அரசுக் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்காக வயது வரம்பு தளர்வு! அர்ச்சக மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

அரசுக் கோயில் அர்ச்சகர் நியமனத்திற்காக வயது வரம்பு தளர்வு! அர்ச்சக மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கை வெற்றி

அர்ச்சகப் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா. ரெங்கநாதன் அறிக்கை

தந்தை பெரியாரால் தொடங்கப் பெற்று, கலைஞரால் சட்டமாக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் நடைமுறைப்படுத்தப்பட்ட அனைத்து இந்துக்களையும் அரசுக் கோயில்களில் அர்ச்சகராக்கும் வரலாற் றுப் பணியில் மற்றொரு மணிமகுடம் சூடப்பட்டுள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியான 2007-இல் அனைத்து ஜாதி அர்ச்சகர் திட்டத்தில் படித்து 207 மாணவர்கள் தீட்சை பெற்றோம்.ஆனால் பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் பெற்ற  தடையால் கோயில்களில் பணிநியமனம் பெற இயலவில்லை.

அதன்பின் பல்வேறு சட்ட - களப் போராட்டங்கள் நடந்தாலும் அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் நியமனத்திற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை.அதன் பின் வந்த திமுக ஆட்சியில் முறையாகப் படித்து சான்றிதழ் பெற்ற பார்ப்பனர்கள் உட்பட  அனைத்து இந்துக்களுக்கும் பணிநியமனம் வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி திட்டமிட்டு செய்த தாமதத்தினால் பணி நியமனத் திற்கான வயதினை பலரும் கடக்க நேரிட்டது. முறையான தகுதி இருந்தும், அதிமுக அரசின் தவறால் பணிநியமன வாய்ப்பு மறுக்கப்பட்ட எங்களுக்கு,  பணிநியமன வயது வரம்பை தளர்த்தி மீண்டும் வாய்ப்பு வழங்க தமிழ்நாடு முதலமைச் சரிடம் கோரிக்கை வைத்தோம்.

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு முதலமைச்சரும் எங்கள் கோரிக்கை வெறும் வேலை வாய்ப்பு மட்டுமல்ல , தமிழர்கள் மீது ஆரியம் சுமத்திய கருவறை தீண் டாமையை அகற்றும் அரியபணி என்பதை நன்கறிந்து, செப்.2,2022 அன்று அரசாணை எண் .219 மூலம் அர்ச்சக பணியாளர் பணிநியமன வயது வரம்பை தளர்த்தி உத்தர விட்டுள்ளார். இந்துக்களுக்கான கட்சி என்று பேசும் பா.ஜ.க போன்ற கட்சிகள் செய்யாததை, அனைத்து இந்துக் களையும் சமமாகக் கருதும் திராவிட முன்னேற்றக் கழகம் செய்கிறது.

அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்மூலம் நெருக்கடிக்கு உள்ளான நிலையிலும் இறைவன் பணியில் சமத்துவத்தை நிலைநாட்டும் இந்த அரசாணையை எங்களது சங்கம் மனமார வரவேற்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறநிலை யத்துறை அமைச்சர், ஆணையருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக நியமிக்கும் வரலாற்றுக் கடமையை தமிழ் நாடு முதலமைச்சர் தொடர வேண்டும், காவி சிந்தனை செல் வாக்கிலுள்ள நீதி மன்றங்களின் நெருக் கடிகளை  சட்டரீதியாக உடைத்தெறிய வேண்டும் எனக் கோருகிறோம்.

செப்டம்பர் 17 சமூகநீதி நாள்! தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

*ஜாதித் தீண்டாமை ஒழிக!

*பெண்ணடிமைத்தனம் ஒழிக!

*ஆணாதிக்கம் ஒழிக!

*கருவறைத் தீண்டாமை ஒழிக!

*பார்ப்பனியக் கொடுங்கோன்மை ஒழிக!

அனைத்து மக்களுக்கும் சொந்தமான கோவில்களில் பார்ப்பனர்களைத் தவிர பிற ஜாதியினர்களை அர்ச்சகராக விடா மல் தடுக்கும் ஆகமம் மற்றும் மனுதர்ம ஜாதித் தீண்டாமைக்கு முடிவுகட்டுவோம்!

பெரியார் நெஞ்சில் தைத்த சனாதன முள்ளை நிரந்தரமாக அகற்றுவோம்!

கருவறையில் ஜனநாயகத்தை நிலை நாட்ட, பார்ப்பன பாசிச சக்திகளை முறி யடிப்போம்!

அர்ச்சக மாணவர்களே!

சனாதன கும்பல்களின் உருட்டல் மிரட்டல்களுக்கு அஞ்சாமல். தமிழ்நாடு அரசு, ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்களின் துணையோடு இறுதிவரைப் போராடுவோம்! சமூகநீதி நாளான தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

தந்தை பெரியார் பிறந்த நாளில் கருவறை தீண்டாமையை முற்றிலும் அகற்ற தமிழ்நாட்டு மக்கள் உறுதியேற்க வேண்டும், அனைத்து கோயில்களிலும் தமிழ், தமிழர்கள் அர்ச்சனையை பொது மக்கள் கோர வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment