அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மட்டுமல்ல - வீணான சர்ச்சைகளை எழுப்பி வருகிறார் தமிழ்நாட்டு ஆளுநர்
தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்குக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பதிலடி கொடுக்க முன்வரவேண்டும்
தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் திரு.ஆர்.என்.ரவி, வீணான சர்ச்சைக்குரியவற்றைப் பேசுவதும், ஆளுநர் மாளிகையை ஆர்.எஸ்.எஸ். தலைமையிடமாக மாற்றுவதுமான செயலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான எதிர்ப்புப் பிரச்சாரத்தின்மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று அனைத்து முற்போக்குக் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டின் ஆளுநராக ஒன்றிய அரசால் அனுப் பப்பட்டுள்ள திரு.ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஓராண்டிலேயே - இந்தியாவின் (நம்பர் ஒன்) முதல் முதலமைச்சர் என்ற புகழ்பெற்று வரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக, கடந்த பல மாதங்களாகவே - அதன் கொள்கைத் திட்டங்கள் - இவற்றிற்கு முற்றிலும் எதிர்மறையான கருத்தை நாளும் பரப்பி ஒரு போட்டி அரசாங்கத்தினையே நடத்தி வருகிறார்!
உச்சநீதிமன்றத்தால்
''குட்டுப்பட்ட'' ஆளுநர்
தோழர் பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் குட்டுப்பட்டது போன்ற கருத்துரைகளுக் குப் பின்னரும்கூட, அந்தப் போக்கை கைவிடாததோடு, தனது அலுவலகமான ‘ராஜ்பவன்' ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டுப் பிரிவின் தலைமை இடம் போலவே கருதி, அறிக்கை விடுவது, சனாதனத்தின் பெருமைகள்பற்றிப் பேசுவது, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, தனது அரசமைப்புச் சட்டக் கடமைகளை சரிவர நிறைவேற்றாதது உள்பட பல வகையிலும் ஏட்டிக்குப் போட்டியாக, ‘‘அரசியல்'' செய்து வருகிறார்.
ஆளுநரின் தேவையற்ற பேச்சுகள்
தேவையற்ற முரண்பாடான வகையில் தமிழ்நாட்டு மக்கள் வரிப் பணத்தில், வசதிகளுடன் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கொள்கை பிரச்சாரகராக நாளும் செயல் பட்டு வருகிறார் என்ற கண்டனங்கள் தமிழ்நாட்டின் பல எதிர்க்கட்சித் தலைவர்களால் அவ்வப்போது கூறப்பட்டும், அதுபற்றி அலட்சியமே காட்டுகிறார்!
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், ‘‘அவரைச் சந்தித்து அரசியல் பேசினோம்; ஆனால், அதை வெளியிட முடியாது'' என்று கூறியுள்ளது - மற்ற தலைவர்கள் ஆளுநர்மீது சாட்டிய குற்றச்சாட்டுக்கு தக்க ஆதாரமாகவும் அமைந்துள்ளது.
அனைத்துக் கட்சிகளின் கடமை
தமிழ்நாட்டின் அனைத்து கூட்டணி மற்றும் அரசியல் சட்ட மாண்புகளைக் காக்க விரும்புவோர், முற்போக் காளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து, அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிக்கவும் முன்வரவேண்டும்.
சில நாள்களுக்குமுன், ‘அடகு தி.மு.க.'(அ.தி.மு.க.)வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், ‘‘2024 இல் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்பிருக் கிறது'' என்று ‘திருவாய்' மலர்ந்தருளியுள்ளார். இந்த அரசியல் வித்தை - வியூகத்திற்கும் - ஜனநாயகத்திற்குப் புதைகுழி வெட்ட முயற்சிக்குமான வேலைகளில் முனைகிறார்களோ என்ற அய்யப்பாடு கூர்ந்து நோக்கும் எவருக்கும் புரியும்.
எனவே, தமிழ்நாட்டு பெருமக்களே, ஜனநாயக விரும்புவோரே, இனி உங்கள் கடமை என்ன?
வீண் வம்பை விலைக்கு வாங்கும் ஆளுநருக்குப் பதிலடி தரவேண்டாமா?
ஆழ்ந்து யோசியுங்கள்!
இங்கும் மற்ற மாநிலங்களில் செய்ததுபோல் நவீன ‘‘விபீஷ்ண ஆழ்வார்களை'' தேடுகிறார்கள்; அல்லது வீண் வம்பை விலைக்கு வாங்க திட்டமிடுகிறார்கள் - காவிகளும், அவர்களின் கைக்கூலிகளும்; இதற்கு விடை காண வேண்டியது முக்கியமாகும்.
இந்த பெரியார் மண்ணான சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில், மக்களின் மாண்பை அழிக்க நினைக்கும் அதிகார ஆணவத்திற்கு எதிரான விழிப்புணர்வைத் திரட்டி பதிலடி தரவேண்டாமா?
அவசரமாக யோசியுங்கள்!
‘டிரோஜன் குதிரைகளை' அடையாளம் காணுங்கள்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.8.2022
No comments:
Post a Comment