நரபலிக் கொடுமைக்கு முடிவே இல்லையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 18, 2022

நரபலிக் கொடுமைக்கு முடிவே இல்லையா?

 குஜராத் மாநிலம் சோம்நாத் பகுதியை அடுத்துள்ள தாரா கிர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 14 வயது சிறுமி. சூரத் நகரில் பள்ளியில் படித்து வந்த சிறுமியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் மதிய நேரத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இதையடுத்து சிறுமி பள்ளி செல்லவே இல்லை. பின்னர் பெற்றோர் தங்களது மகளை கொன்று விட்டதாக காவல்துறைக்கு இரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெற்றோரிடம் விசாரிக்கையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரிக்கையில் அவர்களுக்கு பண நெருக்கடி இருந்ததால் - தங்கள் மகளை நரபலி - கொடுத்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இதுபோன்று பணப் பிரச்சினை இருந்தால், பெற்ற மகளை நரபலி கொடுத்தால், பண நெருக்கடி தீரும் என்ற நம்பிக்கையில் அவர்கள் சிறு மகள் என்றும் பாராமல் பலி கொடுத்ததாகக் காவல்துறையினர் கூறினர்.

 கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு இரு பெண்களை செல்வம் வரவேண்டும் என்ற காரணத்திற்காக நரபலி கொடுத்த நிலையில் அதே காரணத்திற்காக குஜராத்தில் தங்கள் மகளையே நரபலி கொடுத்த நிகழ்வு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது

 உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி திடீரென்று காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காணாமல் போன சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு காட்டுக்குள் காணாமல் போன 10 வயது சிறுமி ஆடையில்லாத நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் உடல் இருந்த இடத்திற்கு அருகில் மாலைகளும், சில பூஜைப்பொருள்களும் கிடந்துள்ளன. இதனால்  நரபலிக்கான பூஜை செய்து பிறகு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

கடந்த ஆண்டு இதே உத்தரப்பிரதேசத்தில் மகளுடன் சென்ற தாய் கோவிலுக்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மண் வெட்டியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கோவில் பின்புறம் புதைக்கப்பட்டார். இதுவும் கடவுள் கனவில் வந்து நரபலி கொடு என்று கூறியதால் செய்ததாக குற்றவாளி வாக்குமூலம் கூறியுள்ள நிலையில் - அதே போல் தற்போது 10 வயது சிறுமியும் கொலை செய்யப்பட்டுள்ளார். கேரளா, குஜராத் அதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் நரபலி தொடர்கதையாகி உள்ளது.

'பாரத் மாதாகீ ஜே!' என்று கோஷம் போடுவதாலும், ராமன் கோயில் கட்டுவதாலும் இந்தக் கொடுமைக்கு முடிவு ஏற்படுமா?

ஹிந்து மதத்தைப் பற்றி வாய்க் கிழியப் பேசும் காவிக் கூட்டம், ஹிந்து மதத்தின் இக்கொடிய நம்பிக்கைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

கடவுள் உயிர்ப் பலி கேட்கிறதா? இன்றைக்குக் கோமாதா பற்றி கசிந்து உருகும் ஹிந்துத்துவவாதிகள் பசுக்களை எல்லாம் கொன்று யாகம் நடத்திய வரலாறு எல்லாம் தெரியுமா?

"மத விசாரணை" என்னும் நூல் - சுவாமி சிவானந்த சரஸ்வதியால் எழுதப்பட்டது. அதில் 30 வகையான யாகங்கள் குறிப்பிடப்படுகின்றன (பக்கம் 78 - 80)

கோஸவம் - பசு மாட்டைக் கொல்லும் யாகம்.

அஷ்டதச பசுவிதானம் - பதினெட்டுப் பசுக்களைக் கொலை செய்து நடத்தும் யாகம்.

ஏகாதசீன பசுவிதானம் - பதினொரு பசுக்களைக் கொல்லும் யாகம்.

இதோடு நின்றுவிடவில்லை. அடுத்துச் சொல்லப் போவதுதான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான யாகம் அதன் பெயர் - புருஷயஜ்ஞ - மனிதனைக் கொன்று நடத்தும் யாகம்!

எவ்வளவுக் கொடூரர்கள் இந்த வேதப் பார்ப்பனர்கள் - இதனுடைய தொடர்ச்சிதான் இந்த நரபலியும்.

இந்த யோக்கியதையில் உள்ள மதத்தின் பெயரால்தான் (ஹிந்து ராஜ்ஜியம்) அமைக்கப் போகிறார்களாம்! வெட்கக் கேடு!!

 


No comments:

Post a Comment