பெரியாரை மறந்தால் தமிழ்நாடு பிணமாகும் - பெரியாரைப் பார்க்காதவர்கள் ஆசிரியர் வீரமணியைப் பாருங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

பெரியாரை மறந்தால் தமிழ்நாடு பிணமாகும் - பெரியாரைப் பார்க்காதவர்கள் ஆசிரியர் வீரமணியைப் பாருங்கள்!

வேலூரில் தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் இலட்சிய முழக்கம்

வேலூர், ஆக.27தந்தை பெரியாரை மறந்தால் தமிழ்நாடு பிணமாகும் என்றும், பெரியாரைப் பார்க்காதவர்கள் நமது ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாருங்கள் என்றும், உலகத்திலேயே தியாகம் செய்ய முடியாதது இளமை - அதனையே தியாகம் செய்தவர் அன்னை மணியம்மையார் என்றும் தி.மு.. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சருமான மாண்புமிகு துரைமுருகன் இலட்சிய முழக்க மிட்டார்.

நீட்தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? கருத்தரங்கம்

கடந்த 24.10.2021 அன்று காலை வேலூரில், பேபி மகாலில் நடைபெற்றநீட்' தேர்வு ஒழிக்கப்படவேண்டும் ஏன்? எதற்காக? என்ற கருத்தரங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு அமைச்சருமான மாண்புமிகு மானமிகு துரைமுருகன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

நம்முடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழினத் தலைவர் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் மானமிகு அண்ணன் வீரமணியார் அவர்களே,

இந்நிகழ்ச்சியின் தலைவர் வேலூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சிவக்குமார் அவர்களே, வரவேற்புரையாற்றிய இளங் கோவன் அவர்களே, தொடக்கவுரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய துரை.சந்திரசேகரன் அவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றி அமர்ந்திருக்கக்கூடிய  நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி கதிர் ஆனந்த் அவர்களே,

சட்டப்பேரவை உறுப்பினர்கள் கார்த்திகேயன் அவர்களே, அமுலு அவர்களே,

மாவட்ட  தி.மு.. அவைத் தலைவர் முகம்மது சகி  அவர்களே,

மற்றும் உரையாற்றிய நண்பர்களே, குழுமியிருக்கின்ற பெரியவர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனை வருக்கும் முதற்கண் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி கதிர் ஆனந்த் உரையாற்றும்பொழுது, கூட்டத்தைப்பற்றி குறிப்பிட்டு, நகைக் கடையில் கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்; ஜவுளிக் கடையில் கூட்டம் அதிகம் இருக்கும் என்றார்.

ஆனால், இந்த மண்டபம் நிறைந்திருப்பதைப் பார்த்தால், நகைக் கடையில்தான் கூட்டம் அதிகமாக இருக்கிறது இன்றைக்கு. ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தை, இவ்வளவு பெரிய மண்டபத்தில், திராவிடர் கழகம் சார்பில் நடைபெறுகின்ற நிகழ்ச்சியில் நான் கண்டதில்லை.

திராவிட இயக்கத்தோடு

நீண்ட நெடுங்காலம் தொடர்புடைய மாவட்டம் வேலூர்

எனவே, அதுவே மக்களுக்கு இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்ற அறிவு, தெளிவுக்கு முதற்காரணமாகும். நம்முடைய வேலூர் மாவட்டம் திராவிட இயக்கத்தோடு நீண்ட நெடுங்காலம் தொடர்புடைய மாவட்டம்.

இந்த மாவட்டத்திலேதான், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பல வரலாற்றுச் செய்திகள் நடை பெற்றிருக்கின்றன. எனக்குத் தெரிந்த வரையில், அன்னை மணியம்மையார் அவர்கள், நம்முடைய வேலூரைச் சார்ந்தவர்கள். இன்னும் நெருக்கமாகச் சொன்னால், லத்தேரிதான் அவருடைய சொந்த ஊர். அதற்குப் பிறகு வேலூரில் இருந்தார்கள். பிறகு அய்யா அவர்களை மணந்தார்கள்; அதையொட்டி கழகத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது.

திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதற்குப் பின்னர், அதிலிருந்து சம்பத் அவர்கள், விருதம்பட்டியில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஏற்பட்ட தகராறின் காரண மாக, அவர் தமிழ்த் தேசிய கட்சியைத் தொடங்கினார்.

அண்ணாவா - காமராசரா?

யார் திறந்து வைக்கவேண்டும்?

ஒரு காலத்தில், காந்தியாரை, அவருடைய சிலை இன்றைக்குக் கோட்டை மைதானத்தில் இருக்கிறது. அந்த சிலையை யார் திறக்கவேண்டும் என்று முனிசிபாலிட்டியில் ஒரு பெரிய விவாதம் வந்தது. அறிஞர் அண்ணா திறந்து வைக்கவேண்டும் என்று, மறைந்த சாரதி அவர்களும், நம்முடைய தேவராஜ் அவர்களும், மற்ற கழக உறுப்பினர்களும் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

காமராசரே, அந்த சிலையை திறக்கவேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் தீர்மானம் கொண்டு வந்தார்கள்.

அப்பொழுது காங்கிரஸ் கட்சி பலமாக இருந்த நேரம். ஆனால், தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்த நேரத்தில், ஓரிரு வாக்கு வித்தியாசத்தில், அண்ணா அவர்கள் திறக்கலாம் என்ற தீர்மானம் நிறைவேறியது.

அறிஞர் அண்ணா அவர்கள் அந்த அழைப்பை ஏற்று, வேலூர் மைதானத்தில் இருக்கின்ற காந்தியார் சிலையைத் திறந்து வைத்ததும் இங்கேதான்.

‘‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு'' என்று சொன்ன அற்புத வார்த்தையையும் அண்ணா அவர்கள் இங்கேதான் தெரிவித்தார்.

அண்ணா அவர்கள் அன்றைக்கு ஆற்றிய உரை, ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரை.

எனவே, இப்படிப்பட்ட வரலாறுகள் இந்த வேலூருக்கு உண்டு.

அதுமட்டுமல்ல, விவசாயப் போராட்டத்தில், எல்லாத் தலைவர்களும் ஒவ்வொரு ஊருக்குச் சென்று போராட்டம் நடத்தினார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள், வேலூர் கோட்டையின் வாயிலில் நின்று மறியல் செய்தார். ஆகையால்தான், அண்ணா அவர்கள் சிறைபட்டு, வேலூர் சிறைச்சாலையில் இருந்தார். அந்த வரலாற்று நிகழ்வும் வேலூரில்தான்.

அண்ணா அவர்கள் சிறைச்சாலையில் இருக்கும்பொழுது தான், சீன ஆக்கிரமிப்பு நடைபெற்றது. எனவே, நாட்டிலிருப்ப வர்களுடைய எல்லோருடைய உழைப்பும் தேவை என்று எண்ணி, அண்ணா அவர்களை சிறைச்சாலையிலிருந்து விடு வித்தார்கள்.

அடைந்தால் திராவிட நாடு -

இல்லாவிட்டால்,  இடுகாடு

அன்று மாலை கோட்டை மைதானத்தில் கூட்டம் நடை பெற்றது. அந்தக் கூட்டத்தில்தான், ‘‘நாம் கேட்டு வந்த திராவிட நாடு - அடைந்தால் திராவிட நாடு - இல்லா விட்டால்,  இடுகாடு'' என்றெல்லாம் முழங்கி வந்த, திராவிட நாடு கோரிக்கையை எதிர்த்து ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். திராவிட நாடு என்று கேட்டால், ஆயுள் தண்டனை போன்ற சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அதேநேரத்தில், சீன ஆக்கிரமிப்பு நடைபெற்றது.

இந்த இரண்டிலிருந்தும் கழகத்தைக் காப்பதற்காக, அண்ணா அவர்கள் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சொன்னார்கள், ‘‘வீடு இருந்தால்தான், ஓடு மாற்ற முடியும்; நாடு இருந்தால்தான் கட்சி நடத்த முடியும்'' எனவே, நாட்டை, கட்சியை நடத்த திராவிட நாடு கோரிக்கையை நான் ஒத்தி வைக்கிறேன் என்ற ஒரு வரலாற்றுப் பிரகடனத்தையும் அண்ணா அவர்கள் வேலூரில்தான் தெரிவித்தார்கள்.

ஆக, இப்படி பல செய்திகள்!

இதற்கு முன்பு பார்த்தால், நம்முடைய மானமிகு அண்ணன் வீரமணியார் அவர்கள் சொல்வார்கள்.

திருப்பத்தூரில் ஒரு மாநாடு - அதையொட்டி நடந்தவைகள் பற்றி நிறைய செய்திகள் இருக்கின்றன.

ஒன்றுபட்ட நம்முடைய வேலூர் மாவட்டத்தில்தான், திருவண்ணாமலை - அதற்குப் பிறகு காஞ்சிபுரம் மாநாட்டிலிருந்து பெரியார் அவர்கள் வெளியேறியது இதுபோன்ற செய்திகளை யெல்லாம் அவர்கள் விளக்கிச் சொல்ல இருக்கிறார்.

மற்ற மாவட்டத்திற்கு இருப்பதைவிடநமக்கு அதிக உரிமை உண்டு!

ஆக, நம்முடைய மாவட்டம், இந்த திராவிட இயக்கத்தோடு,  வரலாற்றில் ஏற்பட்ட விழுமியங்களோடு சம்பந்தப்பட்ட ஒன்று. எனவே, மற்ற மாவட்டத்திற்கு இருப்பதைவிட, நமக்கு அதிக உரிமை உண்டு. இது நம்முடைய சொந்த மாவட்டம் - திராவிட  இயக்கத்திற்கு என்ற பெருமையோடு, நண்பர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இன்றைய நிகழ்ச்சியில்,  நீட் தேர்வு ஏன் ஒழிக்கப்படவேண்டும் என்ற கருத்தரங்கத்தில், ‘கற்போம் பெரியாரியம்'', ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தகங்களை அறிமுகம் செய் தார்கள். அந்தப் புத்தகங்களைப்பற்றி, நம்முடைய சந்திரசேகரன் போன்றவர்கள் எல்லாம் நிறைய சொன்னார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் இரண்டு செய்திகளைப்பற்றித் தான் நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன்.

நம்முடைய ஆசிரியர் அவர்கள், ‘‘வாழ்வும் பணியும்'' என்ற ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதைத் தயாரித்தவர் பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள். அந்த ‘‘வாழ்வும் பணியும்'' என்னவென்று கேட்டால்,

பேராசிரியர் நம்.சீனிவாசனின்  ‘‘வாழ்வும் பணியும்!''

எம்.லிட் படிப்பு படிப்பதற்காக, ஆராய்ச்சிக் கட்டுரைகளை (தீசஸ்) பல்கலைக் கழகத்தில் அளிப்பார்கள். அப்படி ஒரு பட்டதாரி,  நம்முடைய ஆசிரியரைப்பற்றி  ஆய்வு செய்து, அந்தப் பட்டதாரி அளித்திருக்கின்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் தொகுப்பு தான் ‘‘வாழ்வும் பணியும்'' என்ற புத்தகத்தில் அடங்கியிருக்கிறது.

அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அந்தக் கட்டுப்பாட்டிற்குள்தான் அவர் அந்த கட்டுரை களை எழுதியிருக்கிறார்.

எங்கே கொஞ்சம் ஓங்கி குரல் கொடுத்திருக்கலாமோ அங்கே இல்லை; எங்கே கொஞ்சம் தாழ்ந்திருக்கலாமோ, அங்கே மிகுந்திருக்கிறது.

காரணம், அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை, மூன்று பேராசிரி யர்கள் திருத்துவார்கள். அப்படி திருத்துகின்ற காரணத்தினால், அந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.

ஆக, ஒரு பல்கலைக் கழகத்தில், மானமிகு அண்ணன் வீரமணியாரைப்பற்றி ஆய்வுக் கட்டுரைகள் - அதனுடைய விளைவுதான் நூலாக வெளிவந்திருக்கிறது.

அதற்கு முன்பு, நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இரண்டு விஷயங்கள்.

50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையில் பணியாற்றி இருக்கிறேன்

ஒன்று, முதலில் நமக்கு, நாம் யார் என்பதே மறந்து போய் விட்டது. நான் சட்டப்பேரவையில்கூட சொன்னேன்,

இன்றைக்கு நான் எம்.., பி.எல்., படித்திருக்கிறேன்; வழக்கு ரைஞராகி இருக்கிறேன். 50 ஆண்டுகாலம் சட்டப்பேரவையில் பணியாற்றி இருக்கிறேன். புகழ்பெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச்செயலாளராக இருக்கிறேன். இது என்னுடைய தகுதிக்கு, எங்கள் கிராம வாழ்க்கைக்கு, எங்களைப் போன்ற ஒரு குடியானவன் மகனுக்குக் கிடைக்கக் கூடியதல்ல.

ஏர் உழுதவன், ஏர் உழுதுகொண்டே இருந்தான்

செருப்புத் தைக்கிறவன், செருப்புத் தைத்துக் கொண்டே இருந்தான்

பறை அடிக்கின்றவன், பறை அடித்துக்கொண்டே இருந்தான்

பம்பை அடித்தவன், பம்பை அடித்துக் கொண்டே இருந்தான்

அவனவன் அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்; இப்படி ஒரு நிலைமை இருந்தது நாட்டில். படிப்பறிவே இல்லாமல் இருந்தார்கள். எனக்குத் தெரிந்தே எங்கள் கிராமத்தில் பள்ளிக் கூடமே கிடையாது. எங்கள் கிராமத்திற்குக் கார் போவதற்கு வசதி கிடையாது. அந்த கிராமத்திலிருந்து தப்பித் தவறி நான் படித்தேன் என்றால், கொஞ்ச நஞ்ச கஷ்டமல்ல.

அதற்கு என்ன காரணம்?

தேட் பாரம் வரையில், மூன்று ரூபாய் சம்பளம்

தாசில்தாரிடம் கையெழுத்து வாங்கிக் கொடுத்தால் ஒன்றரை ரூபாய் சம்பளம் மாதத்திற்கு.

அந்த ஒன்றரை ரூபாய் கட்ட முடியாமல், பெயரை எடுத்துவிடுவார்கள் சில நேரங்களில்.

ஃபோர் பார்முக்கு 6 ரூபாய் சம்பளம்

இந்த லட்சணத்தில், ரயில் ஏறி காட்பாடிக்கு வந்து, படித்து விட்டு, மூன்று மைல் நடந்து போகவேண்டும்.

அந்த நிலைமை எனக்குத் தெரிகிறது. நான் எங்களுடைய ஊரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள குடியாத்தத்திற்கு நடந்தே சென்று, என்னுடைய அம்மா கட்டிக் கொடுக்கும் கட்டுச் சோற்றை சாப்பிட்டுவிட்டு, தாலுகா அலுவலகத்தில் படுத்திருந்து விட்டு, மறுநாள் முற்பகல் 11 மணிக்கு தாசில்தார் வந்தால், அவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு, மீண்டும் ஊருக்கு வந்து பள்ளிக்கூடத்தில் கொடுத்தால் சம்பளம் உண்டு.

நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?

நமக்கு ஏன் இந்த நிலைமை?

எனக்கு அந்த கஷ்டம் தெரிந்தது; நான் கான்வேகேசன் போகும்வரையில், ஷூ போட்டதில்லை; செருப்பு மட்டும்தான் அணிந்தேன். ஆகவே, அந்தக் கஷ்டம் எனக்குத் தெரிந்தது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? நமக்கு ஏன் இந்த நிலைமை? என்று கேட்டால்,

நாம் பல ஆண்டுகாலம் படிக்காமல் இருந்தோம்; இப்பொழுது படிக்க ஆரம்பித்துவிட்டோம் - சலுகை கிடைத்ததால், படித்தோம்.

ஆனால், அந்தக் கஷ்டம் என் மகனுக்குத் தெரிகிறதா? நான் கான்வேகேசனில்தான் ஷூ வாங்கினேன். அவன் பிறந்த அன்றே அவனுக்கு ஷூ போட்டுவிட்டார்கள்.

நான் கஷ்டப்பட்டு படித்தேன் - அவன் டான்பாஸ்கோ பள்ளியில் படித்தான்.

நான் இப்படிப் படித்தேன் -அவன் லயோலாவில் படித்தான்.

நான் இப்படிப் படித்தேன் - அவன் அமெரிக்காவில் உள்ள வகோயா பல்கலைக் கழகத்தில் படித்தான்.

இப்பொழுது இருக்கின்ற பிள்ளைகளுக்கு கம்யூனல் ஜி..வைப்பற்றி தெரியுமா?

ஓர் உதாரணத்திற்குச் சொல்கிறேன்.

இப்பொழுது இருக்கின்ற பிள்ளைகளுக்குப் பெரியார், திரா விடர் கழகம், கம்யூனல் ஜி..வைப்பற்றி தெரியுமா? என்றால்,

தெரியாது என்கிறார்கள்.

அப்பாவை, டாடி என்கிறார்கள்.

அதற்கு என்ன காரணம்?

தவறு அந்தப் பிள்ளைகளின்மேல் இல்லை; நம்மீதுதான்.

நம்முடைய பிள்ளைகளுக்கு அதை நாம் சொல்லிக் கொடுக்கவில்லை. நம்முடைய பிள்ளைகளுக்கு யார் நாமென்று சொல்லிக் கொடுக்கவில்லை.

எனக்குத் தெரிந்து, கே.வி.குப்பத்தில், தர்ப்பனம் கொடுக்கின்ற பார்ப்பான் ஒருவர் இருந்தார். அவருக்கு 30 வயதுதான் இருக்கும். என்னுடைய பெரியப்பாவுக்கு 90 வயது இருக்கும்.  காரியம் செய்வதற்காக வந்தார் என்றால், என்னுடைய அப்பாவை, ‘‘டேய், மாணிக்கம்'' என்று கூப்பிடுவான். இப்பொழுது அதுபோன்று கூப்பிட்டால், செருப்பாலே அடிப்பேன்.

ஆனால், இப்படி இருந்த ஓர் இனம் - சொரணையற்று - புத்தி கெட்டு - நாம் யார் என்பதையே மறந்து போயிருந்தோம்.

என்னைக் கேட்டால், உலகத்தில் எத்தனையோ இனங்கள் இருக்கின்றன. ரோமானியா போன்ற பல இனங்கள் இருந்தன.

உலகத்திலேயே மிக உயர்ந்த ஒரு சமுதாயம்

ஒரு காலத்தில், அகமும் புறமும் என்று கண்டு, அந்த அகம் புறத்திலே கலிங்கத்துப் பரணி கண்டு, ஆடி உரைக்க சிலம்புப் பெற்று, பாடி உரைக்க பத்துப் பாட்டுப் பெற்று, இவ்வளவு பெரிய நூல்களையெல்லாம் பெற்று, உலகம் போற்றுகின்ற திருக்குறளைப் பெற்று, யவனத்தோடும், கிரேக்கத்தோடும் நம்முடைய வியாபாரங்களை நடத்தி, யவனர்களை, இந்த நாட்டு வீட்டின் காம்பவுண்டுகளில் அவர்களை வேலைக்காரர்களாக நிறுத்தி வைத்திருந்த ஒரு சமுதாயம் - உலகத்திலேயே மிக உயர்ந்த ஒரு சமுதாயம் - ஆனால், இடையில் என்ன ஆனது?

இடையில் படிக்காத சமுதாயமாக - நாம் யார் என்றே தெரியாமல், நமக்கு சொரணையற்று, புத்தியற்று, மிருகத்தையும் விட கேவலமாக வாடிப் போனது எப்படி?

உயர்ந்த நிலையில் இருந்தோம் - மிக பாதாளத்தில் வீழ்ந் திருக்கின்றோம்.

அப்பொழுது இடையில் என்ன நடந்தது?

சொன்னார்களே, இந்த ஊரில் நூறு ஏக்கர் சொந்தம் ஒருவருக்கு; பெரிய மாடி வீடு, காரோடு வாழ்ந்தவர் ஒருவர், இன்று முதியோர் இல்லத்தில் இருக்கிறார்.

அப்படியென்றால் என்னாயிற்று?

இடையில் என்னவோ ஆகியிருக்கிறது - குதிரை பந்தயத் திற்குச் சென்று பணத்தையெல்லாம் இழந்தான்.

சங்க கால தமிழகம் இடையில் வீழ்ந்தது!

அதேபோன்றுதான், வாழ்ந்த இந்த சங்க கால தமிழகம் இடை யில் வீழ்ந்தது என்று சொன்னால், வீழ வைத்தவன், ஒரு பிரிவினர் -அதுதான் பிராமணப் பிரிவினர் - பார்ப்பனப் பிரிவினர்.

அப்படி என்ன அவன் செய்தான்?

பயமுறுத்தினான்.  நீ இப்படி நடக்கவில்லையென்றால், எமலோகத்திற்குப் போவாய்; இதை நீ செய்யவில்லை என்றால், நரகத்திற்குப் போவாய்; நீ இப்படி செய்யவில்லை என்றால், உன் தலை வெடித்துவிடும்; இதை நீ செய்யவில்லை என்றால், உன்னுடைய பரம்பரையே கெட்டுப் போய்விடும் என்றார்கள்.

நிறைய பேர் சீர்திருத்தம்பற்றி பேசுவார்கள்; வீட்டில் பிள்ளை களுக்கு ஜாதகம் பார்த்துவிடலாம் என்பார்கள்.

எனக்குத் தெரிந்த ஒருவர் பகுத்தறிவுவாதி - ஆனால், வீட்டைப் விட்டுப் புறப்படும்பொழுது, யாராவது எதிரில் வருகிறாரா? என்று பாருங்கள் என்பார்.

அது அவருடைய தவறல்ல. அவருடைய மனதில் அப்படி பதிய வைத்திருக்கிறார்கள். அதுபோன்ற ஒரு நிலைமை, கொஞ்சம் கொஞ்சமாக மயங்க, மயங்கி, குடிப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதற்கே அடிமையாகிவிடுவதுபோல - ஆகிவிடு கிறார்கள்.

தமிழர்களான நாம் நூற்றுக்கு 97 சதவிகிதம் இருக்கிறோம்; நூறுக்கு மூன்று சதவிகிதம் அவன் இருக்கிறான்.

பார்ப்பானுக்கு வேதம் ஓதி, ஓதி பழக்கம். இங்கிலீஷ்காரன் வந்தவுடன், அவர்களுடைய மொழியை, இவர்கள் கற்றுக் கொண்டு, அவர்களிடம் சேர்ந்து, இவர்கள் மடமடவென்று வளர்ந்துவிட்டார்கள். அப்படி வளர்ந்தவர்கள் அவர்கள்; ஆனால், நம்மைப் பார்ப்பதற்கு ஆளில்லாமல் இருந்தோம்.

சோறு போடுகிறேன், விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்றார் டாக்டர் நடேசனார்

யாரோ ஒருவர் ஆயிரத்தில் ஒருவர் போன்று, டாக்டர் நடேசனார் படித்தார்; அவர் சொன்னார், என்னை மாதிரி யாராவது படிக்க வரமாட்டீர்களா? என்று.

வருகிறோம், ஆனால், சென்னையில் யார் சோறு போடுவார்கள் என்று கேட்டனர்.

சோறு போடுகிறேன், விடுதியில் தங்கி படிக்கிறாயா? என்றார்.

அப்படித்தான் வெளியூரில் இருந்து தலைநகரில் தங்கி படித்தவர்கள் ஏராளம். அந்தப் பிள்ளைகளுடைய கான் வேகேசனுக்குத் தலைவர்களை அழைத்து, அதன்மூலமாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த எண்ணம் ஏற்பட்டு, முதன் முதலாக நமக்காக, மேக்னகார்ட்டாவை, ஒரு பிறப்புரி மையை கொடுத்தவர் வெள்ளுடை வேந்தர் தியாகராயர் அவர்கள்.

அவர்தான் நீதிக்கட்சியை உருவாக்கியவர். பார்ப் பனரல்லாதவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர்.

டி.எம்.நாயர் என்கிற மகத்தான கர்ஜனை புரிகின்ற மனிதர் இருந்தார்.

இப்படி பல பேர் நீதிக்கட்சியில் இருந்தார்கள். அந்த நீதிக்கட்சியை, 1920 இல் ஆட்சியில் அமர வைத்தார்கள். அன்றைக்குத் தந்தை பெரியார் நீதிக்கட்சியில் இல்லா விட்டாலும், பெரியாருடைய யோசனை அவர்களுக்குத் தேவைப்பட்டது.

தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கியவர்கள் நீதிக்கட்சிக்காரர்கள்

அந்த யோசனையின் முதல்தான், நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வாக்குரிமையை வழங்கிய வர்கள் நீதிக்கட்சிக்காரர்கள் - திராவிட இயக்க ஆட்சி.

அப்பொழுதுதான் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். வேலை வாய்ப்பில் நூறு விழுக்காட்டில் 97 விழுக்காடாக உள்ள வர்களுக்கு எவ்வளவு? இஸ்லாமியருக்கு எவ்வளவு? கிறித்தவர் களுக்கு எவ்வளவு? அவாளுக்கு எவ்வளவு? என்று பிரித்து, ஒரு கம்யூனல் ஜி..வை கொண்டு வந்தார்கள்.

அது இடையில் மறுபடியும் வீழ்ந்தது

மறுபடியும் பெரியார் வந்து, தூண்டிவிட்டு, நமக்குக் கிடைத்தது. அப்படி கிடைத்ததுதான் வகுப்புவாரி உரிமை.

அந்த உரிமை கிடைத்ததினால்தான், துரைமுருகனாகிய நான் இந்த மேடையில் நிற்கின்றேன்.

அன்றைக்கு நீதிக்கட்சி, வகுப்புரிமை சட்டத்தைக் கொண்டு வந்திருக்காவிட்டால், அதற்குப் பின்னால் முத்தையா முதலியார் நிறைவேற்றி இருக்காவிட்டால், அன்றைக்கு நான் படித்திருக்க முடியாது. வயல்வெளியில் ஏர் உழுதுகொண்டிருப்பேன்.

ஆக, இது நீண்ட நெடிய வரலாறாகும். இந்தக் கதைகளை யாரும் சொல்வது கிடையாது.

அதற்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள், நீதிக்கட்சி, பணக்காரர்களின் கட்சியாக இருக்கிறது; நாம் ஏழைக் கட்சிக் காரர்கள். அந்த நிலையை மாற்றினார்.

சுயமரியாதை என்ற ஊசி போட்டால்தான் முடியும்

தமிழனைப் பார்த்தார், திராவிட இனத்தைப் பார்த்தார் - இவர்களை நலமுடையவர்களாக ஆக்கவேண்டும் என்றால், முதலில் அவர்களுக்கு என்ன மாதிரி ஊசி போடவேண்டும் என்று பார்த்தார்; பள்ளிக்கூடம் என்ற ஊசி போடலாமா? அந்த ஊசி எடுபடாது. வேறு எந்த ஊசி எடுபடும்? சுயமரியாதை என்ற ஊசி போட்டால்தான் முடியும்.

சுயமரியாதை என்றால் என்ன?

அது சில நேரங்களில் மாட்டிற்குக்கூட வரும்; ஆனால், இந்த மனிதர்களுக்கு வராதா என்று பார்த்தார்; சுயமரியாதையைப்பற்றி சொன்னார்.

பிறகு படிக்க சொன்னார்; ஆக, இந்த சுயமரியாதை ஊசியை போடாமல் அய்யா அவர்கள் விட்டிருந்தால், நாயினும் கீழாக  நம்முடைய இனம் இருந்திருக்கும்.

பெரியாரை மறந்தால்,

தமிழினம் பிணமாகும்!

மனித உயிர் வாழ்வதற்கு, காற்று எப்படி அவசியமோ, தண்ணீர் எப்படி அவசியமோ, அதுபோன்று தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

மூச்சு நின்றுவிட்டால், பிணம் -

பெரியாரை மறந்தால், தமிழினம் பிணமாகும்!

அந்த உணர்வு இருக்கமாட்டேன் என்கிறதே, இந்த நடிகன் பெயரில் ஒரு ரசிகர் மன்றம்; அந்த நடிகன் பெயரில் ஒரு ரசிகர் மன்றம்; நடிகைக்கு ரசிகர் மன்றம் - நான் கேட்கிறேன், யாராவது ஒருவர் டி.எம்.நாயர் பெயரில் ரசிகர் மன்றம் வைத்திருக்கிறீர்களா? வெள்ளுடை வேந்தர் பெயர் உங்களுக்குத் தெரியுமா? பெரியார் தெரியுமா? கைவல்யம் தெரியுமா? பட்டுக்கோட்டை அழகிரி தெரியுமா? பாரதிதாசன் தெரியுமா? எத்தனை பேர் அவர்களுடைய நூல்களைப் படித்திருக்கிறீர்கள்?

ஆனால், ஒரு நடிகனின் திரைப்படம் வந்தால், முதல் நாளே பார்க்கவேண்டும் என்று துடிக்கிறீர்களே, சொரணையற்று போய்விடுவானோ தமிழன் என்று ஒரு பயம் இருந்துகொண்டிருக்கிறது.

வைரக் கலப்பை தந்தை பெரியார்!

அதைத்தான் பெரியாரைப்பற்றி கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதியதை இங்கே படித்துக் காட்டுகிறேன்.

அடிமண்ணை மேல் மண்ணாகவும்,

மேல் மண்ணை அடிமண்ணாகவும்

வரலாற்றில் உழுதுபோட்ட வைரக் கலப்பை பெரியார் என்றார்.

அவாளுக்கு இருப்பதுபோன்ற இனப் பற்று உலகத்தில்  வேறு யாரிடமும்  இல்லை!

ஆனால், ஒன்று, அவாளுக்கு இருப்பதுபோன்ற பற்று உலகத்தில்  வேறு யாரிடமும் நான் பார்த்தது கிடையாது.

நான் காலையில் நடைபயிற்சி செல்லும்பொழுது, அய்யர் மாமி, அய்யங்கார் மாமி எல்லாம் வருவாங்க.

துரைமுருகன் செத்த நில்லுங்கோ என்றார்.

என்ன மாமி எப்படி இருக்கீங்கோ என்றேன்.

நீ பண்றது நன்னாயிருக்கா?

நான் ஒண்ணுமே பண்ணலியே - என்ன நல்லாயிருக்கா? என்றால் என்ன சொல்லுவது என்றேன்.

பெரியவாளை கொன்னுடுவீங்கோ போலிருக்கே?

எந்தப் பெரியவா?

காஞ்சிப் பெரியவாளைத்தான் சொல்றேன்.

ஆமாம், காஞ்சிப் பெரியவா, ஜெயில்லே இருக்கா - அவாளை நாங்க எப்படி கொல்ல முடியும்?

நீங்கதான் உள்ளே வச்சிட்டேளே!

மாமி, உள்ளே வச்சவே அவ - உங்க மாட்டுப் பொண்ணு! எங்களைக் கேட்கறீங்களே மாமி என்றேன்.

உனக்குத் தெரியாது - அவரு உயிருக்கு ஆபத்தாம்!

வத்சலா ஆம்படையா சுவாமியைப் பாத்தாளாம் -

‘‘அவாளிடம், நேத்தைக்கு என்னமோ கொடுத்தா -

எனக்கென்னமோ மாமி, பெரியவா வரமாட்டா போலிருக்கு என்றா என்னிடம்'' என்று சொன்னார் மாமி.

நான் சொன்னேன், பெரியவா செய்த வேலை தெரியுமா? மாமி என்றேன்.

என்ன பண்ணிட்டா? என்று கேட்டாள் மாமி.

பெரியவா, பொம்பள விஷயத்தில் எப்படி?

தப்பென்ன? மகாவிஷ்ணு 16 ஆயிரம் கோபியஸ்தரோடு இல்லையா? முருகன் இரண்டு பெண்டாட்டி வைச்சுல்லியோ, சிவன் தலையில் வைச்சுண்டில்லியோ!

சபாஷ் மாமி! சரி, ஆசை ஏதோ வைச்சுண்டா! கொலை பண்ணலாமா? மாமி.

தப்பென்னங்கேறன்; துஷ்டனுக்கு சிஷ்ட பரிகாரம் பண் ணலியா? முருக பெருமான் சூரசம்ஹாரம் பண்ணான்னில்லியோ - அப்படியிருக்க அவா பண்ணா என்ன தப்பு என்றார்.

ஒரு கொலை பண்றதையே தப்பில்லை என்று பேசுறாளே, அதுபோன்ற ஓர் இனப்பற்று, கால்வாசி நமக்கு இருக்குமா?

கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகள்!

‘‘வெள்ளைச் சூரியனே விரட்ட முடியாத இருட்டைக் கருஞ்சூரியனாய் வந்து விரட்டிய கலகக்காரர் என்பதா?

உடம்பில் ஒட்டிய ஒட்டடைகளை ஆடைகள் என்று கருதிக் கிடந்த திராவிட இனத்தை, தொட்டுத் தூக்கித் துடைத்து அதன் நீண்ட நிர்வாணத்தைச் சுட்டிக்காட்டி, சுயமரியாதை ஆடைசூடிய சூத்திரம் கண்ட சூத்திரர் என்பதா?

400 கோடி மக்களுக்குச் சென்று சேர வேண்டிய சிந்தனை களை வெறும் 4 கோடி மக்களின் மொழியில் பேசிப் பரப்பளவு குறைந்துபோன பாமர மேதை என்பதா?

எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?

192 நாடுகளால் ஆன இந்த பூமியில் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓங்கி ஒலித்த உலகக்குரல் என்பதா?

கேள்விக்கு அப்பாற்பட்ட புனிதங்கள் என்று கருதப்பட்ட கடவுள் - மதம் - ஜாதி - விதி - மரபு என்ற கருத்தாக்கங்கள் மீது ஆயிரம் கேள்விகளை முன்வைத்த அறிவின் ஆழியாகிய அறிவாளி என்பதா?

இவற்றுள் எதுவும் பொய்யில்லை; பெரியார் குறித்து இது போல் எது சொன்னாலும் மிகையில்லை'' என்று சொல்லிவிட்டு,

‘‘முனிவர்களைப்போலவும், தபசிகளைப் போலவும் பெரியார் வெறும் வார்த்தை தானம் செய்து வந்தவர் அல்லர்.

களம் கண்டவர் - கைதியானவர் - ஊர்மானம் காக்க வந்து, தன்மானம் தாக்கப்பட்டபொழுது, தாங்கிக் கொண்டவர். மெய்யைக் காப்பதற்கு, மெய்விருத்தம் கண்டவர்'' என்று ஓர் அற்புதமான உரையை எழுதியிருக்கிறார் வைரமுத்து அவர்கள்.

பெரியாரைப்பற்றி நாம்தான் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் பெரியாரை நன்றாகத் தெரிந்துகொண்டு பாராட்டுகிறார்கள். ஆனால், இங்கே இருப்பவர்கள் அதற்குத் தயாராக இல்லை.

பெரியாருடைய துணிச்சலுக்கு ஒரு நிகழ்வை சொல்கிறேன்.

பெரியாருடைய துணிச்சல்!

1946 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் தந்தை பெரியார் அவர்கள் பேசுகிறார்,

‘‘திராவிடர் கழகம், இந்த நாட்டு மக்கள் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் உழைக்கும் ஸ்தாபனமாகும். திராவிட மக்கள், இந்த ஸ்தாபனத்தைத் தங்கள் நலனுக்கு ஏற்ற ஸ்தாபனம் என்று ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி, திராவிட மக்களுக்கு உழைக்கும் பொறுப்பை, மேலே போட்டுக்கொண்டுதான், கருதிய துறையில் அது தொண்டாற்றி வருகிறது. எல்லோருடைய  ஆதரவும், ஒத்துழைப்பும் வராவிட்டாலும், அது தான் எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுக்கொண்டு தான் வருகிறது.

காரணம் என்னவென்றால், அதன் கொள்கையும், திட மும் தவிர்க்க முடியாதது; யாராலும் எதிர்க்க முடியாததாகும்.

உத்தியோகம், பதவி, தனிப்பட்டவர் நலம் என்பன வாகிய கொள்கையும், திட்டமும் வெற்றி பெறவேண்டு மானால், கோஷ்டி, கூட்டுப் பொறுப்பு, தந்திரம், பித்த லாட்டம் முதலியவை தேவை.

திராவிடர் கழகம் தனிப்பட்டவர் நலனுக்கு இடமே இல்லாத திட்டவட்டமான கட்சியாகும்'' என்றார்.

1946 இல் திராவிடர் கழகம் வளரவேயில்லை. அப்பொழுதே என்ன சொல்கிறார் பாருங்கள், எவனுக்காவது சுயநலம் இருந்தால், உள்ளே வராதீர்கள் என்றார். இந்த தைரியம் வேறு எந்தக் கொம் பனுக்கும் கிடையாது.

மேலும் சொல்கிறார்,

‘‘உத்தியோகம், பதவி எண்ணமே உதிக்கச் செய்ய இட மில்லாத கொள்கை உடையதாகும்'' என்றார்.

அமெரிக்க நாட்டில் ஒரு மனிதநேய இயக்கத்தின் மாபெரும் பேராசிரியர் பால்குஷ் என்பவர், ‘‘மதமும், விஞ்ஞானமும்'' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில்,

‘‘என் ஊரில் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம்; ஆனால், மதத்தைப்பற்றி பேசினால், அவனுக்கு மரண தண்டனை. ஆனால், அந்தத் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார்'' என்று அமெரிக்காவில் இருக்கிறவன் பேசுகிறான், இங்கே இருக்கிறவர்களைப்பற்றி என்ன சொல்வது?

தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது

தந்தை பெரியாரைப் பாராட்டி, யுனெஸ்கோ விருது வழங்கி யிருக்கிறது.

‘The prophet of the new age’,

‘The Socrates of South East Asia’,

 ‘Father of the social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners

இதைவிட வேறு என்ன சொல்வது?

உலகெல்லாம் பெரியாரைப்பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நம்முடைய நாட்டில், அவரைப்பற்றி படிக்க வேண்டும்; தெரிந்துகொள்ளவேண்டும் என்று இல்லை.

இந்தக் கழகம் ஒழிந்தால்,

இனி ஒரு கழகம் தொடராது

1949 இல் தந்தை பெரியார் சொன்னார்,

‘‘இந்தக் கழகம் ஒழிந்தால், இனி ஒரு கழகம் தொடராது. இந்த ராமசாமி போனால், இன்னொரு ராமசாமியைக் காணமாட்டீர்கள். அறிவற்ற அடிமை ராமசாமிகளைத்தான் காண்பீர்கள்.''

தந்தை பெரியாரைப்பற்றி சர்.சி.கே.ரெட்டி

சர்.சி.கே.ரெட்டி அவர்கள் தந்தை பெரியாரைப்பற்றி சொல்கிறார்,

‘‘திரு.ராமசாமி நாயக்கர் ஒரு உண்மையான சிங்கம். அவர் சிங்கத்தின் இதயத்தைப் பெற்றவர். வாழ்க்கையில் அச்சம் என்பதையே அறியாதவர். அவசியம் நேர்ந்தால் எந்தவித தியாகத்திற்கும் தயாராக இருப்பவர்'' என்று சொல்லியிருக்கிறார்.

இப்படிப்பட்ட பெரியார், இப்படிப்பட்ட இயக்கத்தை வளர்த்து, இவ்வளவு பெரிய ஆட்சியைக் கொண்டு வந்து நிலை நிறுத்தியிருக்கிறார்.

பஞ்சாயத்துப் போர்டு தேர்தலில்கூட  நிற்க மாட்டார்கள்

அவருடைய இயக்கத் தோழர்கள் பஞ்சாயத்துப் போர்டு தேர்தலில்கூட நிற்க மாட்டார்கள்.

இயக்கத்தைத் தொடங்குவதற்குமுன் தந்தை பெரியார் அவர்கள் 29 பதவிகளை ஒரே தாளில் தூக்கி எறிந்துவிட்டார்.

ஆனால், அவருடைய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாவிட்டாலும்,  நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும், தன்னுடைய கொள்கையை நிறைவேற்றுவதை வெளியில் இருந்து செய்தவர் பெரியார்.

கம்யூனல் ஜி..வால் எனக்கு மருத்துவப் படிப்பு படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை. இட ஒதுக்கீடு இல்லை என்றால், எனக்கு இடம் கிடைத்திருக்கும் என்று செண்பகம் துரைராஜன் என்கிற பெண் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டது. அவாள்கள் எல்லாம் அவாளுக்கு ஆதரவாக வாதாடினார்கள்.

கம்யூனல் ஜி.. கொண்டு வந்தது தவறு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது; இங்கே இருக்கின்ற வழக்குரைஞர்கள் எல்லாம் அங்கேயும் சென்று வாதாடினார்கள். அங்கே இருப்பவர்கள் யார்? இங்கே சின்னப் பாப்பான் என்றால், அங்கே பெரிய பாப்பான்கள்.

அவன்களெல்லாம் சேர்ந்து கம்யூனல் ஜி.. கொண்டு வந்தது தவறு என்று சொல்லிவிட்டார்கள்.

தமிழ்நாட்டை கிடுகிடுக்க வைத்துவிட்டது

ஆனால், தந்தை பெரியார் என்ற ஒரே ஒரு மனிதர், அன் றைக்கு எடுத்தப் போராட்டம் தமிழ்நாட்டை கிடுகிடுக்க வைத்துவிட்டது.

அவர் நாடாளுமன்றம் செல்லவில்லை; அவருடைய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் நாடாளுமன்றத்தில் இல்லை.

ஆனால், அன்றைய பிரதமர் நேரு சொன்னார், தென்னாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு பெரிய விபரீதத்தை ஏற்படுத்திவிடும். ஆகையினால், அமண்ட்மெண்ட் கொண்டுவரவேண்டும் என்று சொன்னார்.

வேண்டாம் என்றனர் மற்றவர்கள்.

விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்றார் நேரு.

தமிழ் பூமியில், பெரியாருடைய கொள்கை ஏற்படுத்திய அந்த வைபரேசன்

ஆக, இந்தத் தமிழ் பூமியில், பெரியாருடைய கொள்கை ஏற்படுத்திய அந்த வைபரேசன், நேரு கெட்டிக்காரர் என்பதினால் உணர்ந்தார், ஆகையினால்தான், அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தையே திருத்த வைத்த மகத்தான மனிதர். அவர் செல்லவில்லை டில்லிக்கு. அவர் சென் னையிலும், திருச்சியில்தான் இருந்தார். ஆனால், டில்லி திருத்தியது. அதேபோன்று பெண்களுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று 1929 இல் செங்கல்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்.

சுயமரியாதைத் திருமணங்கள் சட்டமாக வேண்டும் என்றார்.

அதை அண்ணா அவர்கள் நிறைவேற்றி காட்டினார்.

அய்யாவை ஒதுக்கிவிட்டு, ஆட்சி நடத்துவது என்பது முடியாத காரியம்!

தான் வெளியில் இருந்து, நினைத்ததை நிறைவேற்றிக் காட்டுகின்ற வல்லமை உலகத்திலேயே தந்தை பெரியாருக்கு மட்டும்தான் உண்டு. அது எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியக இருந்தாலும் சரி, எம்.ஜி.ஆர். ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி - அய்யாவை ஒதுக்கிவிட்டு, ஆட்சி நடத்துவது என்பது முடியாத காரியம் - அப்படி நடத்தினால், அந்த ஆட்சி சீக்கிரம் முடிவிற்கு வந்துவிடும்.

அவ்வளவு பெரிய இயக்கம் - அவ்வளவு பெரிய தலைவர் மறைந்துவிட்டார். ஆனால், இந்த இயக்கத்தை அதே ஸ்பிரிட் டோடு, அதே வல்லமையோடு, அதே வாதத் திறமையோடு, அதே வரலாற்றுப் புகழோடு நடத்துவதற்கு ஆள் தேவை - அந்த ஆள் யார் என்று கேட்டால், நமக்குக் கிடைத்திருப்பது நம்முடைய அண்ணன் வீரமணியார் அவர்கள்தான்.

அய்யா ஒரு கட்டத்தில் சொன்னார், ‘‘நீ திருமணம் செய்து கொள்'' என்றார்;

‘‘எனக்கு எதுக்கய்யா'' என்றார் இவர்.

‘‘நான் சொல்றேன், ஒரு பணக்கார வீட்டுப் பெண் சம்பந்தம் வருகிறது, நீ திருமணம் செய்துகொள்'' என்றார்.

‘‘சரி, நீங்கள் என்ன சொல்றீங்களோ அதன்படி செய்கிறேன்'' என்றார்.

உலகத்து நண்பர்களே, அப்படி ஒரு தலைவர் இருக்க முடியாது; தலைவன் என்ன சொன்னானோ, அதை அப்படியே செய்பவர்தான் நம்முடைய வீரமணியார் அவர்கள்.

நெருப்பில் குதி என்றால், உடனே குதித்துவிடுவார். இவர் சாதாரணமானவர் அல்ல. இவரும் என்னைப்போல, கஷ்டப்பட்டு படித்தவர்.

ஆனால், நான்கூட முதலில் இவரை, எங்கள் தி..மு.. போன்றுதான் என்று நினைத்தேன்.

நாவலர் கேட்பார், தேர்வு எழுதியவுடன், துரைமுருகனா? தி..மு..வா?

ஏன் என்றேன்.

துரைமுருகன் என்றால், உடனே பாஸ் செய்வது - தி..மு.. என்றால், அடுத்தடுத்து பாஸ் செய்வது என்பார்.

ஆக எல்லோரும் கட்சியில் சேர்ந்ததினால், எஸ்.டி.சோம சுந்தரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்தே படித்துக்கொண்டிருந்தார்; மதியழகனும் அப்படித் தான்.

இவர் ஒருவர்தான் நண்பர்களே, பள்ளியில் ஆரம்பித்த பரிசு வாங்குதல், ஹானர்ஸ் கிளாஸ் வரையில் முதல் வகுப்பில் தேர்ந்தவர்.

எந்த வகுப்பில் படித்தாலும்,

அந்த வகுப்பில் முதல் நிலைதான்

ஹானர்ஸ் கிளாசில், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில், இவர் முதல் ரேங்க் வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் விருப்பப்பாடமான அக்ரிகல்ச்சரிலும் முதல் ரேங்க். ஆக, எந்த வகுப்பில் படித்தாலும், அந்த வகுப்பில் முதல் நிலைதான்.

இவரை மருத்துவராக சொல்லியிருக்கிறார். வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். அப்படி மருத்துவராகியிருந்தால், அந்தத் துறையிலும் முதல் ரேங்க்கைப் பெற்றிருப்பார்.

அய்யா சொல்கிறார், ‘‘இந்த இயக்கத்தின் எதிர்காலம் கருதி தான், இந்த ஏற்பாட்டைச் செய்யவேண்டும் என்று நாங்கள் கருதியிருக்கிறோம்.

மணமகள் வீட்டார் நல்ல வசதி படைத்தவர்கள்; முழுக்க நமது கொள்கைக்காரர்கள். எங்களைத்தான் குடும்ப கார்டியனாகக் கருதுபவர்கள். அப்படிப்பட்ட நிலையில், நீங்கள் இதற்கு ஒப்புக்கொண்டால், இயக்கப் பணிகள் நடைபெறுவதற்கும் அது வாய்ப்பாக அமையும் என்பதற்காகத்தான் இந்தப் பணியை நாங்கள் சொன்னோம்'' என்றார்.

இவருடைய வசதிக்காக சொல்லவில்லை. இயக்கப் பணி செய்வதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான் சொன்னார்.

உலகத்தில் பெரிய தியாகம் எது என்றால்...

தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரைப்பற்றி சொல்லும்பொழுது சொல்கிறார், ‘‘உலகத்தில் பெரிய தியாகம் எது என்றால், இளமையை தியாகம் செய்வதுதான்'' என்றார்.

அம்மையாருடைய இளவயதில் ஒரு முதியவரை திருமணம் செய்துகொண்டார்.

ஆனால், தான் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், தன்னுடைய இளமை முழுவதும் கருகிக் கொண்டு, அய்யாவை கடைசிவரை காப்பாற்றி, பிறகு இந்த இயக்கத்தைக் காப்பாற்றிய ஒப்பற்ற மாமணி மணியம்மையார் அவர்கள்.

நான் சொல்கிறேன், நம்முடைய வீரமணியார் மட்டும் என்ன?

திருமணம் முடிந்ததும் ஒருவன் என்ன செய்வான்?

கொடைக்கானால் போவான், ஊட்டிக்குப் போவான். குறைந்தது அவருடைய ஊர் பக்கமான பிச்சாவரத்திற்காவது போவான்.

திருமணம் முடிந்ததும், பெரியாரோடு சுற்றுப்பயணத்திற்குச் சென்றுவிட்டார்.

இவர் கூட்டம் முடிந்து இரவு 11, 12 மணிக்கு வீட்டிற்கு வந்தால், சாப்பாடு போட்டுவிட்டுத்தான் படுக்கவேண்டும்.

ஒரு மகத்தான மனிதர்,

அண்ணன் வீரமணியார்

ஆக, எவனாவது ஒருவன், திருமணம் செய்த மறுநாளே, பெரியாரோடு சுற்றுப்பயணம் செய்வானா? அப்படிப் போன ஒரு மகத்தான மனிதர், அண்ணன் வீரமணியார் அவர்கள்தான்.

தந்தை பெரியார் அவர்களே, மணியம்மையாருக்கு நீங்கள் சொன்னது இவருக்கும் பொருத்தம்.

தியாகம் என்பது என்ன?

அண்ணா சொன்னார், இருப்பதை இழப்பது தியாகம்.

ஒருவன் காதல் செய்கிறான், அந்தப் பெண்ணிற்கு எந்தவித சொத்தும் இல்லை. மாமா பெண்ணை திருமணம் செய்து கொண்டால், பத்து ஏக்கர் வரும். ஆனால், அது வேண்டாம் என்று சொல்லி, காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறான்.

ஆக, இருப்பதை இழப்பதல்ல- இல்லாததை பெறுவதல்ல.

ஆக, அவர் எதையும் இல்லாததைப் பெறுவதற்காக முயற்சிக்கவில்லை. இருப்பதையே இழந்தார்.

பத்து பேர் இருந்தாலும், இதயத்தை வெட்டிக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்

பெரியார் என்பவர் மாபெரும் மனிதர் - அவர் மாபெரும் இமயம். அந்த இமயத்திலிருந்து பெயர்ந்து விழுந்த ஒரு சிறு குன்று நம்முடைய ஆசிரியர் அவர்கள். ஆனால், அந்த இமயம் பெற்றிருந்த வலிவை இந்தக் குன்று பெற்றிருக்கின்ற காரணத் தினால்தான், இன்றைக்கு இந்த இயக்கம் சாகாமல் இருக்கிறது; பட்டுப்போகாமல் இருக்கிறது. பத்து பேர் இருந்தாலும், மானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்; பத்து பேர் இருந்தாலும், இதயத்தை வெட்டிக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

எனக்கு இருக்கின்ற எண்ணமெல்லாம், அவரைப் போன்று உழைக்க முடியாது. கடந்த வாரம் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்; 50 படிக்கட்டுகள் ஏறவேண்டும்; என்னால் ஏற முடியாது என்று சொல்லிவிட்டேன். ஆசிரியர் அவர்களைக் கேட்டேன், எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டார். ‘‘பரவாயில்லை அண்ணே, நான் அடுத்த வாரம் சிறப்பாக நடத்துகிறேன்'' என்று சொன்னேன்.

இந்தக் கூட்டம் இன்றைக்கு நடைபெறுகிறது.

எனக்கு இருக்கின்ற எண்ணமெல்லாம், இவர் நீண்ட காலம் இன்னும் வாழவேண்டும். மூன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.

உடல்நிலை சரியில்லை என்று வேலூருக்கு அன்றைக்கு வர முடியவில்லை என்று சொன்னார். இன்றைக்குவந்திருப்பார் என்று நினைத்தேன்.

சுற்றுப்பயண விவரங்களை எடுத்துக்காட்டினார்கள். தொடர் சுற்றுப்பயணம் - விருதுநகர், நாகப்பட்டினம் போன்ற ஊர்களுக்கு.

எப்படி போனீர்கள் என்றேன்?

வேனில்தான் பயணம் என்றார்.

பெரியாராகவே எங்களுக்கு

நீங்கள் தோன்றுகிறீர்கள்

இந்த வயதில், மூன்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் - இந்த ஒற்றை நாடி உருவம் - நூற்றுக்கணக்கான மைல்கள் பயணம் செய்து இரவு - பகல் பாராது - உரையாற்றிவிட்டு வருகிறாரே - அய்யா, பெரியாராகவே எங்களுக்கு நீங்கள் தோன்றுகிறீர்கள்.

தம்பி, கதிர் ஆனந்தன் சொன்னார், பெரியாரை நாங்கள் பார்த்ததில்லை என்று.

பெரியாரைப் பார்க்காதவர்கள், இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உழைக்காதவர்கள், இவரைப் பார்த்து உழையுங்கள்!

படிக்காதவர்கள், இவரைப் பார்த்துப் படியுங்கள்!

பேசத் தெரியாதவர்கள், இவரைப் பார்த்து, பேசுங்கள்!

கொள்கையில் எப்படி உறுதியாக இருப்பது என்று தெரியாதவர்கள், இவரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு அமைச்சருமான மாண்புமிகு மானமிகு துரைமுருகன் அவர்கள் உரையாற்றினார்.

No comments:

Post a Comment