தென் மாநிலங்களைப் பிடிக்கப் போகிறார்களாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 6, 2022

தென் மாநிலங்களைப் பிடிக்கப் போகிறார்களாம்

பாணன்

தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஜூலை 2 தொடங்கி இரண்டு நாள்களாக நடைபெற்றது. 

2014-இல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, பாஜக டில்லிக்கு வெளியே கட்சியின் முக்கிய தேசிய கூட்டத்தை நடத்துவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன் 2015-இல் பெங்களூரிலும், 2016-இல் கேரளாவிலும், 2017-இல் ஒடிசாவிலும் நடத்தியது. தற்போது தெலங்கானாவில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் அய்தராபாத் வந்தடைந்தார். அய்தராபாத் விமான நிலையம் வந்தடைந்த அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் உள்ளிட்ட 19 மாநில முதலமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

முதல் நாள் கூட்டத்தில் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பொருளாதாரம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (3.7.2022) நடைபெற்ற இரண்டாம் நாள் கூட்டத்தில் கட்சித் தலைவர் நட்டா, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

 கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, `நாட்டில் அழிவின் விளிம்பில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளைப் பார்த்து கேலி செய்யாமல் அவர்கள் செய்த தவறுகளைப் பார்த்து அதிலிருந்து பாடம் கற்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

 தெலங்கானாவில் பாஜக-வின் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும் போது வளர்ச்சிப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும், தெலங்கானாவின் விவசாயிகளின் நலனுக்காக ஒன்றிய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். கடந்த 8 ஆண்டுகளில், தெலங்கானா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் தொலைவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “நாட்டில் உள்ள எதிர்க் கட்சிகளை மக்கள் மூலையில் உட்கார வைத்துவிட்டனர். அடுத்து வரும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை ஒன்றியத்தில் பாஜக கூட்டணியே ஆட்சி நடத்தும். ஜாதி அரசியல், வாரிசு அரசியல், வாக்குவங்கி அரசியலுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தெலங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதும். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். 

இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும். பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களிலிருந்து வரும் என்று அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையும், கண்டுபிடிப் பும் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரை அதை ஆளுகிற குடும்பம் அதன் நிலைப்பாட் டில் ஒட்டிக்கொண்டதால், அதன் அமைப்பிற்குள் ஜனநாயகத்துக்குப் போராடுகிற நிலை உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு வெறுப்படைந் துள்ளன. பாஜக-வில் உள்கட்சி ஜனநாயகம் பின்பற்றப் படுகிறது. ஆனால், காங்கிரஸில் கட்சித் தலைவர் தேர்தலை நடத்தக்கூட அஞ்சுகின்றனர். ‘மோடி போபியா’ எதற்கொடுத்தாலும் மோடியைக் குறை சொல்லும் நோயால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது” என்று பேசியுள்ளார். இதில் “பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களிலிருந்து வரும்” என்று அமித்ஷா பேசியது, வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக-வின் வியூகம் தென் மாநிலங்களில் எடுபடுமா? அதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? பார்க்கலாம்

தென் இந்தியாவைப் பொறுத்தவரைக் கருநாடக மாநிலம் மட்டும் தான் பா.ஜ.க வசம் இருக்கிறது. இது தவிர கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மற்ற எந்த மாநிலத்திலும் பாஜக-விற்கு வாய்ப்பு கிடையாது. தெலங்கானாவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதால் இப்படி சொல்கிறார்கள். எனினும் அங்கும் சாத்தியம் இல்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் உரிமை உண்டு. அதன் அடிப்படையில் அமித் ஷா அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், தென் இந்திய மக்களுக்காக ஏதும் செய்யாமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு மதவாத, ஜாதிவாரியான அரசியல் பேசுவது இங்கு எடுபடாது. அப்படி தமிழ்நாட்டிலும் பாஜக செய்து கொண்டிருப்பது கொஞ்ச நாட்களில் வெளியே வந்துவிடும்.

வடநாட்டில் பாஜக கால் ஊன்றியது என்றால் அங்குக் கல்வி அறிவு, அரசியல் சித்தாந்தங்கள் குறைவு. ஆனால், தென்இந்தியாவில்  கல்வி அறிவு அதிகம் உண்டு. சிந்தனையாளர்கள் பல பேர் இருந்த மண், அதனால் பாஜக என்ற மதவாதக் கொள்கை கொண்ட கட்சியை மக்கள்  ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதே நேரத்தில் இந்த நிமிடம் வரை பாஜக-வின் செயல்பாடுகள் எல்லாம் வட இந்திய வளர்ச்சியை நோக்கியே இருக்கிறது. அங்கு உள்ள தொழிலதிபர்களை வளர்த்திருக்கிறார்களே ஒழிய தென் இந்தியாவிற்கோ, தென் இந்திய மக்களுக்கோ அவர்கள் குரல் கொடுத்ததாகத் தெரியவில்லை. இந்தியா முழுவதும் இடம் பிடிப்போம் என்பது பாஜக-வின் ஆசை. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை; கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை

“வட இந்தியாவில் ராமர் சித்தாந்தம், ராமர் கோயில் பிரச்சினை, காஷ்மீர் மக்கள் அவலநிலை போன்ற விஷயங்களினால் பாஜக மாற்று அரசியலுக்கு உடனே கதவு திறந்துவிட்டது. குறிப்பாக இந்தி பேசக் கூடிய மாநிலங்கள். ஹிந்தி மற்றும் ஹிந்துத்துவக் கலாசாரத் தாலும் வேகமாக வளர்ந்துவிட்டார்கள்  அந்த வெற் றியைப் பயன்படுத்தி மொழியாலும், கலாசாரத்தாலும் வட இந்தியாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிற மக்களை நோக்கி பாஜக கவனத்தை நோக்கி இருக் கிறது. அதுதான் அமித் ஷா கூறியுள்ளார்.

மாநிலங்களில் குறுக்குவழியில் ஆட்சியைப் பிடிப்பதை இதுவரை பாஜக வெளிப்படையாக கூறியதில்லை. ஆனால் இன்று அப்படிக் கூறுகிறார்கள் என்றால் அதற்கான ஒரு திட்டம் கொண்டுள்ளார்கள் என்று பொருள் ஆகும்.

மேற்குவங்கத்தில் ஒன்றுமே இல்லாமல் இருந்த அக்கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக இப்போது இருக்கிறது. தென் இந்தியாவில் பாஜக-வின் திறவுகோலாகக் கருநாடக இருக்கிறது. கிட்டத்தட்டப் பெங்களூர் தென் இந்தியாவின் மய்யப் புள்ளி. அங்கு பாஜக வின் ஆட்சி அமைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தெலங்கானா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று அடுத்தடுத்த ஆட்சி அமைக்கப் போகிறோம் என்கிறார்கள். ஆனால் கருநாடகாவில் அவர்கள் ஆபரேசன் தாமரை என்ற திட்டத்தின் கீழ் சுமார் ரூ.4000 கோடிகளை செலவழித்து, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி உள்ளனர். மகாராட்டிராவில் சுமார் ரூ.8000 கோடிகளை செலவழித்து சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.  2019 ஆம் ஆண்டு கருநாடக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்ததை விட 2022 ஆம் ஆண்டு இரண்டுமடங்கு அதிகம் விலை கொடுத்துள்ளனர்.  தென் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க 100 மடங்கு விலை ஏற்றினாலும் யாரும் விலை போகமாட்டார்கள் என்பது அமித்ஷாவிற்கு தெரிய இன்னும் பலகாலம் பிடிக்கலாம். கருநாடக விதிவிலக்காக இருக்கலாம்.

அதுவரை மேடைக்கு மேடை தென் இந்தியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்கான தங்களது அபிலாசை களை பாஜக தலைமை பேசிக்கொண்டே இருக்கலாம்


No comments:

Post a Comment