"நாம் அனைவரும் ஹிந்துக்களா?" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

"நாம் அனைவரும் ஹிந்துக்களா?"

ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் "நமது சமூகத்தை ஒழுங்கமைப்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் ஆகும். அதன் மூலமே இந்தியா முழு வளர்ச்சி அடையும். சுயநலத்தை தியாகம் செய்து விட்டு நாட்டுக்காக தியாகம் செய்வதற்கே ஆர்.எஸ்.எஸ். கற்றுக்கொடுக்கிறது. ஹிந்து மற்றும் இந்தியா என்பது ஒரே மாதிரியான புவியியல் கலாச்சார அடையாளம் ஆகும். எனவே நாம் அனைவரும் ஹிந்துக்கள்தான்" என்று பேசி இருக்கிறார்.

நாம் அனைவரும் என்கிறாரே ஆர்.எஸ்.எஸ். தலைவர், 'அனைவரும்' என்பதில் யார் யாரெல்லாம் அடங்குவர் என்பதை விவரமாகத் தெரிவித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதை அவர் மட்டுமல்ல - ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்காரர்களும் விவரமாகக் கூற மாட்டார்கள்.

அப்படி விவரமாகச் சொன்னால் சிக்கலில் மாட்டிக் கொள்வார்கள். சேரிப் பகுதியில் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களே அவர்களும், மாம்பலம், மயிலாப்பூர்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும் ஒரே அளவிலான ஹிந்துக்கள் தானா?

சேரி வாழ் மக்கள் கல்வியிலும், சமூகநிலையிலும் தாழ்ந்து கிடப்பதற்கான காரணத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லுவாரா?

கல்வி நிலையில் கடை மட்டத்தில் கிடந்து உழல்வதற்குக் காரண கர்த்தா யார்? இது அவாளின் தலையெழுத்து என்று சொல்லுவதுதானே ஹிந்து  மதம். கர்மா தத்துவம் தானே ஹிந்து மதத்தின் அடிநாதம்.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அவர்கள் மேலே வர வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஒரு சுண்டு விரலை அசைத்திருப்பார்களா?

அவர்களும் ஹிந்துக்கள் தான் - அவர்கள் ஹிந்துக் கோயில்களில், உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராகலாம் - அதற்கு நாங்கள் தடையாக இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லட்டுமே பார்க்கலாம்.

குடியரசுத் தலைவராக இருந்த மாண்பமை ராம்நாத் கோவிந்த் பூரி ஜெகந்நாதன் கோயிலிலும், பிர்மா கோயிலிலும் நுழைய தடை செய்யப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ன செய்துகொண்டு இருந்தார்? குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது தெரிவித்தது உண்டா?

சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் ஆவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் ஒரு குமாஸ்தாவாக ஒரே ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை நியமிக்கத் தயாரா?

காஞ்சி சங்கர மடத்துக்கு சூத்திரர் பொன். ராதாகிருஷ்ணன் (ஒன்றிய அமைச்சர்) சென்றபோது தரையில் உட்கார வைக்கப்பட்டது ஏன்? 

அதே நேரத்தில் சுப்பிரமணியசாமி என்பவர் காஞ்சி மடம் சென்றபோது சங்கராச்சாரியாரோடு சரி சமமாக ஆசனத்தில் அட்டகாசமாக அமர்ந்தது ஏன்?

முன்னவர் 'சூத்திரர்' - பின்னவர் 'பிராமணர்' என்ற பேதம் தானே! இந்த இலட்சணத்தில் நாம் எல்லோரும் ஹிந்துக்கள் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுவதற்கு வெட்கப்பட வேண்டாமா?

ஹிந்து என்று பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் ஒப்புக் கொண்டால், அவர்கள் சூத்திரர்கள் தானே. சூத்திரன் என்றால் மனுதர்மம் என்ன சொல்லுகிறது என்பதை மீண்டும் மீண்டும் விளக்க வேண்டுமா?

பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் மனு தர்மத்தையும், கீதையையும் கிழித்து எறிய தயார்தானா?

சூத்திரன் சம்பூகனைக் கொன்ற வருணா சிரமவாதி ராமனுக்குக் கோயில் கட்டுவது எந்த அடிப்படையில்?

கேள்விகள் அடுக்கடுக்காக உண்டு. ஆர்.எஸ்.எஸ். தலைவர் யாரை ஏமாற்றிட ஹிந்து கோஷம் போடுகிறார்?

அது தமிழ்நாட்டில் மட்டும் எடுபடாது. தந்தை பெரியார் பிறந்த இந்தத் திராவிடப் பூமியின் எழுச்சித் தீ கூடிய சீக்கிரம் வடக்கேயும் பரவும்போது அப்பொழுது தெரியும் அவர்களின் ஓலம்!

No comments:

Post a Comment