யோகா என்னும் திராவிடர் கலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 7, 2022

யோகா என்னும் திராவிடர் கலை

கி.வீரமணி

யோகா என்னும் பெயரால் மதவாதம் உள்ளே புகும் போது, அதை  எதிர்க்கும் திராவிடர் கழக (இளை ஞரணி)  மாநாட்டு  மேடையில் ‘திராவிடர் கலை’ என்று ‘ஓக இருக்கை’ (யோகாசனம்) நிகழ்த்திக் காட்டப்படுகிறதே என்று சிலர் யோசிக்கக் கூடும். நம் கழகம் நடத்திடும் பயிற்சி வகுப்புகளில் கூட இந்த மூச்சுப் பயிற்சிக்  கலை கற்றுத் தரப்பட்டதுண்டு. யோகி ராஜா ராஜமாணிக்கம் அவர்களும், அவருக்குப்  பிறகு அவருடைய வாழ் விணையர் மல்லிகா ராஜமாணிக்கம் அவர்களும் மூச்சுப் பயிற்சி  வகுப்புகளை நடத்தினார்கள்.

யோகா என்பது உடற்பயிற்சி / மூச்சுப் பயிற்சிக் கலையே  ஆகும். அதற்கு தெய்வீகச் சாயம் பூசி, தியானம், ஆன்மீகம் என்று சொல்லி, இந்து மதத்துடன் முடிச்சுப் போட்டு, தங்கள்  கைகளுக்குள் அத் துறையையே கொண்டுவந்து கட்டுப்படுத்த முனைகிறது இந்துத்துவம். 

அதிவேகமான அன்றாட வாழ்க்கை இன்று மனித குலத்திற்கு அவனி முழுவதும் ஏற்பட்டுவிட்டதால், மன அழுத்தம்,  மன உளைச்சல், இவைகளின்றும் விடுபட அமைதியாகச் சில மணித்துளிகள் அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்தால் மன அழுத்தமும், மன உளைச்சலும், களைப்பும், சோர்வும், ஆத்திரமும், அவசரக் கோலத்தின் அவதியும்,- இவற்றால் ஏற்படும் எரிச்சலும்  நீங்கி, ஒரு புத்துணர்வைப் பெறும் வாய்ப்பினை மனிதன் தனக்குத் தானே வழங்கிக் கொள்ள முடியும்.

கடுமையான பகல் நேர உழைப்புக்குப் பின் இரவில் தூக்கம் மனிதர்களை சோர்வு கழிந்து, மலர்ச்சியை விழிப்புக் கொடையாகத் தருகிறது. உடற்பயிற்சிகளும், நடைப் பயிற்சியும், போன்றதுதான் யோகா என்பதும்.

இது ஏதோ ஆதியில் வேதத்திலிருந்து வந்தது என்றும், ஓம் என்று உச்சரித்துக் கொண்டே பல ஆசனங்கள் போடலாம் என்றும் சமஸ்கிருதமயமாக   (Sanskritisation) இந்தக் கலை, ஆரியர்களால் ஆக்கப்பட்டு உலகம் முழுவ திலும் பிரச்சார வன்மையால் விளம்பரபடுத்திவிட்டனர்.

திராவிடர் நாகரிகத்தையே இன்று மறைத்து, வரலாற்றைத் தலைகீழாக்கி, ஆரியர்கள் இந்நாட்டின் பூர்வீகக்குடிகள், திராவிடர்கள் வந்தேறியவர்கள் என்று தலைகீழாக ஆக்கும் துணிவு உள்ள நிலையில், 2000, 2500 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியெல்லாம் செய்திருப் பார்கள் என்பதை அறிஞர்கள், நடு நிலையாளர்கள் சிந்தித்தால் நன்கு புரியும்.

மேலை நாட்டவர்களையும், மற்றும் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ள இந்த யோகா என்ற யோகக்கலை, வேத கால, ஆரிய நாகரீகத்திற்கு முந்தைய மொகஞ்சாதாரோ ஹரப்பா நாகரீகத்திலேயே அந்த மக்களால் (திராவிடர்களால்) கடைப்பிடிக்கப்பட்ட ஒன்றாகும்!

பிற்காலத்தில் பண்பாட்டு படையெடுப்பினால் இதற்கு ஒருவகை உருவம் தந்து, பதிவுசெய்ய பதஞ்சலி போன் றவர்கள் வந்திருக்கலாம். இது பற்றி சீரிய தமிழ் அறிஞர்கள் நல்லவண்ணம் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.

தமிழ்நாடு திராவிடமாடல் அரசும் ஆய்வுக்கு உதவ வேண்டும்.

‘யோகா’ என்ற தலைப்பில், இங்கிலாந்தில் கடந்த 50 ஆண்டுகளுக்குமேல் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியை மேரி ஸ்டூவர்ட் என்பவர் எழுதிய ஆங்கில நூல் ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன் படித்த போது, அதில் அந்த அம்மையார் யோகாவைப் பற்றி ஒரு புதுக் கருத்தினைக் கூறியுள்ளார்!

Yoga is as old as Civilisation. Its first traces were found in the pre-historic ruins of Indus valley in what is now Pakistan. Here carved seals were discovered some of which showed a figure seated in Yoga position which is still practised today. The script used by these Indus valley people has not yet been deciphered. But from their well - planned cities, and buildings we know that theirs was an advanced culture and predating the migration of Aryans into India from the north.

தமிழாக்கம்:

“யோகா எனும் முறை, நாகரிகம் எவ்வளவு பழைமை யானது. அவ்வளவு பழமையானது இப்பொழுது பாகிஸ்தான் எனப்படும் நாட்டில் உள்ள சிந்துச் சமவெளியில், வரலாற்றுக்கு முந்திய இடிபாடுகள் (புதை பொருள்கள்) இருக்கின்றன. அவற்றிடையே யோகாவைப் பற்றிய முதல் அடையாளங்கள் காணப்பட்டன. உருவங்கள் பதியப்பெற்ற முத்திரைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன.

இன்னும் வழக்காற்றில் உள்ள, யோகா நிலையில் அமர்ந்திருப்பது போன்ற ஓர் உருவத்தை அந்த முத்திரைகள் சில காட்டுகின்றன. சிந்துச் சமவெளி மக்கள் பயன்படுத்திய எழுத்துக்களை இன்னும் படிக்க இயல வில்லை. ஆனால் அங்குள்ள, நன்கு திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ள நகரங்களும், கட்டடங்களும், சிந்துச் சமவெளி நாகரிகத்தவர்கள் முன்னேறிய பண்பாட்டிற்கு உரியவர்கள் எனக் காட்டுகின்றன. வடக்கில் இருந்து இந்தியாவில் ஆரியர்கள் குடியேறுவதற்கு முன்பே அந்த நாகரிகம் இருந்தது”

பாகிஸ்தானில் உள்ள சில இடங்களில் சிந்துவெளிப் பள்ளத்தாக்கு நாகரிகத்தில்  (B.C.3300 to 1700 B.C.)  இருந்து கண்டெடுக்கப்பட்ட சில உருவங்கள் ஓக இருக்கை நிலைகளைக் காட்டுவனவாக அமைந் துள்ளன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர், ‘கரேல் வெர்னர்’ இப்படி எழுதுகிறார்:

“ஆரியர்களுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தில பல வகையான யோகா முறைகள் வழக்கத்தில இருந்து வந்ததைப் பார்க்கையில், தொல்பொருள் ஆய்வுக் கண்டு பிடிப்புகள் எங்களை, எங்களின் கூற்றை நியாயப் படுத்தலுக்கு அனுமதிக்கிறது’’ என்கிறார்.

இது ஒரு வகையான வாழ்வியல் முறையையும் ஓகத்தின் ஆரம்பமாகவும் காட்டுவதாக மற்றுமொரு தொல்பொருள் ஆய்வாளர் ‘கிராக்கொரி போஷ்செல்’ சொல்கிறார். ‘தாமஸ் மெக் எவில்லி’ என்கிற மற்றொரு ஆராய்ச்சியாளர்  ‘The Shape of Ancient Thought: Comparative Studies in Greek and Indian Philosophies, Allworth Press, Page No:219 என்னும் புத்தகத்தில் சிந்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் கிடைத்துள்ள சின்ன (அடை யாள) உருவங்கள் விலக்கில்லாமல் ‘ஓக இருக்கை’ நிலைகளைக் காட்டுவதாய்ச் சொல்கிறார். 

ஹெயின்ரிச் ஸிம்மர் என்கிற மற்றுமொரு ஆய்வாளர் (Heinrich Robert Zimmer  (1972), Myths and Symbols in Indian Art and Civilization, Princeton University Press, Page No:148)  ஒரு சின்னத்தைக் காட்டி, ஓக இருக்கையில் உள்ள தவசியைப் போல் அமர்ந்துள்ளதாகச் சொல்கிறார்.

தியான நூல்களை விளக்கிய பழம்பெரும் நூல்கள் பெரும்பாலும் புத்த  சமய நூல்களே என்கிறார் ‘ரிச்சர்டு காம்ரிச்’.

டாக்டர் ஹெயின்ரிச் ஜிம்மர் மேலும் ஒன்றைச் சொல் கிறார். இந்த ஓக இருக்கை நிலைகள் ஆரியர் காலத்துக்கு முந்தையது. மேலும், இது வேதங்களின் ஆளுமையை ஒத்துக்கொள்வதில்லை என்கிறார்.

இப்படி சிந்துச் சமவெளி காலம் முதல் நம்முடைய கலைகளில் ஒன்றாக இருந்து வருகிறது இந்த மூச்சுப் பயிற்சி. 

இதனை முழுக்க சமஸ்கிருத மயமாக்கி, ஆசனத்தின் பெயர்களை சமஸ்கிருதத்தில் இட்டு, நமக்கு அந்நியமான தாகவும், ஆரியர்க்கு உரியதாகவும் ஆக்கிக் காட்டியிருக்கிறார்கள். நமக்குப் புரியும் மொழியில் தமிழில் இவற்றை அறிமுகப்படுத்துவதும்  அவசியமாகும்.

சிந்துச் சமவெளி நாகரித்தையே, சிந்து - சரஸ்வதி நாகரிகம் என்று  அழைத்து, மீண்டும் மீண்டும் அப்படியே பதிவு செய்யும் வரலாற்றுப் புரட்டில்  பா.ஜ.க. அரசு ஈடு பட்டுவருகிறது. கல்விப் புலங்களிலும், இணைய தளங் களிலும், தொல்லியல் சான்றுகள் நிறைந்த சிந்து சம வெளியையும், ஆரியக் கற்பனை நதியான, ஆதாரங்களே அற்ற சரஸ்வதி நதியையும் சேர்த்து, திராவிடர் நாகரி கத்தையே கபளீகரம் செய்ய முயலும் மோசடி நிகழ் காலத்தில் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நம் கலை என்பதற்கான சான்றைக் கொண்டு ஓகக் கலையை மீட்க வேண்டியதும்  நம் பணிகளுள் ஒன்றேயாம். 

பவுத்தமும், சமணமும் இம் மூச்சுப் பயிற்சி, ஓக இருக்கைகள் பற்றிப் பெரிதும் பேசுகின்றன. கடவுள், மதச் சார்பற்ற, அக்காலத்து பகுத்தறிவு நெறியான சாங்கியத் தத்துவத்தில் யோகா என்ற உடற்பயிற்சி இருந்ததையும், பிற்காலத்தில் யோகாவை ஆவணப்படுத்திய பதஞ்சலி போன்றோர் அதில் வேதக் கருத்துகளைப் புகுத்தியதையும் “The Spirit of Buddhism" என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

டில்லியில் 1872இல் பிறந்து, இங்கிலாந்தில் பி.ஏ., எல்.எல்.எம் L.L.M) L.L.D.  என்ற பட்டங்களை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பெற்றும் பிறகு டில்லி பல்கலை கழகத்தால் D.Litt அளிக்கப்பட்டவரும் மிகச் சிறந்த சிந்தனையாளரும், (1918-1922இல்) நாகபுரியின் மேயராகவும், டில்லி, நாகபுரியின் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தராகவும் இருந்த டாக்டர் சர்.ஹரிசிங் கவுர் அவர்கள் 1929இல் எழுதிய  The Spirit of Buddhism  என்ற நூலில் யோகாவை புத்தர் அணுகிய விதமும் பதஞ்சலி பயன்படுத் தியது பற்றியும் கீழ்க்காணும் முறையில் குறிப்பிடுகிறது.

“...For both the Sankhya and the Vedanta appear to have agreed on the practice of  Yoga or intense meditation was itself the survival of the Vendic tapas, which was a form of asceticism combined with penace. It is not clear whether Kapil himself recognized Yoga as the gate-way to higher knowledge, but it was the theme of the grammarian Patanjali, who expounded it in his Yoga Shastra written about 200 B.C...

...Patanjali had to introduce in his system thedoctrine of a personal God, Though he cleary saw its irreconcilable nature, and therefore, relegated his sutras dealing with God to a place unconnected with his treatise...

...That Buddha was a firm believer in its efficacy of Yoga is clear form the tenor of his earlier life...

...But Buddha believed in Yoga as a mental telescope; he did not believe in its efficacy beyond chastening the mind by freeing it from material distractions. It was the pre-Buddhistic view. But in later time Patanjali gave Yoga a special significance and it was maintained to be the chief means of salvation”

தமிழாக்கம்:

யோக முறையைப் பின் பற்றுவதன் மூலம் ஒரு வரின் நோக்கு அல்லது பார்வை, பொருள் எல்லையைக் கடந்து விரிவடை கிறது எனச் சாங்கியம், வேதாந்தம் ஆகிய இரண்டும் கருதின. வேதியத்துவம் (தபஸ்), சுகத்தை மறுத்துத் தன்னை வருத்திக் கொள்வது ஆகும்; அதாவது உனை உருக்கி, உள்ஒளி பெருக் குதல்; அதன் மீட்சியே யோகம் எனும் தீவிர ஆழ் நிலைச் சிந்தனை.

உயர்ந்த ஞானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி என்ற வகையில் யோக முறையைக் கபிலர் கருதி னாரா என்பதைத் தெளி வாகச் சொல்ல முடிய வில்லை. ஆனால், இலக் கண ஆசிரியர் பதஞ்சலி, யோக முறையால் உயர்ந்த ஞானத்தைப் பெறலாம் என, கி.மு.200 இல் தாம் யாத்த யோக சாஸ்திரத்தில் எழுதினார்.

தனியாள் சார்ந்த கடவுள் (Personal God) எனும் கொள்கையைப் பதஞ்சலி, தமது முறையில் சேர்க்க வேண்டியவர் ஆனார். அவ்வாறு கடவுள் கொள்கையைப் புகுத்துவதால் முரண்பாடு ஏற்படுவதைக் கண்டார்; அதனால், கடவுளைப் பற்றிய தமது சூத்திரங்களை, கோட் பாட்டைப் பற்றிய பகுதியுடன் சேர்க்காமல், அதனுடன் தொடர்பற்ற ஒரு தனித்த இடத்திற்கு ஒதுக்கி விட்டார்.

யோக முறைக்கு ஆற்றல் உண்டு, அதைக்கொண்டு, விரும்பும் விளைவை ஏற்படுத்தலாம் எனப் புத்தர் உறுதியாக நம்பினார் என்பதை அவருடைய தொடக்க கால வாழ்வுப் போக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

மனதைத் தொலைநோக்கு உடையதாக ஆக்கவல்லது யோகம் எனப் புத்தர் நம்பினார். பொருள் வயப்பட்ட புற ஈர்ப்புகளுக்கு உட்படாமல், மனதை விடுவித்து அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு யோகம் பயன் படுகிறது; அதற்கு மேல் அதற்குத் தனி ஓர் ஆற்றல் இல்லை. இந்தக் கருத்து, புத்தர் காலத்திற்கு முன்பு இருந்த ஒன்று. ஆனால், பதஞ்சலி, யோக முறைக்கு ஒரு தனித்த முக்கியத்துவம் அளித்தார்; வீடு பேறு அல்லது மோட்சம் என்பதை அடைவதற்கு அஃது ஒரு முக்கிய வழிமுறை எனக் கண்டார்.

பக்கம் 78. “The Spirit of Buddhisum”

ஆரியம் கபளீகரம் செய்ததுடன், அதையே திரித்து, ஆயுதமாக்கி, தங்கள் மதவெறி வகுப்புகளுக்கான தூண்டி லாகப் பயன்படுத்துமேயானால், அதனை முறித்துப் போட வேண்டியது மதச்சார்பற்ற பகுத்தறிவாளர்களின் பணி தானே! 

No comments:

Post a Comment