"வாழும் வரைக்கும் வள்ளுவம்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

"வாழும் வரைக்கும் வள்ளுவம்"

"வாழும் வரைக்கும் வள்ளுவம்" என்பது - தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் மானமிகு பேராசிரியர் அ. செகதீசன் அவர்களால் எழுதப்பட்ட நூல்.  இந்நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நூலினை வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.

600 பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஆசிரிய விருத்தப்பாக்களால் படைக்கப்பட்டதாகும்.

உலகில் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பைபிள் என்பர்; அது கிறித்தவ மதத்தைச் சார்ந்த புனித நூலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் திருக்குறளோ எந்த மதமும் சாராத உலக மறையாகக் கருதப்படுகிறது.

திருக்குறள் இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டிய நூலாகும். அதன் மூலம் இந்தியா பெருமைப்படும்  - பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் பார்ப்பன மதத்திற்கு எதிராக எழுதப்பட்டதுதான் திருக்குறள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்ற குறள் ஆரிய சனாதன வருணாசிரமத் தன்மையின் வேருக்கு வெந்நீர் ஊற்றுவதாகும்.

நேற்றைய விழாவில் பேசிய அத்தனைப் பேரும் இதனை மய்யப்படுத்தியே பேசினர். திருவள்ளுவர் பற்றி நடக்கும் எந்த நிகழ்ச்சியானாலும் இது தவிர்க்கப்படவே முடியாததாகும்.

'நம்பு - நம்பினால் மோட்சம் - நம்பாவிட்டால் நரகம்' என்று கூறும் பார்ப்பன மதத்துக்கு எதிராக 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்றார் வள்ளுவர். இன்னும் ஒருபடி மேலே சென்று - 'எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு' என்றும் கூறி இருக்கிறார் திருவள்ளுவர்.

புலவர்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருந்த திருக்குறளை மக்கள் மத்தியில்  நடமாடச் செய்தவர் தந்தை பெரியார். திருக்குறளை மலிவு விலையில் அச்சிட்டு மக்கள் மத்தியில் பரப்பியவரும் அவரே!  திருக்குறளுக்காக முதன் முதலில் சென்னையில் மாநாடு நடத்தியவரும் அவரே! (1949 ஜூலை 15,16) அந்த மாநாட்டுக்குப் பெயர் 'குறள் - வள்ளுவர்' (தமிழர் நெறி விளக்கம்) என்பதாகும்.

"எந்த மதத்தினர் என்று கேட்டால் "வள்ளுவர் மதம்" என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால் "குறள் நெறி" என்று சொல்லுங்கள். உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடி விடுவான் - குறளை எவனாலும் மறுக்க முடியாது" என்பார் தந்தை பெரியார் ('விடுதலை' 31.12.1948).

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிடுகையில்,  மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலிலிருந்து முக்கியமான வரிகளை நினைவூட்டினார். "வள்ளுவர் செய் திருக்குறளை  மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி" என்று பாடியதைப் பொருத்தமாக இந்த நூல் வெளியீட்டு விழாவில் எடுத்துக்காட்டினார்.

இதே மேடையில் (பெரியார் திடலில்) கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற விடுதலை சந்தா வழங்கும் விழாவில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மானமிகு ஆ. இராசா எம்.பி. பேசிய பேச்சு பற்றி கழகத் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழரும் குறிப்பிட்டனர்.

மனுதர்ம சாத்திரத்தில் (அத்தியாயம் 8 சுலோகம் 415,417) சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்று சொல்லப்பட்டுள்ளதா இல்லையா? நாங்கள் இந்துக்கள் என்றால் சூத்திரன்தானே, பஞ்சமன்தானே! என்று மானமிகு ஆ. இராசா பேசியதில் என்ன பிழை இருக்கிறது?

இதை வெட்டியும், ஒட்டியும் பார்ப்பன ஏடுகளும், பார்ப்பனர்களும் இன்றுவரை தவறாகப் பிரச்சாரம் செய்வதன் நோக்கம் என்ன?

'ஹிந்துக்கள் எல்லாம் விபச்சாரிகள்' என்று ஆ. இராசா கூறியதாக சொல்வது எத்தகைய பித்தலாட்டம்! பார்ப்பனர்கள் தங்களுக்கே உரித்தான இந்தத் திரிபு வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் அவர்களின் ஆதிக்க ஜாதி உணர்வு, வருணாசிரம உணர்வு என்பன இன்றுவரை மாற்றம் அடையவில்லை என்பதை 'சூத்திர' 'பஞ்சம' மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா!

தமிழ் இலக்கணத்தில்கூட வருணாசிரமத்தை ஆரியம் திணித்துள்ளதை  ஆசிரியர் அவர்கள் அறிஞர் அண்ணாவின் 'ஆரிய மாயை'யிலிருந்து எடுத்துக் காட்டினார்.

"பாட்டியலில் பன்னீராயிரும், முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும் - நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது. ஆரியருடைய பிராமண, சத்திரிய, வைசிய சூத்திர என்ற ஜாதிப் பிரிவுகள் மக்களிடையே நிலவாமல் ஒருக்கால் ஒழிக்கப்பட்டு விடுமோ என்றெண்ணி, நாட்டின் அறிஞர் என்றெண்ணப்படும் புலவர் வழங்கிடும் பாவிலும், எழுத்திலும் வருணப் பொருத்தமாக வகுத்துள்ளனர். ல,வ,ற,ன என்ற நான்கும் வைசிய எழுத்துக்களாம். ழ, ள என்பன சூத்திர எழுத்துக்களாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகிறது. தமிழ் மொழிக்கு சிறப்பாக உள்ள ழ, ற, ன என்ற மூன்று எழுத்துக்களும் வைசிய, சூத்திர இனமாக அமைக்கப்பட்டுள்ளன.

ஆரியரிடமிருந்து பிரித்துக் காட்டக் கூடிய அளவு தனித்து வாழ்ந்த திராவிடர்களைத்தான் ஆரியர் "சூத்திரர்" (தாசி மக்கள்) என்று நான்காம் வருணத்தாராய் வழங்கினர் என்பதன் விளைவிதன்றோ? இவ்விலக்கணத்தை ஒழிக்க விரும்புமறிஞர்கள் இவ்விலக்கணத்தை நிலவிட வைக்க முடியுமா? பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரைஆசிரியப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டுமாம். 

வச்சனாந்தி மாலை என்ற பிற்கால நூல்தான் இவற்றை எல்லாம் கீழ்த்தரமாக வருணாசிரம வெறியால் எழுதிக் குவிக்கிறது.

மனுநீதியைவிடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது? இது மக்கள் மத்தியில் பொசுக்கப்பட்டாலொழிய, திராவிட இன உணர்ச்சியும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அடிப்படைக் கருத்தும் மறுபடியும் நிலவ முடியுமா? ஆரியக் கொள்கைகள் தமிழ் நூல் வடிவில் இருப்பினும் ஆரியர் கையாண்ட தீ வளர்க்கும் வேள்வி முறைக்கே இரையாகப் பலியிடும் நாளே நம்மை நாம் உணர்ந்த நாளாகும்" என்று 'ஆரிய மாயை' என்னும் நூலில் அறிஞர் அண்ணா ஆதாரமாக எழுதியுள்ளார்.

தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர் மானமிகு ஆ. இராசா - அண்ணா எழுதியதைத்தானே சொல்லியிருக்கிறார். சங்கராச்சாரியார் சொன்னதையா எடுத்துக்காட்ட முடியும்?

நூலின் ஆசிரியர் பேராசிரியர் அ. ஜெகதீசன் அவர்களின் ஏற்புரை மிகவும் சிறப்பானது.

"தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் தோன்றியிருக்கா விட்டால் நாங்கள் எல்லாம் படித்திருக்க முடியுமா? எங்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்து நல்ல நிலையை எட்டி இருக்க முடியுமா? இவை எல்லாம் பெரியார் போட்ட பிச்சை அல்லவா! அந்தப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டி ருப்பவர் நமது ஆசிரியர் அவர்கள்தான்" என்றார்.

திருவள்ளுவரைப் பற்றி நூல் எழுதி இருந்தாலும் இன்று வரை நடக்கும். நாட்டு நடப்புகளையும் நூலாசிரியர் எழுதிடத் தவறவில்லை.

தந்தை பெரியார் முதலாக...! 

தந்தை பெரியார் பிறந்தநாள்

தனிச்செப் டம்பர் பதினேழில் 

வந்த வழியே மறக்காத

வார்ப்பி ரும்பே தன்மானம்

முந்தும் இயக்கம் சமுதாய

முற்போக் கெண்ண முன்னேற்றம் 

தந்த கழகம் கொண்டாடும்

சமுக நீதி நாளாக!

சட்ட மன்றில் தமிழ் முதல்வர்

சார்ந்த கொள்கைச் சாசனமாய்

ஒட்டும் உளமாய் வெளியிட்டார்

உறுதி மொழியும் எடுப்பித்தார்! 

வெட்ட வெளிச்சம் தன்மானம்

விரிந்த பெரியார் சுடராக 

நட்ட அண்ணா வழியாக

நடந்த கலைஞர் விழியாக!

ஆட்சி முதன்மை தருவதென

ஆக்கும் படைக்குத் தளபதியாம் 

மாட்சி வீறு மடைதிறந்தார்

மறும லர்ச்சி மனம் கொண்டார் 

தாழ்ச்சி யில்லாச் சமுதாயம்

தலையே நிமிர்ந்து, தாயகத்தில் 

காட்சி கவினாய்த் தமிழாளக்

கால மழையாய்ப் பொழிகின்றார்.

தந்தை பெரியார் தத்துவத்தின் அடிப்படையில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எழுச்சி நடைபோடுவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

குறிப்பாகச் சொல்லப் போனால் நேற்றைய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி பூணூலை அறுக்கச் சொல்லாத  - அதே நேரத்தில் அதன் நாசகார தத்துவத்தை விளம்பும் காலத்தாற் கொண்டு வரப்பட்ட சிறந்த காவியமாகும். 88 ஆண்டு வயதுள்ள பேராசிரியர் மானமிகு அ. செகதீசன் இனவுணர் வோடும், பகுத்தறிவுச் சிந்தனையோடும் சமூகநீதிச் சிந்தனை யோடும் இனிய விருத்தப்பாக்களால் நூல் யாத்திருப்பது சாதாரணமானதல்ல.

தமிழுலகம் அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளது.

நூலாசிரியர் மகளும் ஓய்வு பெற்ற வட்டாட்சியருமான திருமதி. செ.திருமாமணி அவர்கள் நன்றி உரையில் நச்சென்று கூறிய கருத்து சிலிர்க்க வைக்க வேண்டியதாகும்.

'எங்கள் ஊரில் எங்கள் தெருக்களில் சாமி ஊர்வலங்கள் வராது. ஆனால் இனி நாள்தோறும் விடுதலை வீட்டுக்கு வீடு உலா வரும்' என்றாரே பார்க்கலாம்.

தமிழ்நாடே ஆரியூர் ஆனால், அடுத்த நொடியே பெரும் புரட்சி ஏற்பட்டு விடும்.

நூலாசிரியரைப் பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

பெரியார் உலகிற்கு ரூபாய் ஒரு லட்சம் அளித்து, தங்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்தியதும் தனிச் சிறப்பாகும்.



  

No comments:

Post a Comment