பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 7 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 10, 2022

பரப்புரைப் பெரும் பயணம் ஏன்? - 7

புதிய கல்வி - மாநில உரிமைகள் போயே போச்சு!

மக்கள் சிந்தனைக்கு...

ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையின் பெரும்பான்மையான திட்டங்கள் ஹிந்தி - சமஸ்கிருத மொழிகளைத் திணிக் கும் விதமாகவும், ஏழை எளிய மாணவர்களிடமிருந்து கல்வியைப் பறிக்கும் விதமாகவும் உள்ளது

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் 2015ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான குழு கல்வியாளர் தலைமையில் அமைக்கப்படாமல், அரசின் பொது நிர்வாகத் துறையைச் சேர்ந்த மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தலைமையில் அமைக் கப்பட்டது. அது மட்டுமல்ல; குழுவில் இடம் பெற் றுள்ள அய்வரில் நான்கு பேர் அய்.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர்; ஒருவர் மட்டுமே கல்வியாளர்.

இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவா தத்திற்கு உரியவை ஆகும்; மேலும் பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன. கட்டாயத் தேர்ச்சி என்பது நான்காம் வகுப்பு வரை மட்டுமே அளிக்கப்பட வேண்டும்; அய்ந்தாம் வகுப்பு முதல், தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மேல் வகுப்பிற்கு அனுப்ப வேண்டும் என்பது குழு வின் பரிந்துரை. மாணவர்களுக்குக் கட்டாயத் தேர்ச்சி என்பது அவர்கள் படித்தாலும், படிக்காவிட்டாலும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கது.

தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களில் பலர் கல்வியைத் தொடர்வதில்லை என்பதே நடைமுறை உண்மையாக இருக்கும்போது, தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே மேல் வகுப்புக்கு அனுப்ப வேண்டும் என்பது போன்ற பரிந்துரையால் பள்ளியை விட்டு வெளியேறும் அல்லது இடை நிற்கும் மாண வர்களின் எண்ணிக்கை அதிகமாகி “அனைவருக்கும் கல்வி” என்பது செயலாக்கத் தொடர்பற்றுப் போகும். இதனால் கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவர்.

 ஒரு மாணவன் தொடர்ந்து தேர்வு பெறவில்லை என்றால், அந்த மாணவனைத் தொழிற் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் இருக்கிறது. ஒரு பக்கம் கல்வி உரிமைச் சட்டம் மூலம், அனைவருக்கும் கல்வி அளிக்க உறுதி பூண்டுள்ள வேளையில் இன் னொரு பக்கம், மாணவனை 12 வயதிலேயே தொழிற் கல்விக்கு அனுப்பும் நயவஞ்சகத் திட்டம். இதன்மூலம் மறைமுகமாகக் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிடுகிறது. கிராமங்களில் எந்தத் தொழிற்சாலை இருக்கிறது - அப்பன் தொழி லைத் தவிர!

தேர்வு பெற முடியாமல் படிப்பில் பின்தங்கி விடும் மாணவர்களுக்குத் தொழிற் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை மாணவர்களுக்குள்ளே இளம் வயதிலேயே பிளவு ஏற்படுத்தும் காரியமாகும். 

கல்வி நிர்வாகப் பணிக்கு வருவோருக்கு இந்தியக் கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்று பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி மாநில அரசுகள் கல்வித் துறை இயக்குநர்களை நேரடியாக நியமிக்க முடியாது என்பதோடு, அகில இந்தியக் கல்விப் பணியில், அதிகாரிகள் நியமன ஒதுக்கீடு பெறும் மாநிலத்தைப் பற்றிய சரியான புரிதல் இன்றி, பணி ஈடுபாடு வெகுவாகக் குறைந்து விடும்.

பிளஸ் 2 முடித்தவர்கள் பின்னர் தேசிய அள விலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று குழுவின் அறிக்கை கூறுகிறது - இதன் மூலம் பாடத் திட்டத்தை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படுகிறது. டில்லியில் அமர்ந்து கொண்டு வகுக்கப் படும் பாடத் திட்டம் இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத் திட்டமாகி, இந்தியாவின் அடிப்படைக் கூறான “பன்முகம்” என்பது வெற்று வேட்டாகும்.

நம் நாட்டில் உயர் கல்வியின் தரத்தை உயர்த்த, தலைசிறந்த வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பெய ரால், கல்வியில் தாராளமயம் புகுந்து விடும்; கல்வி முற்றிலும் வணிக மயமாகி விடும்; கல்விக் கட்டண உயர்வுக்கு வழி ஏற்பட்டு விடும்; உயர் கல்வி செல் வந்தர் வீட்டுச் செல்லப் பிள்ளைகளுக்கு மட்டுமே உரிய தனி உடைமையாகி, பணக்காரக் கல்வி, ஏழைக் கல்வி என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடும். 

ஆசிரியர்களைப் பொறுத்தவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் கட்டாயமாக உரிமம் (லைசென்ஸ்) அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்ற விதியை உருவாக்க வேண்டும்; மேலும் ஒவ்வொரு பத்தாண்டுக்குப் பிறகு மேற்கண்ட ஆசிரியர்கள் தேர்வு எழுதி தங்கள் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற விதியையும் உருவாக்க வேண்டும் என்றும்; ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் ஒவ்வொரு அய்ந்து ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயமாகப் பயிற்சி பெற வேண்டும் என்றும் பரிந்துரைத்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஒருவகை எந்திரத் தன்மையைத் தோற்றுவிப்பதோடு, காலப் போக்கில் கற்பித்தலில் சலிப்பையும், விரக்தியை யும் ஏற்படுத்திவிடும்.

இந்திய நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படும் வரை “கல்வி” மாநிலப் பட்டியலில்தான் இருந்து வந்தது. நெருக்கடி காலத்தில்தான், மாநில உரிமைகளில் ஆக்கிரமிப்பு செலுத்திடும் விதமாக, கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கல்வியில் ஒன்றிய அரசின் தலை யீடுகள் அதிகரித்து வருகின்றன. பாடத் திட்டம் வகுப் பதிலும், கற்க வேண்டிய மொழிகளை முடிவு செய்வ திலும், மாநிலங்களின் விருப்பத்திற்கு மாறாக, ஒன்றிய அரசு திணிப்பு நடவடிக்கையில் இறங்கி வருகிறது.

கல்வித் துறையில் அதிகாரிகளை நியமிக்க “இந்தியன் எஜுகேஷனல் சர்வீஸ்” தேர்வு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத் தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே கல்வித் துறையில் அதிகாரிகளாக பணி அமர்த்த வேண்டும் என்றும்; மேல்நிலைக் கல்வி முடித்த அனைவரும் அகில இந்திய அளவில் ஒரு பொது நுழைவுத் தேர்வினை எழுதி, அதில், அவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்கள் எந்த ஒரு உயர் கல்வியிலும் சேர முடியும் என்ற பரிந்துரைகள் மாநில உரிமைகளை மறுப்பவை; ஆதிக்க எண்ணத்தைப் பிரதிபலிப்பவை.

தற்போது வகுக்கப்பட்டிருக்கும் “புதிய கல்விக் கொள்கை” வெளிப்படைத் தன்மையோடும், ஜன நாயக அடிப்படையிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கருதுவதற்கு இடமில்லை.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாதத் தலைப்புகளை இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. நாடு முழுவதும் இதுகுறித்த விவாதம் நடத்தப்பட்டதாக மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கூறுகிறது. ஆனால் யாரிடம், எப்போது நடந்தது? அதில் கூறப்பட்ட கருத்துகள் என்னென்ன என்பதை அரசு வெளியிட மறுக்கிறது. கருத்துக் கேட்பு நடத்தப் பட்டதாக கடந்த ஒன்றரை ஆண்டுகள் எந்தச் செய் தித் தாளிலும் செய்திகள் வரவில்லை. பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் இது குறித்த எந்தத் தகவலும் தெரியவில்லை. திரட்டப் பட்டதாகச் சொல்லப்படும் கருத்துகளை எல்லாம் தொகுத்து பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையினையும் இந்திய அரசு வெளியிட மறுக்கிறது. 

“மத்திய அரசால் நியமிக்கப்பட்டு, பரிந்துரைக்கப் பட்டுள்ள டி.எஸ்.ஆர். சுப்ரமணியன் கமிட்டியின் புதிய கல்விக் கொள்கையில் உள்ள முக்கியமான ஆபத்துகளில் ஒன்று, இந்தியா முழுமைக்குமான புதிய இந்தியக் கல்விப் பணி சர்வீஸ் ஒன்றைத் துவக்கி, அதிக தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் தேர்வு என்று கூறி, பொத்தாம் பொதுவில், தற்போது மாநிலங்களின் தனி கலாச்சாரம் , சமூக நீதி, முன் னேற்றம் - இவைகளைப் பாதிக்கும் மறைமுகமான தொரு அபாயத்தை நடைமுறைப் படுத்த திட்ட மிட்டுள்ளனர்”“இதன் மூலம் ஹிந்தி, சமஸ்கிருத மொழியையும், கலாச்சாரத்தையும் திணிப்பதை - மேலும் எளிதாக்கிடவே மறைமுகமாக ஆழ்ந்த உள்நோக்கத் துடன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. “சமூக நீதி"ப் போராட்டத்தின் பயனாகக் கிடைத்த இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து சமூக நீதித் திட்டங்களும் செயலற்றதாக ஆக்கும் கொள்கை முன் மொழிவுகள் இடம் பெற்றுள்ளன”.

“மானியம் ஒழிப்பு, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கிய நிலைக்குத் தகுந்தாற்போன்ற கல்வி உதவித் தொகை என்ற அரசமைப்புச் சட்ட நோக்கத்திற்கு மாறாக தகுதி அடிப் படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான கல்வி உதவி என்ற முன் மொழி வும்; அரசு இனி புதிதாக உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்காது, பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நிதி முதலீடு செய்து இலாபம் ஈட்டவும் ஆசிரியருக்கோ, மாணவர் களுக்கோ சிக்கல் உருவானால் நீதிமன்ற தலையீடு இல்லாமல் நடுவர் மன்றம் வழக்குகளை தீர்க்கக்கூடிய மிக ஆபத்தான கொள்கை முன்மொழி வும் உள்ளது

புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழ கத்திற்குள் புகுந்து, “கல்வியிற் சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது.

- கலி. பூங்குன்றன்


No comments:

Post a Comment