தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்களும் - அதற்குரிய விதிகளும் செல்லும்!
சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு தாய்க்கழகத்தின் நெஞ்சார்ந்த பாராட்டு - வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனங்களும் - அதற்குரிய விதிகளும் செல்லும்! சென்னை உயர்நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு தாய்க்கழகத்தின் நெஞ்சார்ந்த பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமலேயே அரசு மரியாதையுடன் அவருடைய உடலைப் புதைக்கும் நிலை ஏற்பட்டதே என்று ஆதங்கம் தெரிவித்தார் அந்நாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.
அந்த ஆதங்கத்தைப் போக்கிடும் வகையில், தாம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021 ஆகஸ்ட் 14 ஆம் தேதி, ஆகமப் பயிற்சி பெற்று வேலைக்காகக் காத்திருந்த இளைஞர்கள் இருபால ரையும் பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்தார் 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனை சரித்திரத்தைப் படைத்தார். இதன்மூலம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பதில் 'திராவிட மாடல்' ஆட்சி முத்திரையைப் பதித்துள்ளது!
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ச்சகர்களும், வைதீக சனாதன அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று (22.8.2022) காலை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையிலான அமர்வு தந்த தீர்ப்பு - தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் நியமனங்களும், அதற்குரிய விதிகளும் செல்லும் என்று கூறி, எதிர்த்துப் போடப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்த தீர்ப்பு - பாராட்டி வரவேற்கத்தக்க - குறிப்பிடத்தக்க வரலாறு படைக்கும் வெற்றித் தீர்ப்பாகும்.
இதற்குக் காரணமான மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி யையும், வாழ்த்தினையும் - பாராட்டினையும் தாய்க்கழகமான திராவிடர் கழகம் தெரிவித்து மகிழ்கிறது!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
22.8.2022
No comments:
Post a Comment