அம்மனின் சக்தி இவ்வளவுதான்! அம்மன் கழுத்திலிருந்த தாலிச்சங்கிலி திருட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 9, 2022

அம்மனின் சக்தி இவ்வளவுதான்! அம்மன் கழுத்திலிருந்த தாலிச்சங்கிலி திருட்டு

சென்னை, ஆக. 9- சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ.காலனி எட்டாவது தெரு பகுதியில் அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலை அதே பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற பெண் நிர்வகித்து வருகிறார். தினமும் காலையில் கோவிலை திறந்து விட்டு பூஜைகள் செய்து இரவு கோவில் நடை சாத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பூஜைகளை முடித்து ராஜம்மாள் கோவிலை மூடிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு அம்மன் கழுத்தில் இருந்த 10 சவரன் தாலி செயின் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து எம்.கே.பி. நகர் குற்றப்பிரிவில் ராஜம்மாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி. நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா (சிசிடிவி) பதிவுகளை ஆய்வு செய்து போது அந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்த கள்ளிக்குப்பம் கங்காநகர் கம்பர் தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்கின்ற விக்கி என்ற நபர் அப்பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. இதனை யடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்த போது அம்மன் கழுத்தில் இருந்து செயின் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்து 10 சவரன் தாலிச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது. தன்னை கோவிலிலிருந்து வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் திருடி விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த எம்.கே.பி. நகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாமி தரிசனமா? மரணமா?

ஜெய்ப்பூர், ஆக. 9- இராஜஸ்தான் மாநிலத்தில் சிகார் மாவட் டத்தில் கட்டு ஷியாம்ஜி கோவிலில் நேற்று (8.8.2022) கியாரஸ் விழா என்கிற பெயரில் கொண்டாடப்பட்ட விழாவில் நீண்ட வரிசையில் கோவிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டபோது முண்டியடித்த படி கோவிலுக் குள் நுழைந்தனர். 

இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் 63 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிக்கி கீழே விழுந்தார். இதில் அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த பெண்கள் இருவரும் கீழே விழுந்து அதே இடத்திலேயே உயிரி ழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கியவர்களில் நால்வர் படு காயம் அடைந்தனர். நால்வரும் அருகிலுள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் கூடியதால் இந்த நிகழ்வு நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிப்பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

பாஜக ஆளும் உ.பி.யில் ‘கோமாதா’க்கள் நிலை இதுதான்

கோசாலையில் அளிக்கப்பட்ட தீவனத்தால் 61 மாடுகள் சாவு

லக்னோ, ஆக. 9- பாஜக ஆளும் உத்தரப்  பிரதேச மாநிலம், அம்ரோகா  மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் பகுதியில் கோசாலை ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு தீவனம் உட்கொண்ட 61 பசு மாடுகள், கடந்த 4.8.2022 அன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தன.

இதுதொடர்பாக, கோசாலையின் பொறுப்பாளரான கிராம மேம்பாட்டு அதிகாரி பணியிடைநீக்கம்  செய்யப் பட்டுள்ளார். தீவனங்களை விநியோகித்தவர் மீது  வழக் குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி விட்ட அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.  இதனி டையே, “பசுக்கள் உட்கொண்ட கம்பு தழைகளில் அதிக ளவு நைட்ரேட் உள்ளது. இதனால் ஏற்பட்ட அதிகளவு ரத்தக் கசிவால் பசுக்கள் உயிரிழந்து உள்ளன” என்று கால்நடை ஆராய்ச்சி மய்ய இயக்குநர் திரிவேணி சிங் தெரிவித்துள்ளார்.

மாற்றி அமைக்கப்பட்ட பொறியியல் புதிய பாடத்திட்டம் 18ஆம் தேதி வெளியாகிறது

சென்னை, ஆக. 9- இந்த கல்வியாண்டில் பொறியியல் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அறிவித்து இருந்தார். 

அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் புதிய பாடத் திட்டங்களை வகுத்துள்ளது.முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு வரை அனைத்து மாணவர்களுக்கும் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. மாற்றி அமைக் கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் 18ஆம் தேதி வெளி யாகிறது. முன்னதாக அதற்கு கல்வி மானியக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். வருகிற 12ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதும் வெளியிடப்பட உள்ளன.

புதிய பாடத்திட்டத்தில் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப பாடப்பகுதி இடம் பெறுகிறது. மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையிலும் தனித்திறனை ஊக்குவிக்கும் வகையிலும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்போதைய போட்டியை சமாளிக்கக் கூடிய வகையில் மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உயர் கல்வித்துறை எடுத்து வருகிறது.

No comments:

Post a Comment