புதுடில்லி, ஜூலை 19 கரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று (18.7.2022) உத்தரவிட்டது.
இழப்பீடு கிடைக்காதவர்கள் மற்றும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை குறைதீர் குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. இதுபோன்ற புகார்களுக்கு 4 வாரங்களுக்குள் குறைதீர் குழு தீர்வு காண வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக ஆந்திர அரசு இந்த நிதியை வேறு வகையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment