பார்ப்பான் கொலை செய்தால் சிகைச் சேதம் - சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 23, 2021

பார்ப்பான் கொலை செய்தால் சிகைச் சேதம் - சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம்!

இதுதான் ஹிந்துத்துவாவின் மனுநீதி நியாயம்!

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தக வெளியீட்டு விழாவில் வழக்குரைஞர் இராஜீவ் காந்தி

சென்னை, செப்.23  பார்ப்பான் கொலை செய்தால் சிகைச்சேதம்- சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம் - இதுதான் ஹிந்துத்துவாவின் மனுநீதி நியாயம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ் காந்தி அவர்கள்.

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’ புத்தக வெளியீட்டு விழா!

கடந்த 8.9.2021  அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' புத்தக வெளியீட்டு விழாவில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார். அவரது வாழ்த்துரை வருமாறு:

மானமிகு ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’  என்கிற புத்தக வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்த மைக்காக திராவிடர் கழகத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மரியாதைக்குரிய பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களுக்கும்,

தலைமையுரையாற்றிய எங்கள் அய்யா மரியா தைக்குரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கும்,

முன்னிலையேற்றிருக்கக்கூடிய மரியாதைக்குரிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அண்ணன் மானமிகு பி.கே.சேகர்பாபு அவர்களுக்கும்,

இந்தப் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றவிருக் கின்ற மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்களுக்கும்,

புத்தகத்தைப் பெற்று உரையாற்றவிருக்கின்ற எழும் பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வழக்குரைஞர் அண்ணன் பரந்தாமன் அவர்களுக்கும்,

எங்களுக்குப் பின்பு எழுச்சியுரையாற்றவிருக்கின்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் விடுதலையின் உரிமையாக இருக்கின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மரியாதைக்குரிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும்,

நன்றியுரை கூறவிருக்கின்ற வழக்குரைஞர் தோழர் பா.மணியம்மை அவர்களுக்கும்,

ஓர் அறிவாயுதமாக, எதிரிகள் எடுக்கின்ற ஆயுதத்திற்கு எதிர்ப்புமுகமாக...

தொடர்ந்து ஆதிக்கம் எந்த வடிவில் வந்தாலும், அதனை எதிர்ப்பதற்கு கருதுபொருளாக நாம் எடுக்கின்ற அறிவாயுதத்தை எழுத்து வடிவத்தில், தன்னுடைய தொடக்க காலத்திலிருந்து தொடங்கி, இன்றுவரை இளை ஞர்களைத் தேடிப் பிடிப்பதற்கு ஓர் அறிவாயுதமாகவும், எதிரிகள் எடுக்கின்ற ஆயுதத்திற்கு எதிர்ப்புமுகமாக கருத்துரையை வழங்குகிற, தொடர்ந்து வழங்கிக் கொண் டிருக்கின்ற எங்களுடைய தமிழர் தலைவர் மரியாதைக் குரிய ஆசிரியர் உள்ளிட்ட அனைவருக்கும் என்னு டைய சிரந்தாழ்ந்த வணக்கங்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’’  புத்தகத்தினை வெளியிடப்படுவதற்கு முன்பு, ஆங்கிலப் பெயர்களை, வட இந்தியப் பெயர்களை புத்தகத்திற்கு தலைப்பாக வைத்து வெளியிடாத திராவிடர் கழகம், முதன்முதலாக டிரோஜன் என்ற பெயர் வைத்திருக் கிறார்களே என்று பல பேர் இணைய தளங்களில் விமர்சனத்திற்கு வந்தார்கள்.

மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களின் விளக்கம்!

முதல் பக்கத்தில் ஆசிரியர் அய்யா அவர்கள் அதற் குரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். கண்ணுக்குத் தெரியாத - இல்லையென்றால் வேறொரு நோக்கத்தை வைத்துக்கொண்டு, வேறொரு எண்ணத்தை வைத்துக் கொண்டு, தனது எண்ணம் இதுதான், தங்கள் நோக்கம் இதுதான் என்று வெளியே வெளிப்படையாக சொல் லாமல், ஓர் இயந்திரம், ஒரு நபர், ஓர் அமைப்பு செயல்படுமானால், அதற்குப் பெயர்தான் ‘‘டிரோஜன்''  அதுபோல்தான், ஆர்.எஸ்.எஸ். என்கிற அந்த அமைப்பு இந்த நாட்டிற்குள் செயல்படுகிறது என்று மரியாதைக் குரிய ஆசிரியர் அவர்கள் அந்த விளக்கத்தினை சொல்லியிருக்கிறார்.

புத்தகத்தில் ஏறத்தாழ 10 பகுதிகளாகப் பிரித்து, ஒவ் வொரு பகுதிக்கும் இன்றைய அரசியல் தளத்தில், ஆர்.எஸ்.எஸ். எந்த கருத்துடையதாக இருக்கிறது?

அதனுடைய நோக்கம் எதுவாக இருக்கிறது?

ஹிந்து தர்மம் என்றால் என்ன?

ஹிந்து ஒற்றுமை என்றால் என்ன?

சமூகநீதி என்றால் என்ன?

ஹிந்துக்களாக இருக்கின்றவர்களை, அவர்கள் எப்படி பிரித்திருக்கிறார்கள்?

இவர்களுடைய கனவு என்ன? என்று பாடங்களில் சொல்வதுபோன்று, பல பகுதிகளாகப் பிரித்து ஆசிரியர் அய்யா அவர்கள் வெளிப்படையாக சொல்லியிருக் கிறார்கள்.

சனாதனத்திற்கு எதிராக உறுதியாக வந்திருக்கிறது

இந்த நேரத்தில், சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற நேரத்தில், உறுதியாக மரியாதைக்குரிய தமிழ் நாட்டினுடைய முதலமைச்சர் தளபதி அவர்களுடைய அறிவிப்பு - இந்த சனாதனத்திற்கு எதிராக உறுதியாக வந்திருக்கிறது.

பல ஆண்டு காலமாக இந்தத் தமிழ்ச் சமூகத்தை, தமிழ்நாட்டை, இந்த இனத்தை அழித்துக் கொண்டிருக் கின்ற ஆதிக்க வாதிகளுக்கு எதிராக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அறிவிப்பை - சட்டப்படி சரி செய்ய வேண்டிய வேலையை - திராவிட முன்னேற்றக் கழ கத்தின் அரசு, இப்பொழுது சரி செய்துகொண்டிருக்கிறது.

இன்று காலையில்கூட     சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஒன்றிய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து, நாடற்றவர்களாக, ஏதிலிகளாக இந்த நாட்டிற்கு வருகின்றவர்களை, மதச்சார்பின்மை என்ற அரசியலை இந்திய அரசமைப்புச் சட்டம் பேசுகிறபொழுது, எந்த மதத்திற்கும் இந்த நாடு, எந்த மதச் சம்பிரதாயத்திற்கும் இந்த நாடு சொந்தமில்லை என்கிற நோக்கத்தை இந்திய அரசமைப்புச் சட்டம் கொண்டு வந்திருக்கின்றபொழுது,

மதத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை

நாடற்றவர்களாக பாகிஸ்தானிலிருந்து, ஆப்கானிஸ் தானிருந்து, வங்காள தேசத்திலிருந்து வருகிறவர்கள் - அவர்கள் இஸ்லாத்து இல்லாத மதமாக இருந்தால், அவர்களுக்குக் குடியுரிமை உண்டு என்று, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக ஒன்றை ஆர்.எஸ்.எஸ். கொண்டு வந்தபொழுது, இதே வீதிகளில் திராவிட முன்னேற்றக் கழகமும், விடுதலைச் சிறுத்தைகளும், இன்னும் சொல் லப்போனால், அண்ணன் திருமாவளவன் அவர்கள் சொல்வது போன்று, சனாதன எதிர்ப்புக் கூட்டணி பிரச் சாரத்தைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தது. இந்தச் சட்டம் இந்திய மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று - அதே ஆண்மையுள்ள ஓர் அரசு சட்டமன்றத்தில் எதிர்த்துத் தீர்மானம் போடுவதற்கு வக்கற்று, தெம்பற்று இருந்தபொழுது, இப்பொழுதுதான், பெரியாரின் வழி நின்று, பேரறிஞர் அண்ணாவின் துணைகொண்டு, கலை ஞர் அவர்களின் சொல்லோடு, நாங்கள் இருக் கிறோம் - மதத்தின்மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், மதத்தின் பெயரால் குடியுரிமை மறுக்கப் பட்டால், முதல் குரல் தமிழ்நாட்டிலிருந்து எழும்பும் என்று இன்று காலை அறிவித்திருக்கிறார் மரியாதைக் குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் எங்கள் தளபதி அவர்கள்.

அதே தொடர்ச்சியாக இன்னொரு அறிவிப்பு. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் வாசம் உண்டு என்று பேரறிஞர் அண்ணா  அவர்கள் சொல்வார்.

ஆதிதிராவிடருக்கென தனித்த ஒரு வாரியம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, விடுதலை சிறுத் தைகள் கட்சி வைத்த கோரிக்கையை ஏற்று, ஆதி திராவிட பள்ளிகளை, பள்ளிக் கல்வித் துறையோடு சேர்க்கவேண்டும். ஆதிதிராவிடருக்கென தனித்த ஒரு வாரியத்தை அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை, நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று இன்று சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார்.

இவையெல்லாம் சமூகநீதியினுடைய தொடக்கம். இரட்டைக் குவளை முறையை ஒழித்துச் சட்டம் கொண்டு வந்தோம் என்று சொன்னபொழுது, இப் பொழுது இருக்கின்ற இணைய வாசிகள் பேசுகிறார்கள், ‘‘ஏன் இரட்டைக் குவளை முறையே இல்லையா? நீங்கள் ஏன் ஒழிக்கவில்லை?'' என்று.

பார்ப்பான் கொலை செய்தால் சிகைச் சேதம் -

மற்றவர்கள் கொலை செய்தால் சிரச் சேதம்!

அன்பு கொண்ட நண்பர்களே, கொலை செய்யக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இந்த நாட்டில்தான், பார்ப்பான் கொலை செய்தால், மொட்டை போட்டால் போதும் என்கிற சட்டம் இருந்தது.

பிரிட்டிஷ்காரன் வருவதற்கு முன்பு, பார்ப்பான் கொலை செய்தால், மொட்டை போட்டால் போதும்; மற்றவர்கள் கொலை செய்தால், அவனுக்குச் சிரச்சேதம்.

சமூகநீதி அரசினுடைய நோக்கம்

அந்தச் சட்டத்தை ரூல் ஆஃப் லா என்று பிரிட்டிஷ்காரன் கொண்டு வந்தான். அதுபோல்தான், இந்த நாட்டிற்குள் இரட்டைக் குவளை முறை - தாழ்த் தப்பட்டவர்களுக்கு ஒரு குவளை - பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு ஒரு குவளை என்று இருந்தபொழுது, திராவிட முன்னேற்றக் கழக அரசுதான், இனிமேல் அந்த முறை இருந்தால், சிறை என்று சட்டம் கொண்டு வந்தது. இனிமேல் அதைக் கடைப்பிடிப்பவர்கள் யாராக இருந் தாலும், சிறைக்குத்தான் செல்லவேண்டும். இதுதான் சமூகநீதியினுடைய வெளிப்பாடு. இதுதான் சமூகநீதி அரசினுடைய நோக்கம்.

அந்த நோக்கத்தை இப்பொழுது அடைந்திருக்கி றோமா என்றால், நாம் அடைந்திருக்கிறோம். ஆனால், இலக்கை நிறைவேற்றி இருக்கிறோமா என்றால், நாம் நிறைவேற்றவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகால அழுக்கை, இரண்டாயிரம் ஆண்டுகால சனாதான நோக்கத்தை நாம் வெல்வதற்கு, இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

ஆனால், தொடங்கிய யுத்தம் இன்னும் சிறப்பாகவே நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இப்பொழுது இருக்கின்ற தமிழ்நாடு அரசு.

இதற்கும், ஆர்.எஸ்.எசுக்கும் என்ன சம்பந்தம்?

உயர்நீதிமன்றம் கொடுத்த தெளிவான தீர்ப்பு!

இன்று காலையில்கூட, சென்னை உயர்நீதிமன்றம் மிகத்தெளிவான ஒரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது.

மத நம்பிக்கைதான் - விநாயகர் ஊர்லம் நடக்கலாமா? வேண்டாமா? என்று. உங்களின் மத உரிமை என்பதை விட, வாழும் உரிமை மக்களுக்கு மிகவும் முக்கியம், ஆகவே, விநாயகர் ஊர்வலத்தை நடத்தக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.

இது திலகர் அவர்கள் தொடங்கி வைத்த யுத்தம். எதிலிருந்து நாங்கள் திலகரோடு முரண்படுகிறோம்; திராவிட இயக்கங்கள் எதிலிருந்து திலகரோடு முரண் படுகின்றன; அம்பேத்கரிய இயக்கங்கள் எதிலிருந்து திலகரோடு முரண்படுகின்றன? அதுதான் அரசியல்.

பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் சொன்ன பிறப்புரிமைக்கும் - திலகர் சொன்ன பிறப்புரிமைக்கும் வேறுபாடு உண்டு!

தந்தை பெரியாரும் சொன்னார், ‘‘சமூகநீதி எங்கள் பிறப்புரிமை - எங்களுக்கும் சுயராஜ்ஜிய அரசு வேண்டு மென்று.''

அதே கோரிக்கையை ‘‘ஒடுக்கப்பட்டோர் விடுதலை எங்களது பிறப்புரிமை - ஒரு சுயராஜ்ஜியம் வேண்டும்'' என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார்.

பாலகங்காதர திலகரும் அதைத்தானே சொன்னார், அதுதான் அவர்கள் போடுகின்ற வேஷம்.

பாலகங்காதர திலகர் சொன்ன, ‘‘பிறப்புரிமைதான், எங்களுடைய சுதந்திர உரிமை. சுயராஜ்ஜியம்தான் எங் கள் சுதந்திர உரிமை'' என்பதற்கும், தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் அவர்களும் சொன்ன, பிறப் புரிமை சுயராஜ்ஜிய உரிமைக்கும் வேறுபாடு உண்டு.

அந்த வேறுபாட்டை, இந்த மக்களிடம் நாம் தெளிவு படுத்தினால், இவர்கள் பேசுவதும், நாம் பேசுவதும் ஒன்றல்ல. அவர்கள் யாருக்காகப் பேசுகிறார்கள்? அவர்கள் எதற்காகப் பேசுகிறார்கள்? அவர்களின் நோக்கம் என்ன? என்று தெரியும்.

நான் பொதுவாக ஒரு கதையைச் சொல்லுவது உண்டு.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்று வருகிறபொழுது, பார்ப்பதற்கு எப்பொழுதுமே சுவாரசியமாகவும், சரியாகவும் இருக்கும்.

மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கு வருகிறபொழுது, ‘‘இது ஹிந்து நாடு; இது இந்தியர்கள் நாடு; நமக்கெல்லாம் ஒரே நாடு; ஒரே இலக்கு இருக்கவேண்டும்'' என்று சொன்னார்.

தேநீர்க் கடைக்காரரின் கதை!

ஒரு ஊரில், தேநீர்க் கடைக்காரர், தேநீர் விற்றுக் கொண்டிருக்கிறார். அந்தக் கடைக்கு வருகின்ற ஒரு முதியவர், நொண்டிக் கொண்டே வருகிறார். கால்களில் செருப்பு இல்லை. கால்கள் முழுவதும் ரத்தமும், ஜலமும் வருகிறது.

அந்தத் தேநீர்க் கடைக்காரர் கேட்கிறார், ‘‘இவ்வளவு வயதாகிறது; ஒரு செருப்பு வாங்குவதற்குக்கூட உங்க ளிடம் காசில்லையா? ஒரு செருப்புப் போட்டு நடந்தால் என்ன? கால்கள் முழுவதும் புண்ணாக இருக்கிறதே'' என்று கேட்கிறார்.

அந்த முதியவர் சொல்கிறார், ‘‘நான் ஜாதியில், கீழ்ஜாதிக்காரன்; எனக்கு செருப்புப் போடுகின்ற உரி மையை, இந்த நாட்டின் அரசு எனக்குக் கொடுக்கவில்லை. நான் செருப்புப் போட்டால் தீட்டுப்பட்டுவிடுமா? செருப்புப் போடக்கூடாது என்கிறார்கள்'' என்கிறார்.

உடனே,அந்தத் தேநீர்க் கடைக்காரர், ‘‘இவ்வளவு கொடுமையான அரசாங்கமா இங்கே இருக்கிறது? வாருங்கள் போய் அரசிடம் கேள்வி கேட்போம்'' என்று, அந்தத் தேநீர்க் கடைக்காரர், முதியவரை அழைத்துக் கொண்டு நாட்டின் அரசியிடம் போகிறார்.

‘‘அரசியே, உங்கள் நாட்டின் குடிமகனுக்கு செருப்புப் போடுவதற்கு உரிமை இல்லை என்கிறார்; நீங்கள் அவர் செருப்புப் போடுவதற்கு உரிமை கொடுக்கவேண்டும்'' என்று கேட்கிறார்.

உடனே அந்த அரசி சொல்கிறார், ‘‘அவர் செருப்புப் போட்டால், சாமி குத்தமாகிவிடும்; அவர் செருப்புப் போட்டால், மண் தீட்டுப்பட்டு விடும்; ஆகவே, செருப் புப் போடக்கூடாது'' என்கிறார்.

உடனே அந்தத் தேநீர்க் கடைக்காரருக்குக் கோபம் வருகிறது. ‘‘ஒரு நாட்டில், ஒரு சக மனிதன் செருப்புப் போடக்கூடாது; இன்னொரு மனிதன் செருப்புப் போடலாம். நான் செருப்புப் போட்டிருக்கிறேன், அவர் செருப்புப் போடக்கூடாது என்று சொல்கிறீர்கள், இது ஜாதீயவாதம் அல்லவா? இது சரி சமம் என்று சொல்கின்ற சட்டத்திற்கு எதிரானதல்லவா! ஆகவே, அவருக்கு செருப்புப் போடுகின்ற உரிமையைக் கொடுங்கள்'' என்று கேட்கிறார்.

அரசி மறுக்கிறார்.

மக்களைத் திரட்டிக்கொண்டு, அந்தத் தேநீர்க் கடைக்காரரும், பக்கத்தில் இருக்கின்ற ரொட்டிக் கடைக்காரரும், வட்டிக்கடைக்காரரும் ஒன்று கூடி, போராட்டம் நடத்துகிறார்கள்.

என்ன போராட்டம் என்றால், ‘‘இங்கே வாழ்கிற எல்லோருக்கும் செருப்புப் போடுகின்ற உரிமையை அரசு, அரசாங்கம் கொடுக்கவேண்டும் என்று.

அரசு மறுக்கிறது.

தேர்தல் நேரம் வருகிறது  - அந்தத் தேநீர்க் கடைக் காரர் சொல்கிறார், ‘‘என்னை நீங்கள் வெற்றி பெற வைத்தால் - நான் வென்று, அரசாங்கத்தை என் கையில் கொடுத்தால், செருப்புப் போடும் உரிமையை மக்களுக்கு நான் கொடுப்பேன். அந்த செருப்பை இலவசமாகத் தைத்து நானே கொடுப்பேன்'' என்று உறுதியளிக்கிறார்.

பிரச்சாரம் நடைபெறுகிறது. தேநீர்க் கடைக்காரரும், ரொட்டிக் கடைக்காரரும், வட்டிக் கடைக்காரரும் ஒன்றாகச் சேர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டு போகி றார்கள். அந்தத் தேநீர்க் கடைக்காரர் வெற்றி பெற்று, அரசைக் கைப்பற்றிவிடுகிறார்.

நாட்டில் எல்லோரும் செருப்புப் போடலாம் என்கிறார். ஒட்டுமொத்த ஊடகங்களும் கொண்டாடுகிறது

முதல் நாள் முதல் அறிவிப்பு செய்கிறார், ‘‘நான் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன்; மக்களே, எல்லோரும் செருப்புப் போடலாம் என்கிற வாக்குறு தியைக் கொடுத்தேன். இதோ முதல் கையெழுத்துப் போடுகிறேன்; இனிமேல் இந்த நாட்டில் எல்லோரும் செருப்புப் போடலாம்'' என்கிறார். ஒட்டுமொத்த ஊடகங்களும் கொண்டாடுகின்றன.

இதுதானே உரிமை - இதற்காகத்தானே இத்தனை நாள்களாகக் காத்திருந்தோம். 80 வயது கிழவனும், 6 வயது சிறுவனும் - ஒரு சமூகமே செருப்புப் போடாமல் இருக்கிறது; இதற்குத்தானே காத்திருந்தோம்.

எல்லோரும் கொண்டாடுகிறார்கள், இரண்டாவது அறிவிப்பை செய்கிறார், ‘‘அந்தச் செருப்பை அரசே தைத்துக் கொடுக்கும்; இலவசமாகக் கொடுக்கும்; இனிமேல், வெளியில் சந்தையில் செருப்பு விற்கக்கூடாது'' என்கிற அறிவிப்பை வெளியிடுகிறார்.

‘‘முதல் நிகழ்ச்சியை நான் செங்கோட்டையில் நடத் தப் போகிறேன்; எல்லோரும் வரிசையில் வாருங்கள்; எந்தக் கிழவனுக்கு செருப்பு மறுக்கப்பட்டதோ, அந்தக் கிழவனுக்கு செருப்பை நானே மாட்டிவிடுகிறேன்'' என்று அந்தத் தேநீர்க் கடைக்காரர் - அந்த அரசன் அறிவிக்கிறார் - நிகழ்ச்சி நடக்கிறது - ஒட்டுமொத்த ஊடகங்களும் காத்திருக்கின்றன - நொண்டி, நொண்டி, நொண்டி அந்த 80 வயது கிழவன் நடந்து வருகிறார். கால் முழுக்க ரத்தம், ஒட்டுமொத்த தேசமும் அந்தத் தேநீர்க் கடைக்காரரைப் பார்த்து பெருமை கொள்கிறது.

இதோ இத்தனை நாள் கால்களில் செருப்பைப் பார்க்காத அவருக்கு, அரசர் செருப்பை மாட்டிவிடப் போகிறார் என்று.

அரசர் வருகிறார், செருப்பை மாட்டி விடுகிறார்; கிழவனின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகக் கொட்டு கிறது. ஒட்டுமொத்த மக்களும் அரசரைக் கொண்டாடு கிறார்கள்.

அந்தக் கிழவன் சொல்கிறார், ‘‘அய்யா எனக்கு ஒரு செருப்பை மாட்டிவிட்டீர்கள்; என்னுடைய ஏழு வயது பேரன்  வருகிறான், அவனுக்கு ஒரு செருப்பை மாட்டி விடுங்கள்'' என்கிறார்.

உடனே மாட்டிவிடலாம், வரச் சொல்லுங்கள் என்று அரசர் சொல்கிறார்.

‘‘ஒரே நாடு, ஒரே செருப்பு - எந்திரிச்சு ஓடு’’

அருகிலிருக்கும் வட்டிக் கடைக்காரரை அழைத்து, ‘‘ஏழு வயது பையனுக்கு செருப்பை மாட்டுங்கள்'' என்று அரசர் சொல்கிறார்.

அந்தச் சிறுவனுக்கும் செருப்பு மாட்டப்படுகிறது. அவன் சொல்கிறான், என்னுடைய கால்களுக்கு ஏற்ற செருப்பு இதுவல்ல என்று உதறிவிடுகிறான்; என் தாத்தாவிற்கு வயது 80. அவருக்கு 9 ஆம் நம்பர் செருப்பு. எனக்கு வயது 7, எனக்கும் 9 ஆம் நம்பர் செருப்பை மாட்டுகிறாயே என்று கேட்கிறான்.

அப்பொழுதுதான் அந்தத் தேநீர்க் கடைக்காரர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி என்பவர் சொல்கிறார், ‘‘ஒரே நாடு, ஒரே செருப்பு - எந்திரிச்சு ஓடு'' என்கிறார்.

வெளிப்படையாகப் பார்த்தால் அந்தத் திட்டம் சரி; வெளிப்படையாகப் பார்த்தால் அந்தச் சட்டம் சரி. ஒரே நாடு, ஒரே மதம். ஆனால், இங்கே இருக்கக்கூடிய சமூகநீதி என்கிற திட்டம் எங்கே இருக்கிறது?

ஹிந்துராஜ்ஜியம் அமைப்போம் - நாமெல்லாம் ஹிந்துக்கள் - 80 வயது கிழவனுக்கும் - 6 வயது சிறுவனும் ஒரே செருப்பை மாட்டிவிடுகிற வேலையை

ஆர்.எஸ்.எஸ். என்கிற பயங்கரவாத அமைப்பு பிரகடனப் படுத்தி செய்கிறது.

ஆனால், சமூகநீதி பேசுகின்ற நாம், அதைச் செய்யவில்லை. எது யாருக்கு வேண்டுமோ -  எப்படி வேண்டுமோ - அதைச் செய்யவேண்டிய வேலையை - தொடர்ந்து அந்த வேலையைத்தான் செய்துகொண் டிருக்கின்றோம்.

அன்பு நண்பர்களே, இப்பொழுது இருக்கிற ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிற கோட் பாட்டை வைத்து ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பரிக்கிறது.

தேசிய இன விடுதலை மிக முக்கியம். தேசிய மொழி பேசுகின்ற மக்களின் சுயராஜ்ஜிய உரிமையும், மாநில சுயாட்சி என்பது மிகவும் முக்கியம்.

இந்த இலக்கை நோக்கி, பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் கண்ட கனவை, தந்தை பெரியார் வழிநின்று நிறைவேற்றவேண்டிய தேவை வந்திருக்கிறது.

இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஓர் அரிய வாய்ப்பு

ஆனால், அதற்கிடையில், சமூக மேம்பாடு மிக முக்கியம். மொழி விடுதலை, இன விடுதலை எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு, சமூக மேம்பாடும், சமூக விடுதலையும் இந்த மண்ணுக்கு முக்கியம். அதற்கு முதல் எதிரியாக இருக்கின்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்கிற அமைப்பும், ஆர்.எஸ்.எஸ். தத்துவமும், அவர்களுடைய மதவியல் கோட்பாடும்தான். அந்த மதவியல் கோட்பாட்டை எடுத்து வேலை செய்யவேண்டிய நேரம் இந்த நேரம். இளைஞர்களுக்குக் கிடைத்திருக்கின்ற ஓர் அரிய வாய்ப்பு.

பெரியார் என்கிற என் ஈரோட்டுக் கிழவனின் பேச்சும், எழுத்தும், அவரது வழியில் நின்ற பேரறிஞர் அண்ணா அவர்களுடைய எழுதப்படாத  அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று நான் எப்பொழுதும் சொல்வேன்.

மாநில உரிமைகள் குறித்து, இந்திய மாநிலங்களுக்குக் கற்றுக் கொடுத்த பேரறிஞர்அவர்களுடைய எழுத்தும், பேச்சும் - அதை செயலில் வழிகாட்டிய மரியாதைக்குரிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய பேச்சும், எழுத்தும், செயலும் இப்பொழுது கிடைத்திருக்கின்ற ஒரு வரலாற்று வாய்ப்பாக ஓர் அரசு நம் கைகளில் வந்தி ருக்கிறது. தளபதி  அவர்கள் அந்த அரசை தன்னுடைய கைகளில் வைத்திருக்கிறார்.

இந்த அரசு சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கின்ற மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உழைப்பதற்கான உறுதியை நாம் கொள்ளவேண்டும்.

இப்பொழுது சிலர் பேசுகிறார்கள், பெரியாருக்கு எதற்கு சிலை? என்று. இந்த இடத்தில், அண்ணன் திருமா அவர்களை வைத்துக்கொண்டு, எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் தயாநிதி மாறன் அவர்களை வைத்துக்கொண்டு, பெரியார் திடலிலிருந்து இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்,

தந்தை பெரியாருக்கு ரூபாய் ஆயிரம் கோடி செலவிலாவது சிலை வைக்கவேண்டும்

திருச்சி சிறுகனூரில் திராவிடர் கழகம் வைக்கின்ற சிலை - நாம் வள்ளுவனுக்கு சிலை வைத்ததுபோல - தந்தை பெரியாருக்கு ரூபாய் ஆயிரம் கோடி செல விலாவது சிலை வைக்கவேண்டும். ஆயிரம் நூற்றாண்டு கால அடிமைத்தனத்தை உடைத்தவர் அவர்.

ஜாதியால், பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்று சனாதனம் இருந்தபொழுது,

1950 ஆம் ஆண்டு 8 ஆம் மாதம், 15 ஆம் தேதி - கம்யூனல்  ஜி.. என்ற சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் நீக்கியபொழுது, சென்னை பெரம்பூரில் அந்தக் கிழவன் பேசுகிறான் - அந்தப் பேச்சுதான் இன்னும் நிற்கிறது.

‘‘எனக்கு எந்த நோக்கமும் இல்லை; என்னுடைய மக்கள் சாணாராய், ஜாதியாய் பிரிந்திருக்கின்ற, பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்கிற நிலையில் இருக்கின்ற மக்களை, ஒரு இன்ஸ்பெக்டராக, ஒரு ஜட்ஜாக, ஒரு வி...வாக, ஆக்கிவிட முடியாதா?'' என்றார். அப்படியே ஆக்கிக் காட்டியிருக்கிறார்.

இன்று நான் போட்டிருக்கின்ற கருப்புக் கோட்டையும், நீங்களும், நானும், அணிந்திருந்த ஜாதி அழுக்கைத் துடைத்தெறிந்ததும் தந்தை பெரியார் என்கிற அந்தப் பெருமகன்தான்.

ஆர்.எஸ்.எஸை  எதிர்க்கின்ற பெரிய ஆயுதம், பெரியார் என்கிற பேராயுதம்தான்!

அந்தப் பெருமகனாரின் கருத்தை வீதி முழுக்கக் கொண்டு போய்ச் சேர்ப்போம். ஆர்.எஸ்.எஸ். என்கிற கத்துக்குட்டி, எந்த வடிவில் வந்தாலும், அது மொழி வடிவில், சடங்கு வடிவில், மத வடிவில், எந்த வடிவில் வந்தாலும், அதனை எதிர்க்கின்ற பெரிய ஆயுதம், பெரியார் என்கிற பேராயுதம்தான்.

அந்த ஆயுதத்தை நாம் தூக்குவோம்.

வாய்ப்புக்கு நன்றி!

இந்தப் புத்தகத்தை தொடர்ந்து வாசிப்பதும், பரப்பு வதையும் நம் நோக்கமாக வைத்திருப்போம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேறக் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பு இணை செயலாளர் வழக்குரைஞர் ராஜீவ்காந்தி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்

No comments:

Post a Comment