சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் காவிகளுக்கு எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போரில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் காவிகளுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாடு பெரியார் மண் - மார்க்ஸ் - அம்பேத்கர் - காமராசர் - அறிஞர் அண்ணா மண்!

இந்த மண்ணைக் காவிமயமாக்க முடியாது! முடியாது!!

இது ஓர் ஒத்திகை, முன்னோக்கு - முடிவல்ல!

சென்னை,எக்.12  தமிழ் மண்ணில் காவிகள் காலூன்ற லாம் என்ற கனவு காணவேண்டாம்; இது பெரியார், மார்க்ஸ், அம்பேத்கர், காமராசர் மண்  என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மனித சங்கிலி அறப்போராட்டம்

நேற்று (11.10.2022) மாலை சென்னை அண்ணா சாலை  சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகே தொடங்கி தேசிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டத்தின் முடிவில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது  பேட்டி வருமாறு:

தமிழ்நாடு பெரியார் மண்!

அன்பார்ந்த அருமை அனைத்துத் தேசிய முற் போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே, மனித சங்கிலியை மிகப்பெரிய வெற்றியாக ஆக்கிய அருமை அனைத்துக் கட்சி முற்போக்குச் சக்திகளே, நண்பர்களே, ஊடகவியலாளர்களே!

தமிழ்நாடு பெரியார் மண்  -

தமிழ்நாடு மார்க்சிய மண் -

தமிழ்நாடு அம்பேத்கர் மண் -

தமிழ்நாடு காமராசர் மண் -

தமிழ்நாடு அறிஞர் அண்ணா மண்-

தமிழ் மண்ணை ஒருபோதும் காவிமயமாக்க முடியாது என்பதற்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இந்த நாட்டில் மதவாதத்திற்கு இடம் தராத மண் தமிழ்நாடு என்பதற்கு இங்கே வாலாட்டக் கூடிய, பாசிச ஆர்.எஸ்.எஸ். மதவாத கும்பலுக்கு இன்றைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த எச்சரிக்கை தமிழ் மண்ணை ஒருபோதும் அவர்கள் காவிமயமாக்க முடியாது என்பதற்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை!

குறுகிய காலத்தில், அத்துணைத் தலைவர்களுடைய அழைப்பை ஏற்று, இன்றைக்குத் தமிழ்நாடு முழுக்கத் திரண்டிருக்கின்ற அத்துணைப் பேருக்கும் இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலிப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது மட்டுமல்ல - இதுதான் ஒரு பாதுகாப்பு அரண். இதுவேதான் நச்சுக் கிருமிகள் இங்கே உள்ளே நுழைந்து, தங்களுடைய மதவாதத்தை, மதவெறியைக் கிளப்பாமல் தடுத்து,  மனிதநேயத்தைக் காப்பாற்றி, அமளிக்காடாக்க நினைக்கக்கூடிய அந்த முயற்சியைத் தோல்வியுறச் செய்து, முறியடிக்கக் கூடிய மகத்தான முதல் கட்டம் இது.

இது தொடக்கம் - இது முடிவல்ல!

இந்தப் படை எப்போதும் திரளும்! திரளும்!! 

என்று எச்சரிக்கை செய்கிறோம்!

இப்படிப்பட்ட மனித சங்கிலிகள் ஒவ்வொரு நகரத் திலும், ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு கிராமத்திலும், அனைவராலும் எப்படி ஒரு தீயணைப்புப் படை வேலை செய்கிறதோ, உயிருக்குப் பயப்படாமல், எப்படி உள்ளே நுழைய முடியாத இடத்திலும் நுழைகிறதோ - அதுபோல, இந்தப் படை, இன்றைக்குத் திரண் டிருக்கின்ற படை எப்போதும் திரளும்! திரளும்!! என்று எச்சரிக்கை செய்கிறோம்!

ஒத்துழைத்த அத்துணைப் பேருக்கும் நன்றி!

தலைவர்களுக்கும் நன்றி!

மக்களுக்கு நன்றி!

ஊடகவியலாளர்களுக்கும் நன்றி!

இனி வரப்போகின்றவர்களுக்கு இது ஓர் எடுத்துக் காட்டு!

வால் அறுப்போம்! வால் அறுப்போம்!!

இது ஒரு முன்னோக்கு!

இது ஓர் ஒத்திகை!

இதுவே முடிவல்ல - தொடரட்டும்!

வால் அறுப்போம்! வால் அறுப்போம்!

மதவாத, மதவெறிக் காவிகளின்

வால் அறுப்போம் என்பதைக் கூறி முடிக்கின்றேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.


No comments:

Post a Comment