உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு யதேச்சதிகாரமானதாகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

உயர் ஜாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு யதேச்சதிகாரமானதாகும்

(16-9-2022 நாளிட்ட 'தி ஹிந்து' ஆங்கில நாளிதழின் தலையங்கம்)

அரசுப் பணி மற்றும் கல்வி நிறுவனங்களின் சேர்க்கையில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் நீங்கலான உயர்ஜாதியினரில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள 10 சதவிகித மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் 103 ஆவது அரசமைப்பு சட்ட திருத்தத்தின் செல்லும் தன்மை பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் அவர்களின் தலைமையிலான அரசமைப்பு சட்ட அமர்வு ஒன்று இப்போது பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது. இந்த விசாரணைக்கு அமர்வு தேர்ந்தெடுத்துள்ள மூன்று பிரச்சினைகள் 

(1) குறிப்பிட்ட விதிகளை அரசு உருவாக்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதா அரச மைப்பு சட்ட அடிக் கட்டுமானத்தைக் குலைப்பதாக உள்ளதா?

(2) இந்த இட ஒதுக்கீட்டில பிற்படுத்தப்பட்ட தாழ்த் தப்பட்ட பழங்குடி மக்கள் சேர்க்கப்படாமல் தனிமைப் படுத்தப்பட்டிருப்பது அரசமைப்பு சட்ட அடிக் கட்டுமானத்தைக் குலைப்பதாக உள்ளதா? 

(3) அரசு உதவி பெறாத தனியார் கல்வி நிறுவனங் களின் மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை இந்த சட்டத் திருத்தம் அரசமைப்பு சட்ட அடிக் கட்டு மானத்தைக் குலைப்பதாக உள்ளதா? 

இவை தகுதி வாய்ந்த கேள்விகளாகும். இதில் பின்பற்றப்பட வேண்டிய நியதிகளைப் பற்றி உரிய கவனம் எடுத்துக் கொள்ளப்படாமல் அவசரம் அவசரமாக இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது என்று வாதாடவும் இயலும். 

எடுத்துக் காட்டாக பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ள உயர்ஜாதியினரின் ஆண்டு வருமான உச்ச வரம்பை 8 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப் பட்டிருப்பது பிரச்சினைக்கு உரியது என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறலாம். 2011-2012 ஆண்டு மக்களின் நுகர்வோர் குடும்ப செலவு அறிக்கையை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் ஆண்டு வருவாய் 8 லட்ச ரூபாய்க்கும் குறைவாக உள்ள 10 சதவிகித உயர்ஜாதியினரில் உண்மையில் இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பெரும்பகுதியினர் இட ஒதுக்கீட்டுக்கு தகுதி பெற்றவர்களாக இருக்கின்றனர் என்பதைக் காணலாம். இந்த உச்ச வரம்பு நியாயமானது என்று அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழு  தெரிவித்துள்ளது என்றாலும் பிற்படுத்தப்பட்ட பிரிவு நிர்ணயிக்கப்பட்ட க்ரீமி லேயர் போல் இந்த  8 லட்சம் ரூபாய் உச்ச வரம்பை விட மிகவும் கடுமையானதாக ஏன் இருக் கிறது என்பதை போதுமான அளவில் அது விளக்க  வில்லை. மேலும் உயர்ஜாதி மக்கள் தொகையில் பொருளாதார நிலையில் பின்தங்கிய இடஒதுக் கீட்டுக்கு தகுதி பெற்றவர்களின் உத்தேசமான எண்ணிக்கையுடன் எந்தப் புள்ளி விவரங்களும் ஒத்துப் போகவில்லை.

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களில் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளவர்களில 10 சதவிகித அளவில் பொதுப் பிரிவில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப் படாமல் மறுக்கப்படுவதும் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு உயர்ஜாதியினருக்கு மட்டுமே ஆனது என்பதும்தான் இதன் ஒட்டு மொத்த பாதிப்பாக இருக்கும் என்று மனுதாரர்கள் வாதாடவும் கூடும். இது ஒரு நியாயமான தகுதி உடைய வாதமாகும். இது வரை சமூகம் மற்றும் கல்வி அளவில் பின்தங்கியிருந்தவர்களுக்கு மட் டுமே அளிக்கப்பட்டு வந்த அரசமைப்பு சட்டத்தின்படி யானதும் பல தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டதுமான இட ஒதுக்கீடு அல்லாமல் பொருளாதார அளவுகோ லின்படியும் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை உச்ச நீதி மன்றம் ஏற்றுக் கொண்டாலும் கூட இந்த பயன்பாட்டைப் பெறுவதில் இருந்து சில குறிப்பிட்ட சமூக மக்கள் பொருளாதார அளவு கோலின்படி பின்தங்கியவர்களாக இருந்த போதிலும் நீக்கப்பட்டு அவர்களுக்கு இந்தப் பயனை மறுக்கும் சட்டம் மக்களைப் பாகுபடுத்திக் காண்பதே ஆகும்.

அண்மையில் நடைபெற்ற ஒன்றிய அரசுப் பணி தேர்வாணையம் மற்றும் ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளிலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 'கட்ஆப்' மதிப்பெண்ணை விட பொருளாதார அளவுகோலின்படி தேர்வான மக்களின் 'கட்ஆப்' மதிப்பெண் குறைவாகவே இருந்தது. ஒட்டு மொத்தமாகக் கூறுவதானால் பொருளாதார அளவில் பின்தங்கியவர்களைத் தேர்ந்து எடுப்பதற்கு வருவாயை மட்டுமே அளவு கோலாக எடுத்துக் கொண்டால் 8 லட்ச ரூபாய் என்பது போன்று இல்லாமல் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்ட ஒரு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும். அத்துடன் எந்த ஜாதியினராக இருந்தாலும் சரி சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும்  இந்த பொருளாதார அளவிலான இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு கட்டாயமாக அளிக்கப்படவே வேண்டும்.

நன்றி: 'தி இந்து' 16-9-2022

தமிழில் : த.க. பாலகிருட்டிணன்


No comments:

Post a Comment