அருமைத் தோழர்களே!
நம் வாழ்விலே ஒரு திருநாள் வரும் 6ஆம் தேதி செவ்வாய்க்கிழமை
நமது ஒப்பருந் தலைவர் - கழகத் தலைவர் - தமிழர் தலைவர் 88 ஆண்டு 'விடுதலை'க்கு 60 ஆண்டு சாதனைக்குரிய ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்களிடத்திலே - நமது கருஞ்சட்டைத் தோழர்களின் கடும் உழைப்பால் திரட்டப்பட்ட 'விடுதலை' சந்தாக்களை வழங்கும் விழா!
நமக்குப் பண்டிகைகள் ஏது - திருவிழாக்கள் தான் ஏது?
நம் இனத்தின் பேரரண் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளைத் தானே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் - அதுவும் ஆண்டு முழுவதும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் - கொள்கை விழாவாக - கோட்பாட்டு விழாவாக!
தமிழினப் பண்பாடு என்னும் பாட்டையில் பொங்கல் விழாவைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
இப்போது வரும் 6ஆம் தேதி நாம் நடத்தவிருக்கும் விழா - தமிழர்களின் உரிமை மூச்சுக் காற்றாம் 'விடுதலை' சந்தா வழங்கும் விழா!
ஏன் இந்த சந்தா? ஏன் 'விடுதலை' பரவ வேண்டும்? நம்மினத்தின் உரிமையைக் காக்க இது ஒன்றுதானே போராயுதம்!
நம் இனத்தின் சுயமரியாதைக் கேடயம் இந்த ஏடுதானே!
நம் மக்களுக்குக் கல்வி உரிமையும், உத்தியோகக் கதவு திறப்பும் கிடைத்திட கிளர்ந்தெழச் செய்யும் கேடயம் இந்த விடுதலை தானே.
மனிதக் கூறின் சரி பகுதியான பெண்களைப் பிறப்பிலேயே அற்பப் பிறவியாகக் கூட்டி ஒதுக்கியதே வைதிகம் - அந்த வைதிகத்தின் விலா எலும்பை நொறுக்கி ஆணுக்கு நிகர் பெண்கள் என்று முழங்கும் பேரிகைதானே 'விடுதலை'.
எவ்வளவோ சொல்லலாம் - எழுதலாம் - ஏடு கொள்ளாது- நேரமும் அனுமதிக்காது.
'விடுதலை' இன்றேல் கெடுதலையே! அந்த விடுதலை ஒவ்வொரு தமிழன் கையிலும் போய்ச் சேர்வதுதான் நம் இனத்திற்கான உண்மை 'விடுதலை'
எனவேதான் சந்தா அளிப்பு என்பதை ஒரு விழாவாக எடுக்கிறோம்.
'விடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்களே ஊர் ஊராகச் சுற்றி சந்தாக்களை சேகரித்த வரலாறு உண்டு.
60 ஆண்டுகளாக 'விடுதலை'யின் ஆசிரியராக அயராது பணியாற்றும் நமது ஆசிரியருக்கு இப்பொழுது நாம் விடுதலை சந்தாக்களைக் கொடுக்கிறோம்.
முதல் அமைச்சரே 'விடுதலை'க்குச் சந்தா அளித்து துவக்கி வைக்கிறார். காரணம், நமது முதல் அமைச்சரின் தந்தையார் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் "நான் முதலில் படிக்கும் ஏடு விடுதலை - நமக்கு வேதம் விடுதலை ஏடே" என்று கூறியதுண்டே!
அத்தகையவரின் மகனார் - இன்றைய முதல் அமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சந்தா சேகரிப்பைத் தொடங்கி வைப்பது என்பது தானே சரியான பொருத்தம்.
நம் தோழர்களின் உழைப்பை எடை போட எந்தத் தராசும் கிடையாது. மிட்டா மிராசுகள் அல்ல.
அடித்தட்டு மக்கள் - நடுத் தட்டு மக்கள் என்று சொல்லும் கொள்கை என்னும் பெரும் செல்வம் படைத்த தீரர்களின் பாசறைதான் திராவிடர் கழகம்.
அவர்களிடம் உள்ளது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு - ஆர்வமிக்க செயல்பாடு - அப்பழுக்கற்ற பொதுத் தொண்டு - தொண்டறம் பேணும் தூயமலர்கள்! அவர்கள் தேனீக் களாகச் சுற்றித் திரிந்து திரட்டிய 'விடுதலை' சந்தாக்களை நமது ஒப்பற்ற தலைவரின் கரங்களில் ஒப்படைக்க உள்ளனர்.
இதுதானே திருவிழா. அதுவும் கொள்கைத் திருவிழா!
அந்தத் திருவிழாவில் பங்கேற்பதைவிட நமக்குப் பெரு மகிழ்ச்சி வேறு ஏது? வராமல் இருப்போமா? வராமல் இருக்க வீட்டில்தான் தறி கொடுக்குமா?
வாருங்கள் தோழர்களே! வாருங்கள்! குடும்பம் குடும்பமாய் வாருங்கள்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நமது கழகத்தின் அருமையை, பெருமையைக் காட்டுவோம். கூடுங்கள்! கூடுங்கள்!
நமது உற்சாகப் பெரு வெள்ளம் நமது தலைவரை இளமையாக்கும் - ஆயுளை நூற்றாண்டு உச்சிக்கும் மேலாகக் கொண்டு செல்லும். கழகக் குடும்பங்களை நேரில் காணத் தவித்துக் கொண்டிருக்கிறார் நம் தலைவர் வாரீர்! வாரீர்!! வற்றாப் பெரு நதியாய் வாரீர்! வாரீர்!!
No comments:
Post a Comment