‘நீட்'டிலிருந்து விதிவிலக்குப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி மக்கள் எழுச்சி மாநாடுகள் - போராட்டங்கள் நடத்தப்படும்!
திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் ஒருமித்த தீர்மானம்!
சென்னை, செப்.21 தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்'டிலிருந்து விலக்குக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவேண்டும் என்றும், இதற்காக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் மாநாடுகள் நடத்துவதெனவும், மக்கள் எழுச்சிப் போராட்டங்களை மேற்கொள்வது என்றும், திராவிடர் கழகம்- இன்று (21.9.2021) முற்பகல் சென்னை பெரியார் திடலில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலை மையில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
இரங்கலும் - வேண்டுகோளும்!
‘நீட்' தேர்வில் இரண்டு மூன்று முறை முயற்சித்தும் வெற்றி கிட்டவில்லை என்ற விரக்தியாலும், ‘நீட்' தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு இருக்காது என்ற அச் சத்தாலும் தற்கொலை முடிவுக்கு வந்து உயிரைப் போக்கிக் கொள்வதை மாணவக் கண்மணிகள் கைவிட வேண்டும். தற்கொலை எவ்வகையிலும் தீர்வாகாது; போராடி வாழ்க்கையில் வெற்றி பெறும் மன உறுதியை வளர்த்து, தோல்விகள் கண்டு கலங்காத நெஞ்சுரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென இக்கூட்டம் அவர்களுக்கு அன்பான வேண்டுகோளை விடுக்கிறது.
அந்த ‘நீட்' தேர்வு ஒழிப்புக்கான களம் காண, நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு உங்களின் மருத்துவக் கல்வி உரிமைக்காகப் போராட என்றும் ஆயத்தமாக உள் ளோம் என்பதால், இப்படிப்பட்ட அவசர முடிவுக்கு வந்து உங்கள் பெற்றோர், உற்றார் உறவினர்களுக்கும், எங்களுக்கும் வேதனையை உருவாக்கவேண்டாம் என்றும் மாணவக் கண்மணிகளை வேண்டிக் கொள்கிறோம்.
தீர்மானம் 2:
‘நீட்' தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்துகிறது
2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பினை காரணமாக முன்னிறுத்தி, அனைத்திந்திய அளவில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள ‘நீட்' தேர்வை ரத்து செய்யவேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் விருப்பமும், வேண்டுகோளுமாக இருந்து வருகிறது. ‘நீட்' தேர்வுக்கு எதிராக வலுப்பெற்ற மக்கள் எழுச்சிக்குப் பணிந்து முந்தைய அ.தி.மு.க. அரசு ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குப் பெறும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், இரண்டு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்து, தி.மு. கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஏகமனதாக ஆதரித்ததன் அடிப்படையில், அம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டும், அரசினால் எவ்விதப் பின் நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவை பயனுமின்றி காலாவதி ஆகிவிட்டன.
இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வழங்கிய தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி முந்தைய அரசு, அவசர கோலத்தில் சட்டப்படியான முகாந்திரமும், நியாயப்படியான நிலைப்பாடு எதனையும் நிறுவிட முன்வராமல் மசோதாவைக் கொண்டுவந்து நிறைவேற்றியதைப்போல் அல்லாமல், சட்ட முறைமை களை (Due Process) முறையாகக் கடைப்பிடிக்கும் விதமாக ‘நீட்' தேர்வு குறித்து நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து, சமூக, பொருளாதார, கல்வி நிலை அடிப்படை காரணங்களை முறையாக ஆராய்ந்து வழங்கப்பட்ட அவ்வாணை யத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்ட மசோதா இயற்றப்பட்டு, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத்தகைய முறையான, சட்டப்படியான, தீர்க்கமான அணுகுமுறை அடிப்படையில் இச்சட்டத்தை நிறை வேற்றிய தமிழ்நாடு அரசையும், குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும், இக்கூட்டம் மனதாரப் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொள்வதோடு,
இச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் இசை வினையும் பெற தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் எடுக்கும் முயற்சிகளுக்கும் தமிழ்நாட்டு மக்கள் முழு ஆதரவினையும் வழங்கவேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 (அ):
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் திணிக்கப்பட்டுள்ள ‘நீட்' என்னும் நுழைவுத் தேர்வு- ஒடுக்கப்பட்ட மக்களையும், முதல் தலைமுறையாகப் படிக்க வருவோரையும், கிராமப்புற மக்களையும் கடுமையாகப் பாதித்து, மருத்துவக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது. இதுவரை தமிழ்நாட்டில் 17 இரு பால் மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது மிகப்பெரிய கொடுமையாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள சமூகநீதி என்னும் உயிர் - ‘நீட்' என்னும் கொடுவாளால் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்டது.
‘நீட்' தேர்வு மாநில உரிமைக்கும், மாநில பாடத் திட் டத்திற்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும் எதிரானது.
‘நீட்' தேர்வு சமூகநீதிக்கு எதிரானது; ‘நீட்' ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை. ஊழலுக்கு அப்பாற் பட்டது என்பதும் உண்மையல்ல - ‘நீட்' கேள்வித்தாள் ரூ.35 லட்சத்திற்கு விலை போயுள்ளது.
இந்த நிலையில், ‘நீட்' அறவே நீக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பல வகைகளிலும், வழிகளிலும், பல வடிவங்களிலும் ஜனநாயக வழிகளில் எல்லாம் எதிர்ப்புகள் தெரிவிக் கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இரண்டு முறை ‘நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக் கோரி ஒரு மனதாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டும் உள்ளன.
கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தும், மாநில அரசின் முறையான எதிர்ப்பை - கோரிக்கையை முறையாகப் பரிசீலிக்காமலும், மாநில அரசின் குரலை மதிக்காமலும், தானடித்த மூப்பாக, எதேச்சதிகாரமாக ‘நீட்'டை நடைமுறைப் படுத்துவதில் மூர்க்கத்தனமாகவே ஒன்றிய அரசு நடந்து வருவது கண்டனத்திற்குரியதாகும்.
கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
ஒரு பக்கம் சட்டமன்றம், நீதிமன்றங்கள் மூலமாக போராட் டங்களை நடத்தி வந்தாலும், மக்கள் மன்றத்தின் மூலமாக நடத்தப்படும் போராட்டம் மிகவும் முக்கியமானதும், வலிமை யானதுமாகும். கடந்த காலங்களில் மக்கள் பிரச்சினையில் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்தியதன் மூலமாக, வெகுமக்களின் எழுச்சி காரணமாக கோரிக்கைகள், உரிமைகள் வெற்றி பெற்றுள்ளன என்பதுதான் வரலாறு.
‘நீட்'டுக்கு எதிராக வெகுமக்களின் எழுச்சி கிளர்ந்துள்ள நிலையில், அதனை ஒருமுகப்படுத்தும் வகையிலும், மேலும் அதனைக் கூர்மைப்படுத்தும் வகையிலும் சமூகநீதிக்கான எழுச்சி மாநாடுகளை சென்னை, மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் நடத்துவது என்று இந்த ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்புக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக் கிறது. மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சமூகநீதி தொடர்பான கீழ்க்கண்ட அம்சங்களை நமது பிரச்சார திட்டத்தில் மய்யப் பொருளாகக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
1) தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி நாளாக'' அறிவித்து அரசுப் பணியாளர்களை உறுதிமொழி எடுக்கச் செய்த தமிழ்நாடு அரசுக்கு சிறப்பாக மானமிகு மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு - இடஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்திட கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டதை வரவேற்கிறோம். ஒன்றிய அரசும் இது போன்ற கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
2) அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த பொதுத்துறையை விற்பதற்கென்றே (Disinvestment) ஒரு தனித்துறை உருவாக்கப்பட்டது (அருண்ஷோரி என்பவர் அத்துறைக்கான அமைச்சராகவும் இருந்தார்).
வாஜ்பேயி அரசு சொத்துக்களை விற்றது என்றால், தற்போதைய நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி அரசு (NDA) அரசு சொத்துக்களை விற்ப தோடு, அடமானம் வைக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளது.
அரசுத் துறை தனியார் கைக்கு மாற்றப்படும்போது, இடஒதுக்கீடு முற்றிலும் ஒழிக்கப்படுகிறது. எப்படியெனில் தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு இல்லை.
இந்நிலையில் தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு அவசியம் தேவை.
3) சமூகநீதி என்று சொல்லும் பொழுது - அது பாலியல் நீதியையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
4) நீதித்துறையில் தற்போது மாவட்ட நீதிபதிகள் வரை இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. ஆனால் உயர்நீதி மன்றங்களிலும், உச்சநீதிமன்றத் திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இந்த நிலையில் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும்.
5) 'நீட்' தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்றும், 'நீட்' ஒன்றும் தகுதிக்கு அளவுகோல் இல்லை என்றும், 'நீட்' கேள்வித்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதும் - ஆள் மாறாட்டம் செய்யப்படுவதும் - இது யாருக்குப் பயன்படக் கூடியது என்பது விளங்கக் கூடியதாகும். முறைகேடுக்கு அப்பாற்பட்ட முறையே 'நீட்' என்பது சுத்தப் புரட்டு என்பதும் இவற்றின்மூலம் அம்பலமாகி விட்டது என்பதையும் இக்கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.
6) மருத்துவ மாணவர் சேர்க்கையில், இளநிலை, முது நிலை, உயர்சிறப்பு உள்ளிட்ட எந்தப் படிப்புகளிலும் ‘நீட்' தேர்வு நுழைய அனுமதிக்கக் கூடாது.
7) அகில இந்திய தொகுப்புக்கு, மருத்துவ இடங்களை வழங்குவதிலிருந்து தமிழ்நாடு விலக்கு பெற வேண்டும்.
8. மருத்துவப் படிப்பில் (எம்.பி.பி.எஸ்.) நெக்ஸ்ட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும்.
தீர்மானம் 3 (ஆ):
நீட் பாதிப்புகளை சமூக வலைதளங்களின்மூலம் பிரச்சாரம் செய்தல்!
சமூக வலை தளம் என்பது இந்தக் காலகட்டத்தில் பிரச்சார யுக்தியில் மிக முக்கியமான இடத்தினை வகிப்பதால், முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ட்ஸ்டாகிராம், யூ-டியூப் முதலியவைமூலம் சமூகநீதியின் தேவையைப் புரிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொருவரும் நாள்தோறும் ‘நீட்' எதிர்ப்புக்கான காரணங்களையும், ‘நீட்'டினால் ஏற்படும் பாதிப்புகளையும் எளிய முறையில் சிறப்பாகப் பரப்புவதை முக்கிய கடமையாகக் கொண்டு செயல்படுமாறும் இந்தக் கலந்துரையாடல் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தேவையான வகைகளில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுப்பது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
பங்கேற்றோர்:
1. ஆசிரியர் கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
2. ஆ.இராசா, துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
3. ஆ.கோபண்ணா, செய்தித் தொடர்பாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
4. தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
5. ஆ.வந்தியத்தேவன், அமைப்புச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
6. கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
7. டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
8. கே.ஏ.எம்.முகம்மது அபுபக்கர், மாநிலப் பொதுச்செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
9. எம்.எச்.ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி
10. சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை
11. பு.பா.பிரின்சு கஜேந்திரபாபு, பொதுச்செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
12. கோ.கருணாநிதி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு
13. சத்ரியன் வேணுகோபால், துணைப் பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
14. கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்
15. வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்
16. வீ.அன்புராஜ், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
17. வன்னிஅரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி
18. ஆறுமுக நயினார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
19. அ.பாலசிங்கம், தலைமை நிலைய செயலாளர், விசிக
20. யாக்கூப், மனிதநேய மக்கள் கட்சி,
21. ஆ.சிங்கராயர், மாநில துணைப் பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை,
No comments:
Post a Comment