மேகதாது : தமிழகத்தின் நியாயத்தை உச்சநீதிமன்றம் உணர்ந்துள்ளது! அமைச்சர் துரைமுருகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 22, 2022

மேகதாது : தமிழகத்தின் நியாயத்தை உச்சநீதிமன்றம் உணர்ந்துள்ளது! அமைச்சர் துரைமுருகன்

புதுடில்லி, ஜூலை 22- கருநாடகத்தின் மேகதாது அணை கட் டும் திட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டின் தரப்பில் நியாயம் உள்ளதை உச்ச நீதி மன்றம் உணர்ந்துள் ளது. அதன்படி நீதி மன்றம் புதன்கிழமை  (20.7.2022) வழங்கியுள்ள உத்தரவு மகிழ்ச்சி அளிப் பதாக உள்ளது என தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில், அமைச்சர் துரைமுருகன் டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு தரப்பில் நியாயம் உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்து உத்தரவு வழங்கியதற்கு நன்றி யையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பதையும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், மேகதாது குறித்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தரவில்லை. உச்சநீதிமன்றத்தையும் கருநாடகம் அணுக வில்லை.

ஒன்றிய அரசு தங்கள் பக்கம் இருக்கிறது என்கிற தைரியத்தில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கலாம் எனக் கூறியது. நாம் எதிர்ப்புத் தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் அனுமதி வழங்க வேண்டியது உச்சநீதிமன்றம்தான். அந்த வகையில் தற்போது, மேகதாது விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது எனவும், அடுத்த விசாரணை வரும் வரை இதுகுறித்து ஆலோசனை செய்யக் கூடாது என்று, உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அடுத்த விசாரணையின்போது தமிழ்நாடு அரசு வாதங்களை முன்வைக்கும்.

மேலும், உச்சநீதிமன்றமே கூறியுள்ளதால், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கலந்து கொள்வார்கள். அதே வேளையில், ஒன்றிய நீர் வள ஆணையமும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் நியாயப்படி நடக்கவில்லை. ஒன்றிய அரசின் முகவர் போல் செயல்படுகிறது என்பதாலேயே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. இரண்டு ஆணையமும் முறையாகச் செயல்பட்டு இருந்தால், நீதிமன்றத்தை நாடி இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றார் துரைமுருகன்.


No comments:

Post a Comment