'இந்து தமிழ் திசை'க்கு ஒரு மறுப்பு யாருக்குச் சேவகம் செய்ய ஆசை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 22, 2022

'இந்து தமிழ் திசை'க்கு ஒரு மறுப்பு யாருக்குச் சேவகம் செய்ய ஆசை!

மின்சாரம்

திராவிட இயக்கங்களைக் குறை சொல்ல, குதர்க்கம் பேச பார்ப்பனரல்லாதாரையே பிடித்து எழுத வைத்து, நம்மோடு மோத வைக்கும் பார்ப்பனியப் போக்கோடு செயல்படும் 'இந்து தமிழ் திசை' இம்முறையும் செல்வ புவியரசன் என்பவரைப் பிடித்து எழுத வைத்திருக்கிறது. அவரும் தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையில் தந்தை பெரியார் நூல்களை உலக - இந்திய மொழிகளில் மொழி பெயர்க் கப்படும் அறிவுடைமையை முன் வைத்து தன் பேனாவை சுழற்றியிருக்கிறார். (22.3.2022 பக்கம் 6)

அரசிடம் நிதிச் சவால்களின் அழுத்தமும் நிறைந்த காலத்தில் சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதி நிலை அறிக்கை - இவை அனைத்தையும் தாண்டி பெரியாரை முன்னிட்டுக் கவனம் விலகி விட்டதாம் - எழுதுகிறது இந்து தமிழ் திசை.

ஒரு பார்ப்பன ஏட்டில்  இது போன்றவர்களை வேலைக்கு அமர்த்தி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, திராவிட இயக்கத்தின்மீது வேகமாக சேற்றை வாரியிறைக்கும் நபர்களைத் தேடிப் பிடித்து வைத்திருப்பது பார்ப்பனீயம் அல்லாமல் வேறு என்ன?  

எத்தனை ஊடகங்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைகளையும் தாண்டி, பெரியார் நூல்கள் மொழிபெயர்க்கப்படுவது பற்றி கவனம் செலுத்தியிருக்கின்றன? பட்டியலிடத் தயாரா?

பெரியாரை முன்னிறுத்துவதாகவே வாதத்துக்கு  வைத்துக் கொள்வோம் - அதில் என்ன குறை கண்டு மீசை துடிக்க வேண்டும்?

இதில் இடைஇடையே பெரியாரைப் புகழ்வது போல சில சொற்கள் - பார்ப்பனீயம் நம்மினத்தில் எப்படியெல்லாம் நாடகமாடுகிறது இந்த 2022லும்.

பெரியாரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அனைத்துப் பெரியாரியர்களும் கோரிக்கை வைத்துள்ளார்களாம். அதை ஏன் செய்யவில்லை அரசு, ரொம்ப தான் ஆவேசப்படுகிறார்  'இந்து தமிழ் திசை' எழுத்தாளர். 

யார் யார் அந்தப் பெரியாரியர்கள்? அவரின் கற்பனைக்குத்தான் வெளிச்சம்! 

இதில் ஆனைமுத்து அவர்களை கொண்டு வந்து முட்ட விடுவது ஏன்? அவர் அளவுக்கு அதை செய்தார் அவை தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் மட்டுமே. முழுமையானதல்ல. அதனை எதிர்நிலைக்கு வைப்பது சிண்டு முடியும் வேலைதானே!

பெரியாரின் நூல்கள் முழுமையாக வெளிவர வில்லையாம். இப்படி எழுதுகிறவர்   பெரியார் திடலுக்குள் நுழைந்தவுடன் வரவேற்கும் திராவிடன் புத்தக நிலையத்திற்குள் வலம் வந்து பார்க்கட்டும்.

பெரியாரின் 'குடிஅரசு' தொகுப்புகள் முழுவதும் (1925-1949) 42 களஞ்சியங்களாக வெளிவந்து காழ்ப்பின்றிக் காண்போரின் கண்களை உறுத்தும்.

தலைப்பு வாரியாக பெரியாரின் கருத்துகள் அடங்கிய 38 தொகுப்புகள் - அவர்களின் அறியாமை இருளை விரட்டும்.

பெரியாரின் பொருளியல் தத்துவத்தைத் தலைப்பாகக் கொண்டு டாக்டர் சாந்தி நாகநாதனின் பி.எச்.டி. பட்டம் பற்றி அறியாத பாமரர்களை என்ன சொல்ல!

தந்தை பெரியாரின் படைப்புகள், தந்தை பெரியாரைச் சார்ந்த நூல்களின் வரிசை 767 என்பது இவர்களுக்குத் தெரியுமா?

1962 தொடங்கி 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் மலர்கள் வரலாற்றுக் கருவூலமாக வந்து கொண்டு இருப்பதைக் கண்ணால் கண்ட துண்டா? தந்தை பெரியாரின் ஒலிப் புத்தகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? பெரியார்தம் ஒலி நாடாக்களைக் கேட்டதுண்டா?

பெரியார் திடலில் 1974 முதல் இயங்கி வரும் பெரியார் நூலகம் - ஆய்வகத்தினைப் பயன்படுத்தி எத்தனை எத்தனை எம்.பில் பட்டங்கள். முனைவர் பட்டங்கள் மூளையைக் கொஞ்சம் கசக்கி விட்டுப் பார்க்கட்டும்!

ஆய்வாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, ஆ. இரா. வேங்கடாசலபதிகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்; அண்மையில் தோழர் திருமா வேலனால் எழுதப்பட்ட "இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?" (2 தொகுப்பு) என்ற அரிய நூல்களின் தாய் வீடு - பெரியார் திடல் நூலகம், ஆய்வகம் அல்லவா! ஓகோ இது பெரியார் அறக்கட்டளை சார்பில் நடக்கிறதா என்று கேட்காமல் இருந்தால் சரி.

நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கில நூல்கள் வெளியிடப்பட்டுள்ள விவரமாவது புரியுமா?

இந்தி, பிரெஞ்சு, கன்னடம், மராத்தி, ஜெர்மன், மொழிகளிலும் வெளி வந்துள்ளது குறித்து செவி வழித் தகவலாவது தெரியுமா?

திராவிடர் கழகம், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் போல் நூல்கள் வெளியிடுவது குறித்து முத்தமிழ் அறிஞர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முகம் அகம் மலர்ந்து, பாராட்டியதுண்டே!

ஒருக்கால் தோழர் புவியரசன் கூறும் பெரியாரியர் களின் பட்டியலில் கலைஞர் அவர்கள் இடம் பெற மாட்டாரோ!

பெரியார் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டுமாம் - அப்படிக் கூறும் இவர் அறிந்த பெரியாரியர்களின் பட்டியலில் இப்பொழுது தோழர் செல்வ புவியரசனும் இடம் பெறுவதில் அவருக்கு மட்டிலா மகிழ்ச்சியோ!

இப்பொழுதுகூட பல பதிப்பகங்களும் தந்தை பெரியார் நூல்கள் வெளியிட்டுக் கொண்டு தானே உள்ளன. அண்மையில் சென்னையில் நடந்த புத்தகச் சந்தையின் 400 கடைகளில் 186 கடைகளில் பெரியார் நூல்கள் அணி வகுத்தனவே! அரசுடைமை ஆக்கப்படாமலேயே பல பதிப்பகங்களாலும் வெளியிடப்பட்டவைதானே இவை.

பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அதற்கான பெருந் தொகையை திராவிடர் கழகத்திற்கோ பெரியார் அறக்கட்டளைக்கோ தமிழ்நாடு அரசு அளித்திருந்தால் இந்த ஓட்டை வாய்களின் ஒழுகும் பேனாக்கள் எப்படி எப்படி எல்லாம் உளறிக் கொட்டியிருக்கும் - எழுதிக் கொட்டியிருக்கும்!

பெரியார் நூல்களுக்காக பணம் பெறுவதா? என்று நீட்டி முழங்குவார்கள்.

நோக்கம் - தந்தை பெரியாருக்குப் பிறகும் இயக்கம் வலிவுடன், பொலிவுடன் நடக்கிறதே என்ற ஆத்திரத்தில் துடியாய்த் துடிக்கும் பார்ப்பனீயத்திற்குக் கிடைத்த கைத்தடிகளுக்கான சடகோபம் தானோ!

மகாராட்டிர அரசு அண்ணல் அம்பேத்கர் நூல்களை வெளியிட்ட போது அம்மாநில மக்கள் மகிழ்ந்து ஏந்தினார்களே! அந்த பண்பு 'இந்து தமிழ் திசை' ஏடுகளுக்கு இல்லையே! எப்படி இருக்கும் ஆரிய ஏட்டுக்கு?

"இப்போது பட்ஜெட் நேரம், பெரியார் 21 மொழிகளுக்குச் செல்லப் போகிறார் என்பதே பேச்சாக இருக்கிறது. சுமார் 3 லட்சத்து 33 ஆயிரம் கோடியை மொத்தத் திட்டச் செலவாகக் கொண்ட ஒரு நிதி நிலை அறிக்கையின்மீதான விவாதங்களை ரூ.5 கோடிக்கான ஒரு திட்டம் திசை திருப்பிக்கொண்டு விட்டது." 

கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விட்டதே! இதனைத் தானே ஒரு 'சூத்திர' எழுத்தாளரிடமிருந்து பூணூல்கள் எதிர்பார்க்கின்றன.

பெரியார் உயிரோடு இருந்த காலத்தில் இப்படி நடந்திருந்தால் அவரே இதை விரும்பி இருக்க மாட்டார் என்று மங்களம் பாடியிருக்கிறார்.

பெரியாரோடு இருந்து அவரை அப்படியே அறிந்து தெளிந்த அறிஞர் திலகங்கள் இவர்கள் - நம்பித் தொலையுங்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, சட்டமன்ற உறுப்பினர்  திரு. முனுஆதி 'பெரியாருக்கு தியாகி மான்யம் கொடுக்கப்படுமா?' என்று வினா எழுப்பியபோது "இந்த அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை" என்றாரே! அப்பொழுது சென்னைப் பொது மருத்துவமனையில் இருந்த தந்தை பெரியார், "என் வலி  நீங்கியது" என்று மகிழ்ச்சி அடைந்த வரலாறு எல்லாம் அரைவேக்காடுகளுக்குத் தெரியுமா?

ஒரு பொதுக் கூட்டத்தில் மக்கள் குறைவாக இருந்து இயக்க நூல்கள் அதிகமாக விற்பனை ஆகியிருந்தால்  "இது உபயோகமான கூட்டம்" என்றும், கூட்டம் அதிகம் இருந்து நூல் விற்பனை சரியாக இல்லாவிடின் "உபயோகமற்ற கூட்டம்" என்பது தந்தை பெரியாரின் கணிப்பு!

இதற்குள்ளிருப்பது வியாபாரக் கண்ணோட்ட மல்ல; கருத்துப் பிரச்சாரமே!

"மண்டைச் சுரப்பை உலகு தொழும்" என்று தந்தை பெரியாரைப் பற்றிப் புரட்சிக் கவிஞர் பாடினார். பெரியார் கருத்துக்கள் உலகெங்கும் பரவக் கூடாதா - உங்களுக்கென்ன வலி?

21 மொழிகளில் தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பு பரவுகிறது என்கிறபோது, முற்போக்காளர்களும், பகுத்தறிவுச் சிந்தனையாளர்களும் மனித உரிமை யாளர்களும், சமூக நீதியாளர்களும், பாலியல் நீதிக் கொள்கையாளர்களும் சமதர்ம சமத்துவவாதிகளும் மன நிறைவோடு மகிழ்ச்சியின் எல்லையைத் தொடுவார்கள்.

இவற்றிற்கு எதிரானவர்கள் 'இந்து தமிழ் திசை' போலும்! புவியரசர்களும் புலம்புவார்கள்.

- இவர்களிடம் விழிப்பாக இருப்பது நல்லது!


No comments:

Post a Comment