புரட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 19, 2022

புரட்டுப் பிரச்சாரத்தை முறியடிப்போம்!

88 ஆண்டு வரலாறு படைத்த 'விடுதலை' நாளேட்டுக்கு 60 ஆண்டு காலம் ஆசிரியராக அரும்பணியாற்றிய மானமிகு கி.வீரமணி அவர்களுக்குப் பாராட்டு விழாவும், 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவும் கடந்த 6ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது.

அவ்விழாவில் பங்கேற்று, திமுக துணைச்  பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மானமிகு 

ஆ. இராசா அவர்கள், திராவிட இயல் சித்தாந்தப் பார்வை யிலும், தந்தை பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கப் பார்வையிலும் அரியதொரு உரையை நிகழ்த்தினார்.

குறிப்பாக 'ஹிந்து' என்ற போர்வையில் இன்று வரை வருண தருமத்தை நிலை நிறுத்தும் வகையில் ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்றும், ஒரே மதம் தான் இந்தியாவின் மதம் என்றும் பிரதமர் உள்பட சங்பரிவார் கூட்டம் பேசி வருவதற்கு அறிவார்ந்த முறையில், ஆதாரத்துடன் பதில் அளித்து உரையாற்றினார் மானமிகு ஆ. இராசா அவர்கள்.

குறிப்பாக நாம் நம்மை ஹிந்து என்று ஒப்புக் கொண்டால், வருண தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். வருண தர்மத்தை ஏற்றுக் கொண்டால், பார்ப்பனர் அல்லாதவர்கள் தங்களைச் சூத்திரர்கள் என்று ஒப்புக் கொ£ள்ள வேண்டும். இவற்றை எல்லாம் ஒப்புக் கொண்டால் மனுதர்மத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். மனு தர்மத்தை ஏற்றுக் கொண் டால் அதன் 8ஆம் அத்தியாயம் 415ஆம் சுலோகத்தையும் ஒப்புக் கொண்டாலும் அதன்படிப் பார்த்தால் சூத்திரர்கள் என்று அது வரையறுத்ததையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

"யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், - பக்தியினால் வேலை செய்கிறவன் - தன்னுடைய தேவடியாள் மகன் - விலைக்கு வாங்கப்பட்டவன் - குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன் - குற்றத்திற்காக வேலை செய்கிறவன் - என சூத்திரன் ஏழு வகைப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

ஹிந்து மதத்தின் உன்னத நூல் என்று கூறப்படும் மனுதர்மத்தில்  இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இழிவுபடுத்தப்படுவதை எடுத்துக் காட்டினால் அது குற்றமாம்!

அப்படியென்றால் இந்த 2022லும் இந்த நிலையை நிலை நிறுத்தத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று தானே பொருள்.

ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கூட்டம் பிஜேபியினர், மானமிகு ஆ. இராசா அவர்கள் கூறிய உண்மையை  தலை கீழாகப் புரட்டி ஹிந்துக்களை வேசி மக்கள் என்று 

ஆ. இராசா கூறி விட்டார் என்று சுவரொட்டி அடித்து ஒட்டுவது எத்தகைய போக்கிரித்தனம் - அயோக்கியத்தனம்!

இன்னும் நம் மக்கள் ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்று நினைப்பா?

நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்களாம்! கட்சி வளர்க்க குறுக்கு வழியா?

எதற்காக? இருந்தால் நீ சூத்திரனாக இரு, வைப்பாட்டி மகனாக இரு - இல்லாவிட்டால் எதிர்வினையாற்றுவோம் என்று சொல்லுகிறார்கள் என்றால், மானமுள்ள தமிழர்கள் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமா?

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி' என்று சுயமரியாதை இயக்கம் குரல் கொடுத்ததுண்டு, அதனை மீண்டும் புதுப்பிக்கும் இடத்திற்குப் பார்ப்பனர் அல்லாத மக்களைத் தள்ளுவதற்கு முயற்சிக்கிறார்களா?

அப்படியே பார்க்கப் போனாலும் ஹிந்து மதம் தமிழர்களுக்கானதா? ஹிந்து மதத்துக்கும் தமிழர்களுக்கும் எந்த வகையில் உறவு!

கடவுள் நம்பிக்கையாளர்களான மறைமலை யடிகளும், கா.சு. பிள்ளையும், நாவலர் சோமசுந்தர பாரதியும், தமிழர் மதம் என்று அதை எந்நிலையிலும் ஏற்றுக் கொள்ள வில்லையே!

தந்தை பெரியார் 144ஆம் ஆண்டு பிறந்த நாள் நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. இளைஞர்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

இதனைப் பொறுக்க மாட்டாத அனுமார் தமிழர்கள் சிலர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சுவரொட்டியைக் கிழிப்பது அந்தச் சுவரொட்டிமீது மோடி பிறந்த நாள் (புது அவதாரம்) சுவரொட்டிகளை ஒட்டுவதை எல்லாம் காவல்துறை எப்படி அனுமதிக்கிறது?

நடப்பது 'திராவிட மாடல் அரசு' என்று தெரிந்திருந்தும் இவை நடக்கின்றன என்பது நல்லதல்ல! ஆட்சி மாறினாலும் சில இடங்களில் அதிகாரிகளின் மனப்பான்மை மாற வில்லையோ! 


No comments:

Post a Comment