்ளிக்கூடங்கள் எல்லாம் விடுமுறை. பள்ளிக்கூடங்கள் நடைபெற்று இருந்தால், எங்களுடைய பெரியார் நிறுவனங்களில், இதுபோன்ற சூரிய கிரகணங்கள் வருகிறபொழுது, பல்லாயிரக் கணக்கான பிள்ளைகள், ஆசிரியர்களை அமர வைத்து, நீங்கள் விஞ்ஞானத்தைப் படித்தால் மட்டும் போதாது; கிரகணம் எப்படி ஏற்படுகிறது, அதானல் பயம் இல்லை என்று சொன்னால் மட்டும் போதாது. கிரகண நேரத்தில், எல்லோரையும் சாப்பிட வைப்போம்;  அதனால் பயப் படவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்வோம்.

செய்தியாளர்கள், ஊடகவியலாள நண்பர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களுடைய வருகைக்கு நன்றி.

அதேநேரத்தில், இந்த செய்திகளைப் பரப்புங்கள்; இது எங்கள் விளம்பரத்திற்காக அல்ல; மக்கள் அறிவு பெறுவதற்காக - அரசமைப்புச் சட்டத்தில் எழுதியி ருக்கிறார்களே, ‘‘ஒவ்வொரு குடிமகனுடைய கடமை அறிவியல் மனப்பான்மையை. மனப்பாங்கை பரப்ப வேண்டும்; கேள்வி கேட்கக்கூடிய சிந்தனையை வளர்க்கவேண்டும்; மனிதநேயத்தைப் பெருக்கவேண்டும்; சீர்திருத்தத்தை நல்ல அளவிற்கு வலியுறுத்தவேண்டும்'' இந்த நான்கு அம்சங்களை செய்வதற்கு இன்றைக்கு ஒரு நாளாக நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டோம்.

இதுபோன்ற நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள் ஊடகவியலாளர்களே!

வெறும் திருவிழாக்களையே அதிகமாகக் காட்டி, அதற்கு ரன்னிங் கமாண்டரி, லைவ் செய்கிறவர்கள் - இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் அதேபோன்று செய் திருக்கவேண்டும்.

இதோ வடையை எடுக்கிறார், சாப்பிடப் போகிறார் என்று  சொல்லவேண்டாம். குறைந்தபட்சம் கிரகணத்தின் போது சாப்பிட்டார்; நன்றாக இருக்கிறார் என்றாவது சொல்லவேண்டாமா?

சூரிய கிரகணத்தின்போது 

சாப்பிடக் கூடாது என்பது மூடத்தனம்!

அதேபோன்று கருவுற்ற தாய்மார்களும் சாப்பிட்டார்கள். சென்ற சூரிய கிரகணத்தின்போது சாப்பிட்ட கருவுற்ற பெண், இன்று குழந்தையோடு வந்து சாப்பிடுகிறார். ஆகவே, சூரிய கிரகணத் தின்போது சாப்பிடக் கூடாது என்பது மூடத்தனம் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும் அல்லவா!

மந்திரமா? தந்திரமா? என்று சொல்லும்பொழுது, மந்திரமல்ல, தந்திரம்தான் என்று எடுத்துக்காட்டுகிறோம்.

சத்ய சாய்பாபா என்று ஒருவர் இருந்தார், அவர் கையைத் தூக்கி மோதிரத்தை வரச் செய்வார். நம் மாட்கள் அப்பொழுதே கேட்டார்கள், ‘‘ஏங்க, மோதிரம் வருகிறதே, ஒரு பூசணிக்காயை வரவழையுங்கள் பார்க்கலாம்'' என்று.

ஏனென்றால், பூசணிக்காய் கைக்குள் அடங்காது.

மூடநம்பிக்கை என்பது 

தன்னம்பிக்கைக்கு எதிரானது

எனவே, நண்பர்களே! மூடநம்பிக்கை என்பது தன்னம்பிக்கைக்கு எதிரானது.

தன்னம்பிக்கை வளர்ந்தால், வாழ்க்கையில், தன் னிறைவு ஏற்படும். தன்னிறைவு ஏற்பட்டால், தன்மானம் தானே தழைக்கும்.

எனவேதான், தன்னம்பிக்கை, தன்னம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட மிகப்பெரிய அளவிற்கு தன்னிறைவு. தன்னிறைவும், தன்மானமும் சேர்ந்தால், வாழ்க்கை வளம் பெறும்.

எனவேதான், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற அத்துணை பேருக்கும் நன்றி!

உணவு உண்டவர்கள் அத்துணை பேருக்கும் நன்றி!

குறிப்பாக செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் நண்பர்களுக்கு நன்றி!

இதுபோன்ற நிகழ்வு, அடுத்தமுறை வரும் பொழுது நாடு தழுவிய அளவிற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கவேண்டும். மூடநம்பிக்கைகள் இருக்கக்கூடாது.

மூடநம்பிக்கைக்கு இடமில்லாத விழாக்களாக இருக்கவேண்டும்

பொங்கல் விழாவை நாம் கொண்டாடுகிறோம். பொங்கல் விழாதான் அறிவுப்பூர்வமான விழா - வேளாண் திருவிழா. அந்த விழாவினால், மக்களுக்கு ஒரு புது உற்சாகம், நன்றி உணர்ச்சி போன்ற விழாதான் பொங்கல் விழா - அறுவடைத் திருவிழா.

அவனைக் கொன்றதினால் விழா - 

இவனைக் கொன்றதினால் விழாவா?

ஆனால், திருவிழாக்கள் என்ற பெயராலே,  பண்டி கைகள் என்ற பெயராலே, அவனைக் கொன்றதினால் விழா, இவனைக் கொன்றதினால் விழா என்றுதான் இருக்கிறதே தவிர, வாழ வைத்தார்கள் என்று சொல்லக் கூடிய அளவிற்கு விழாக்கள் இருக்கவேண்டும். மூடநம் பிக்கைக்கு இடமில்லாத விழாக்களாக இருக்கவேண்டும்.

அந்த அளவில், சூரிய கிரகண மூடநம்பிக்கை குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து முடிக்கிறேன்.

வாழ்க பெரியார்!

வீழ்க மூடநம்பிக்கை!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment