குடியரசுத் தலைவர் பெயரை பி.ஜே.பி. அறிவித்தவுடன் தமிழ்நாடு முதலமைச்சருக்குக் காய்ச்சல் வந்துவிட்டது என்கிறார் தமிழ்நாடு பி.ஜே.பி.யின் தலைவர் அண்ணாமலை.
எத்தகைய பண்பாட்டுக் குறைவான - தரம் தாழ்ந்த ஒருவர் பி.ஜே.பி.யின் தலைவராக்கப் பட்டுள்ளார் என்பதற்கு இது ஒன்று போதும்.
உடல்நலம் பாதிக்கப்படுவது - காய்ச்சல் ஜூரம் வருவது என்பது இயல்பானது. ஆனால், அண்ணாமலை சொல்கிறார். பி.ஜே.பி. தன் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஒருவரை அறிவித்த காரணத்தால், தமிழ்நாடு முதலமைச்சருக்குக் காய்ச்சல் வந்துவிட்டதாம்.
சொல்லுகிற இவர்களுக்கெல்லாம் காய்ச்சலே வராதா? அப்படிக் காய்ச்சல் வருவதற்கெல்லாம் அரசியல் ரீதியானவைதான் காரணமா?
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்? 'சங்கர மடம்பற்றி கருணாநிதி பேசினார் - கடவுளைப் பிரார்த்தித்தேன் - படுத்துண்டார்!' என்று சொல்லவில்லையா?
பெரியவாள்களின் புத்தியே இந்தத் தரத்தில் இருந்தால் - அவரின் அடிப்பொடிகளும் இந்த யோக்கியதையில்தானே இருப்பார்கள். பொது மக்களும் எடை போட்டுப் பார்க்கமாட்டார்களா?
கோட்டையை முற்றுகையிடப் போகிறோம் என்று யாம் அறிவித்தவுடன், முதலமைச்சர் வெளியூர் சென்றுவிட்டார் என்று சொன்ன 'சிறுபிள்ளை'யும் இதே அண்ணாமலைதான்! வாய் திறந்தாலே ஊத்தை நாற்றம்தானா?
பேசட்டும்! பேசட்டும்!!
கொஞ்சநஞ்ச மிச்சமிருக்கும் மரியாதையும்(?) மிதிபட்டுப் போகும், அவ்வளவுதான்!
No comments:
Post a Comment