ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

யு.பி.ஏ. ஆட்சியில் 2ஜி ஊழல் என்று அமைச்சர் ஆ.இராசா மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி ஆட்சியைக் கவிழ்த்தனர்

இப்போதைய 5ஜி அலைக்கற்றையில் கிடைக்கும் இலாபம் வெறும் ரூ.1,50,173 கோடிதான்!

அதானிகுழுமம், ஏர்டெல் நிறுவனம், ஜியோ நிறுவனம் 

வோடோ ஃபோன் நிறுவனம் கைக்குள் போய் விட்டதே, என்ன பதில்? 

இவர்கள் ஆண்டு ஒன்றுக்குக் கட்டப்போகும் தொகை ரூ.13,385 கோடிதான்!

யு.பி.ஏ. ஆட்சியில் 2ஜி ஊழல் என்று அமைச்சர் ஆ.இராசாமீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி ஆட்சியைக் கவிழ்த்தனர்; இப்பொதைய 5ஜி அலைக்கற்றையில் கிடைக்கும் இலாபம் வெறும் ரூ.1,50,173 கோடிதான்! அதானிகுழுமம், ஏர்டெல் நிறுவனம், ஜியோ நிறுவனம் வோடோஃபோன் நிறுவனம் கைக்குள் போய் விட்டதே, என்ன பதில்? இவர்கள் ஆண்டு ஒன்றுக்குக் கட்டப்போகும் தொகை ரூ.13,385 கோடிதான் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆதாரப்பூர்வ அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தியா முழுவதும் ஒரு திட்டமிட்ட பொய்யுரை அதிவேகமாகப் பரப்பப்பட்டது!

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஓர் ‘அமைதிப் புரட்சியை' நிகழ்த்திய  அமைச்சர் ஆ.இராசா!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) அரசில் - பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் (இரண்டாவது முறையாக பதவியேற்ற நிலையில்) தகவல் தொழில் நுட்பத் துறையில் ஓர் ‘அமைதிப் புரட்சியை' நிகழ்த் தினார் தி.மு.க. சார்பில் பொறுப்பேற்ற அத்துறை அமைச்சர் ஆ.இராசா அவர்கள்.

அவர், 2ஜி அலைக்கற்றை சுமார் 30 சதவிகிதம் இராணுவத் துறையால் பயன்படுத்தாமலிருந்த நிலையில்,  அதனையும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்து, முன்பு கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது - அதனை அழைப்புக்கு வெறும் 30 காசு அளவில் விற்கும் நிலையைப் பரவலாக ஏற்படுத்தினார்!

இந்த சாதனையால் எங்கே தி.மு.க.வுக்குப் பெருமை வந்துவிடுமோ என்று பொருமிய நிலையில், அரசியல் வட்டாரமும் - சில கட்சிகளும் இருந்தன. பெரும் திமிங்கலங்கள் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்குத் தராமல், பிரித்துப் பலருக்கும் 2ஜி அலைக்கற்றையைக் கொடுத்து லாபம் சம்பாதித்துக் கொடுத்தார்.

1.760000000000 என்று போட்டு ஊடகங்கள் வாயிலாக ஊதி ஊதிப் பிரச்சாரம் செய்தனர்!

ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. சில விஷம சக்திகள் தூண்டுதலும் சேர்ந்து, அடுத்தத் தேர்தலில் (2014 இல்) காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி (யு.பி.ஏ.)யைத் தோற்கடிக்க பா.ஜ.க. அனுதாபிபோல் நடந்துகொண்ட ஆடிட்டர் ஜெனரல் வினோத்ராய் மூலம் தவறான ஒரு கணக்குத் தயாரிக்கப்பட்டு, 2ஜி ஏலத்தில் ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஒன்றிய அரசுக்கு நட்டம் என்று கற்பிதம் செய்து, 1.76,0000000000 என்று போட்டு, ஊடகங்கள் வாயிலாக ஊதி ஊதிப் பிரச்சாரம் செய்தனர். இடதுசாரி கட்சிகளைக்கூட நம்ப வைத்துவிட்டனர்!

தி.மு.க.வுக்கு அவப்பெயர் உண்டாக்க, அமைச்சர் இராசாவின் பதவி விலகலுக்குப் பிறகும்கூட, ‘விசா ரணை' என்ற பெயரில் உச்சநீதிமன்றத்திற்கே சென்றனர் சு.சாமிகள் போன்றவர்கள். 

உச்சநீதிமன்றமும் இதை நம்பி, நேரடியாக விசார ணையை  கண்காணிக்கும் என்றெல்லாம் கூறவைத்து, ஆ.இராசா, எந்தக் குற்றமும் செய்யாத கனிமொழி கருணாநிதி ஆகியோரை குற்றவாளியாக்கி திகார் சிறையில் அடைத்தனர். கனிமொழிக்கு ஜாமீன்கூட மறுக்கப்பட்டது - பல மாதங்களாக!

விசாரணை சி.பி.அய்., நீதிமன்றத்தில் நடைபெற்று, பல மாதங்கள் புதுப்புது ஆதாரங்களைத் தருகிறோம் என்று கூறி, வழக்கை நீட்டினர். இறுதித் தீர்ப்பில், குற்றச் சாற்றுக்கு எந்தவித நிரூபிக்கும் ஆதாரமும் இல்லை என்றும், யாரும் புதிதாக எதையும் ஆதாரமாகத் தர வில்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர்.

அதன்பிறகு, டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், அதனுள் செல்வது முறையாகாது.

5ஜி அலைக்கற்றை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 

173 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது

ஆனால், அண்மையில் 2ஜி காலகட்டம் தாண்டி, 3ஜி, 4ஜி எல்லாம் கடந்து,  5ஜி என்ற அதிவேக தகவல் புரட்சி யுகத்திற்கு வந்துள்ள நிலையில்,

அது ஏலம் விடப்பட்டதில்,

ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

இப்படி ஏலம் போனதில், 

1. அதானி குழுமம் ரூ.2126 கோடி

2. ஏர்டெல் நிறுவனம் ரூ.43,084 கோடி

3. அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ.88 ஆயிரத்து 76 கோடி

4. வோடோஃபோன் நிறுவனம் ரூ.18,799 கோடி

இவர்கள் அத்தனைப் பேரும் சேர்ந்து ஆண்டுக்கு இவர்கள் ஒன்றிய அரசுக்குக் கட்டவேண்டிய வருடாந்திர தவணைத் தொகை 13 ஆயிரத்து 365 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது!

வாசக நேயர்களுக்கு......

இதில், வாசக நேயர்களுக்கு சில விஷயங்கள் தெளிவாக விளக்கப்படவேண்டும்.

1. 5ஜி என்பது அதிவேகமாக தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் வேகம் மிகுந்த வளர்ச்சி.

2ஜியை விட 5ஜி என்பது 20 மடங்கு கூடுதல் திறன் உள்ளது.

2ஜியில் வெறும் குரல் மட்டும்தான் சென்றது. பிறகு 4ஜி வீடியோ கால்.

5ஜியில் எந்த இணையத் தேடுதலாக இருந்தாலும், ஒரு நொடியில் வந்துவிடும் சக்தி வாய்ந்தது.

அதுமட்டுமல்ல, 2ஜி அலைக்கற்றை வெறும் 30 மெகாஹெர்ட்ஸ் தான் (அதிர்வெண் அலை) ஏலம் விடப்பட்டது.

ஆனால், 2022 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்ட 5ஜி என்ற அலைக்கற்றை மொத்தம் 51 ஜிகாஹெர்ட்ஸ்.

அதாவது மெகாஹெர்ட்ஸ் கணக்கில் இது 51,000 மெகாஹெர்ட்ஸ்.

ஊன்றிக் கவனியுங்கள் நண்பர்களே!

2008 ஆம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஏலம் வெறும் 30 மெகாஹெர்ட்ஸ்.

9 ஆயிரத்து 16 கோடி ரூபாய்.

2022 5ஜி அலைக்கற்றை 51 ஜிகாஹெர்ட்ஸ் (51000 மெகாஹெர்ட்ஸ்) ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்

தகவல் தொடர்புத் துறையில் பி.எஸ்.என்.எல். போன்ற அமைப்புகளுக்கே இன்னும் 4 ஜி அலைக் கற்றையே வந்து சேராத நிலையில், (பொதுத் துறை நிறுவனமான அரசு நிறுவனத்திற்கு) 5ஜி கார்ப்பரேட் கனதனவான்களுக்கு அதிவேகமாக, எதிர்பார்த்து சொல்லப்பட்டதைவிட பல மடங்கு குறைந்த தொகைக் குக் கிடைத்துள்ளது!

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்ற விலையில், நூறில் ஒரு பங்கு மட்டுமே!

5 லட்சம் கோடி ரூபாய்க்குமேல் 5ஜி அலைக்கற்றை யில் அரசுக்கு ஏல வருவாய் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன் பலர் கூறினார்கள்; ஆனால், வெறும் 1,50,173 கோடி ரூபாய் (ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்).

இது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்ற விலையில், நூறில் ஒரு பங்கு மட்டுமே!

இன்னமும் கூச்சமில்லாமல் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யைப் பரப்புகின்றனர்

அப்போது, 1,76-க்குப் பின் 0000000000 என்று மனம் கூசாமல் பொய் மூட்டையை அவிழ்த்துக்கொட்டி, வாக்காளர்களையும் - அப்பாவிகளையும், அறிவுக் கொழுந்துகளையும் ஏமாற்றினார்களே - அப்படிப்பட்ட வினோத்ராய்  ஒத்துழைப்போடு - தி.மு.க.மீது சேற்றை வாரி இறைத்து இன்னமும் கூச்சமில்லாமல் ஜமுக்காளத் தில் வடித்தெடுத்த பொய்யைப் பரப்புகின்றனர்.

இப்போது எத்தனைப் பூஜ்ஜியங்கள் 00000000000000 போடவேண்டும்?

நட்டத்திற்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் யார்?

உண்மை ஒரு நாள் வெளியாகும் -

அதில் பொய்யும், புரட்டும் பலியாகும்!

- பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரனார்

மக்களிடம் இதனை எடுத்துச் செல்லவேண்டியது.

உண்மையானவர்களின் உத்தமக் கடமை அல்லவா?

இந்த நட்டத்திற்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் யார்?


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

17.8.2022

குறிப்பு: ஒரு ஜிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெகா ஹெர்ட்ஸ். 2ஜி மெகாஹெர்ட்ஸ் - 5ஜி ஜிகாஹெர்ட்ஸ்


No comments:

Post a Comment