திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தை அல்ல! மகன்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 4, 2021

திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தை அல்ல! மகன்!

 .திருமாவேலன்

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்? என்ற தலைப்பில் பத்திரிகையாளர் .திருமாவேலன் பெரியார் பற்றி எழுதி இருக்கும் நூல் விரைவில் வெளியாகிறது. தற்போதைய தமிழ்நாடு சூழலில் திராவிடம், தமிழ் தொடர்பான பல தத்துவார்த்த விவாதங்களில் இணையும் முகமாக உருவாகும் இந்நூல் பலத்த விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருசேரப் பெறக்கூடும். நூலாசிரியரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஏன் இந்த நூல்?

தந்தை பெரியார் குறித்தும் திராவிடர் கழகம் குறித்தும், திராவிட இயக்கத்தின் மூலத்தத்துவம் குறித்தும் சில தப்பான பாடங்களை தமிழ்த்தேசியம் என்ற பெயரால் சிலர் செய்துவரும் அவதூறுகளுக்கான அடிப்படை பதில் தான் இந்தப் புத்தகம். பெரியாருக்கு தமிழைப் பிடிக்காது, அவர் தெலுங்கர்களுக்கு சார்பானவர், மொழிவாரி மாகாணத்துக்கு எதிராக இருந்தார், ஏனென்றால் அவர் தெலுங்கர் என்றெல்லாம் இந்தச் சிலர் வாய்க்கு வந்ததை எல்லாம் வரலாறாகத் திரித்து எழுதியும் பேசியும் வந்தார்கள். வருகிறார்கள். இந்த அரைகுறைத்தனக் குற்றச்சாட்டுகளை ஜாதியவாத, மதவாத சக்திகள் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் அதிகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவலம் நடக்கிறது.

திராவிடத்தை எதிர்க்க தமிழாயுதம் எடுத்து வருகிறார்கள். அதாவது, திராவிடத்தை எதிர்க்கும் ஆரியத்துக்கு ஆயுதம் தயாரித்துத் தரும் வேலையைத் தான் இந்த தமிழ்த் தேசிய சக்திகள் செய்து வருகிறார்கள். அதற்கான பதிலை மனதளவில் நான் தேடித் தெரிந்து கொள்ள நினைத்தேன், 1995ஆம் ஆண்டு 'திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பெங்களுரு குணாவின் நூல் வந்தது. அதில் இருந்து செய்திகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். பின்னர், பெ.மணியரசன், மிகக்கடுமையாக பெரியாரை விமர்சிக்கத் தொடங்கினார். குணா, மணியரசன் இருவரும் ஓரளவாவது' பெரியாரைக் தெரிந்து கொண்டு விமர்சித்தார்கள். அதன்பிறகு சில சில்லுண்டிகள் உருவானார்கள். இவர்களுக்கு பெரியார் தாடி வைத்திருப்பார் என்பதைத் தவிர எதுவும் தெரியாது. இந்தக் குருட்டுக் கூட்டம், இணையத்தளங்களில் குருட்டாட்டம் ஆடி வரும் எரிச்சல் அதிகமானதால் இப்படி ஒரு நூல் காலத்தின் தேவையாக எனக்குப் பட்டது.

1600 பக்கங்கள் கொண்ட இந்நூலை உருவாக்கிய அனுபவம்?

புத்தகமாக எழுதுவதற்காக அல்ல, முதலில் என்னளவில் தெளிவு பெற வேண்டும் என்பதற்காகவே நான் இதற்கான பதில்களைத் தேடத் தொடங்கினேன். குடி அரசு, விடுதலை ஆகிய இதழ்களை முழுமையாகப் படிப்பது என்று முடிவெடுத்தேன். சுமார் 20 ஆண்டுகாலம் (1925-45) வெளியானது குடி அரசு. 1937 இல் தொடங்கப்பட்ட விடுதலை நாளிதழை பெரியார் மறைந்த 1973 வரையில் பார்க்க வேண்டும் எனத் திட்டமிட்டேன்.

2000 ஆம் ஆண்டில் இதற்கான திட்டமிடுதல் தொடங்கி அது 2004 வரைக்கும்தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. இக்காலகட்டத்தில் 'குடி அரசு' இதழை முழுமையாக முடித்தேன். வார இதழ் என்பதால் அது கொஞ்சம் இலகுவாய் இருந்தது. 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் இப்பணியை என்னால் மேற்கொள்ள முடியாத அளவுக்கு பணிச்சூழல் இருந்தது. மீண்டும் 2011 இல் தொடங்கினேன். கொஞ்சம் சுணக்கமான மனநிலை இருந்தது தொடக்கத்தில். ஆனால் 2014ஆம் ஆண்டு மத்தியில் நடந்த ஆட்சி மாற்றம், அது இந்தியச் சமூகத்தில் எதிர்காலத்தில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களை உணர்ந்த நிலையில் இப்பணியை எவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்தாக வேண்டும் என்ற பதற்றத்தை என்னுள் ஏற்படுத்தியது. 1937 முதல் 1973 வரையிலான விடுதலையை முழுமையாகப் பார்வையிட்டு குறிப்புகள் எடுத்தேன். எனது பத்திரிகை வேலையை பார்த்துக் கொண்டே இந்த பணியைப் பார்ப்பது என்பது சுலபமாக இல்லை.

இது இலகுவாய் முடியும் வேலையாக இல்லை . இதற்கு இடையில்தான், 'ஆதிக்க ஜாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?' என்ற புத்தகத்தை முடித்துவிடலாம் என்று மனம் மாறியது. பெரியார் மீது தலித் சிந்தனையாளர்கள் வைக்கும் விமர்ச னத்துக்கான பதிலாக அது எழுதப்பட்டது. அதனால் 2015-2017 அதில் போனது. 2018ஆம் ஆண்டு அந்த நூல் (382 பக்கங்கள்) வெளியானது. அது வெளியானதும், ஏற்பட்ட கூடுதல் உற்சாகம் இந்தப் புத்தகத்தை முடிக்கும் முயற்சியை விரைவுபடுத்தியது. இப்படியாக 2021ஆம் ஆண்டையும் தொட்டு விட்டேன்.'

இத்தனை பக்கம் நீண்டு சென்றது எதனால்?

பெரியாரது வாழ்க்கையின் நீட்சி, அவரது உழைப்பின் நீட்சி தான் இந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நீட்டித்துவிட்டது. குடி அரசு' வார இதழ், 'விடுதலை' நாளிதழ் ஆகிய இரண்டையும் முழுமையாகப்பார்த்து விட்டு எழுத வேண்டும் என்று நினைத்தேன். அப்படி பார்க்க முடியும் போது இந்தப் புத்தகம் வெளியானால் போதும் என்பது தான் என்னுடைய எண்ணமாக இருந்தது.

இருபது ஆண்டுகள் வெளியாகி இருக்கிறது. 'குடி அரசு. 'விடுதலை'யில் நான் எடுத்துக் கொண்ட காலகட்டமானது சுமார் 36 ஆண்டுகள். எத்தனை பக்கங்கள் என்று கணக்குப் போட்டுப் பாருங்கள். ஒரு நாளைக்கு நான்கு பக்கம். ஓராண்டுக்கு 1460 பக்கம். என்றால் 36 ஆண்டுக்கு 52,560 பக்கங்கள் என்று தோராயமாகச் சொல்லலாம் (ஒரு சில மாதங்களின் விடுதலை இதழ் கிடைக்க வில்லை ). இவற்றில் இருந்து கிடைக்கும் தகவல்கள், மலையளவு இருந்தன. இவை அனைத்தையும் சேர்க்கச் சேர்க்க அது பக்கத்தை கூட்டிவிட்டது.

உதாரணத்துக்கு, மொழி வாரி மாகாணங்கள் பிரச்சினையை மட்டுமே பார்த்தால் அது 1930 முதல் 1963 வரையிலான பிரச்சினை. 'சென்னை எங்கே இருந்தால் என்ன? திராவிட நாட்டுக்குள் தானே இருக்கிறது?' என்று பெரியார் சொன்னதாக .பொ.சி. ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால் இந்த 'தமிழ்நாடு' உருவாக்கப்பட பெரியார் உழைத்த 25 ஆண்டு கால உழைப்பைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் தான் புத்தகம் நீண்டு விட்டது.

'உனது தமிழ் இலக்கியத்தில் ஆரியம் புகாத இலக்கியம் எது?' என்று பெரியார் கேட்டுவிட்டுப் போய்விட்டார். தொல்காப்பியம் தொடங்கி தமிழ் இலக்கியம் அனைத்திலும் எங்கு எப்போது எப்படி ஆரியம் புகுந்தது, புகுத்தப்பட்டது என்பதைச் சொல்லி பெரியாரின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் தேவை ஏற்படுகிறது. அதனால் தான் இந்தப் புத்தகம் நீண்டு விட்டது.

இதற்கான செய்திகளை ஆதாரங்களைத் தேடிய கதை? உதாரணமாக, நீண்டநாள் தேடி கடைசியில் கிடைத்த 'யுரேகா' ஆதாரம் ஏதும் உண்டா?

யாராலும் கண்டுபிடிக்க முடியாத புதையலை நான் கண்டு பிடித்துவிடவில்லை. பெரியார் தான் வாழ்ந்த காலத்திலேயே தனது சிந்தனைகள் மொத்தத்தையும் புத்தகங்களாக ஆக்கிவிட்டுப் போய்விட்டார். அவர் நடத்திய 'விடுதலை' தான் அவரது நாட்குறிப்பு. இதனை முழுமையாகப் பார்த்தாலே

போதும் என்று நினைத்தேன். இவை அனைத்தும் சென்னை பெரியார் திடல் நூலகத்தில் முழுப்பாதுகாப்போடு இருக்கிறது.

இந்தப் புத்தகத்துக்கான களம் என்பது பெரியார் திடல் தான். ஆதாரங்களுக்காக அலையவில்லை . ஒரே இடத்தில்தான் இருக்கிறது.

யுரேகாபோல ஆதாரம் உண்டா என்றால், இந்தப் புத்தகமே பலருக்கும்யுரேகா போலத் தான் இருக்கும்.

பெரியார் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையா எனத் தேடிய நான், பெரியாரைப் படிக்கப் படிக்க மேலும் மேலும் அவர் மீது மரியாதை அதிகமாகியே வந்தது. அதுதான் உண்மை!

பெரியாரைத் தெலுங்கர் என்று குற்றம் சாட்டும் குறுமதியாளர்களே அதிர்ச்சி அடையும் தகவல்கள் இதில் உள்ளன.

1941ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெஜவாடா போனார் பெரியார். அவரைக் கடுமையாக ஆந்திரர்கள் எதிர்த்தார்கள். ஆந்திர வைரி, ஆந்திரத் துரோகி என்று கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள். ‘ஆந்திர தேசத் துரோகி ராமசாமி வருகிறார், மறுபடியும் தமிழ் மாயையில் விழ வேண்டாம்என்று துண்டு வெளியீடுகளை அச்சடித்து வழங்கினார்கள். அவர் தமிழ் சம்பிரதாயத்தில் பட்டு தமிழ் மாதாவைப் பூஜிப்பவராக இருக்கிறார். தெலுங்கு ஜில்லாக்களை திராவிட ஸ்தானமென்ற பேரில் தமிழ் ஜாதியார்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த சங்கல்பம் செய்து கொண்டிருக்கிறார். பிராமணர்கள் பரம துன்மார்க்கர் களென்றும் கூறி நமக்குள்ளேயே பேதம் கற்பித்து வருகிறார். உத்தியோகங்களனைத்திலும் தெலுங்கு பிராமணரல்லாதார்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்து ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் எல்லா வற்றையும் தமிழ் பிராமணரல்லாதாராகிய முதலியார்கள், பிள்ளை களாகியவர்களுக்கு ஆக்கி வைத்து வருகிறார்.

ஜஸ்டிஸ் என்ற பெயரில் ஆந்திர தேசத்துக்கு அநியாயம் செய்துவரும் வேஷதாரிகள் சங்கமாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கமென்னும் இயக்கத்தின் தலைவராக இந்த மகா துஷ்ட நாயக்கர் இருந்து வருகிறார். ....... என்ற அந்தத் துண்டறிக்கை மிக நீளமானது. ஆந்திர மாதாவிற்கு ஜயம் உண்டாகுக. ஆந்திர மாதாதுரோகிகளுக்கு அபஜயம் கூடுக - என்று அது முடியும். பாண்டுரங்க கேசவராவ் என்ற ஆந்திரா பார்லிமெண்டரி தலைவர் அச்சடித்த துண்டறிக்கை இது. (விடுதலை, 12.2.1941)

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரியார், ஆந்திர சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் பாண்டுரங்க கேசவராவ் ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பி வைத்தார். ‘மகிஷா சூரமர்த்தினி பலி கேட்பாள்என்று சொல்கிறது அந்தக் கடிதம். ஆறு மாதத்தில் உன் குடும்பத்தில் மகிஷா சூர மர்த்தினி பலி கேட்பாள் என்றும் ஆந்திர ரத்தம் உன்னிடம் இல்லையா என்றும், திராவிட நாடு பிரிவினை ஆந்திரர்க்கு எதிரானது என்றும் அதில் கூறப்பட்டது. இந்தக் கடிதம் முன்னாள் முதல்வர் ரெட்டி நாயுடு குடும்பத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர் நீதிக்கட்சியைச் சேர்ந்தவர், (விடுதலை 13.2.1941)

அதாவது பெரியார், யார் என்பதை 1940ஆம் ஆண்டே ஆந்திரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், தமிழர்கள் சிலருக்குத்தான் 2021ஆம் ஆண்டிலும் தெரியவில்லை.

பெரியாருடன் பயணித்த ஆளுமைகள் பத்து என்று ஒரு கட்டுரை உள்ளதாகப் பார்த்தேன். யார் யார்?

கப்பலோட்டிய தமிழன் ..சி... தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள், தமிழ்த் தென்றல் திரு. வி.., நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க்காவலர் கி..பெ.விசுவநாதம், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திராவிட மொழி நூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர், தனித்தமிழ் பேராசிரியர் இலக்குவனார், தனித்தமிழ் அரிமா அண்ணல் தங்கோ, தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோர் தான் அந்த பத்துப் பேர். இவர்களோடு பெரியாரின் பயணம் விரிவாக உள்ளது.

இவை போக திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் முதல் நன்னன் வரையிலான அய்ம்பது தமிழ்ப்புலவர்களுக்கும் பெரியாருக்குமான தொடர்பு குறித்த வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. தான் வாழ்ந்த காலத்துத் தமிழ்ப்புலவர்கள் அனைவரோடும் அவர் இணைந்து இருந்துள்ளார். அவர்களும் தங்களவராகப் பெரியாரை மதித்துப் போற்றி இருக்கிறார்கள்.

உண்மையாகவே பெரியாருக்கு தமிழ் இலக்கியங்கள் மீது

பற்று இல்லையா?

பெரியார் விரும்பியது ஆரியம் விலக்கிய தமிழ்உண்மையான தமிழ்ப்பற்று இருப்பதால் தான் தூய்மையான தமிழ்ச்சிந்தனையை தமிழில் எதிர்பார்த்தார்.

இராமாயணத்தை கொளுத்தச் சொன்னார். சங்க இலக்கியங்களை அல்ல. அவர் கம்பரை எதிர்த்தார். வள்ளுவரை அல்ல. 'இராமாயணம் கொளுத்தப்பட்ட இடத்தில் திருக்குறளை வைக்க வேண்டும் என்றார். வள்ளுவரைத் தாண்டிய சிந்தனை பாரதிதாசனிடம் இருக்கிறது. எனவே புரட்சிக்கவிஞரை அந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றார். 'தமிழில் இருந்து சைவத்தையும் ஆரியத்தையும் போக்கிவிட்டால் நம்மை அறியாமல் நமக்கு பழந்தமிழ் கிடைத்துவிடும்' என்றார். ஆரியமும் சமயமும் தமிழரை ஆக்கிரமிக்க தமிழை கபளீகரம் செய்துவிட்டது என்று பெரியார் நினைத்தார். அதனாலேயே ஆரியச் சிந்தனை வயப்பட்ட தமிழ் இலக்கியத்தை விமர்சித்தார்.

.வே.சா.வையும் வையாபுரியாரையும் தான் அவர் விமர்சித்தாரே தவிர, பாவாணரையும் இலக்குவனாரையும் அல்ல. இந்த நுட்பத்தை அனைவரும் உணர வேண்டும்.

கபிலர், பாய்ச்சலூரார், வள்ளுவர், அவ்வை ஆகியோரைப் போற்றினார். கம்பர், சேக்கிழார், அருணகிரிநாதரை விமர்சித்தார். இந்த பாட வேறுபாடு உணராதவர் தான் பெரியாரை தமிழ் இலக்கியத்துக்கு எதிரியாகப் பார்ப்பார்கள்.

இந்த நூல் வாசிப்பவர்கள் இதன் மூலம் எதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று கருதுகிறீர்கள்?

உண்மைப் பெரியாரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் விரும்பியது ஆரியம் விலக்கிய தமிழ். ஆரியம் உள்ளடக்கிய தமிழை அவர் விமர்சித்தார். தமிழ் இலக்கியத்தை பகுத்தறிவு விமர்சன நெறிப் பார்வையுடன் பார்த்தார். இது ஒரு விமர்சனப் பார்வை. ஒப்பியல் நோக்கு போல இது பகுத்தறிவு நோக்கு.

அவரது சமூகநீதி என்பது தமிழன் அனைத்து இடங்களையும் கைப்பற்றி முன்னேறி விட வேண்டும் என்பதற்கான கதவு. கோட்டை முதல் கோவில் வரை உள்ளே நுழைந்துவிடவேண்டும் தமிழன் என்று நினைத்தார். அதற்கான திட்டம் தான் சமூகநீதி. தமிழ்நாடு தமிழருக்கே என்று  1938 இல் தொடங்கியவர் அவர். இறுதிவரை அந்த முழக்கத்தை விடவில்லை. வாக்கு அரசியலில் புரண்டும் கிடக்கும் சிலர் தங்களை மாவீரர்களாகவும், பெரியாரை துரோகியாகவும் சித்தரிக்கும் அளவுக்கு இந்தத் தமிழ்ச்சமூகத்தின் சிந்தனையை சில டாலர் கரன்சி கரையான்கள் செல்லரிக்க விடக்கூடாது என்ற ஆற்றாமையின் விளைவு தான் இந்த நூல்!

பெரியாரின் எழுத்துகள் திராவிடர் கழகம்வே.ஆனைமுத்து. பெரியார் திராவிடர் கழகம் ஆகியோரின் தொகுப்புகளாக உள்ளன.

இந்நூல் எப்படி வேறுபட்டது?

இது பெரியார் சிந்தனைகளின் தொகுப்பு நூல் அல்ல. குடி அரசு, விடுதலை இதழ்களின் தொகுப்பும் பதிப்பும் அல்ல. பெரியார் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் மறுப்பு நூல் இது.

திராவிடம் என்ற சொல்லுக்கு பெரியார் தந்தையல்ல, மகன்தான் என்பதைச்சொல்லி இருக்கிறேன். பெரியாருக்கு முன்னாலே திராவிடம் என்பது மொழி, இன, இடச் சொல்லாக அடையாளப்படுத்தப்பட்டு வந்திருப்பதை பல்வேறு அகராதிகள் மூலமாக எடுத்துக் காட்டி இருக்கிறேன். பண்டித அயோத்திதாசர், திராவிடம் என்ற சொல்லை எந்த வகையில் கையாண்டார் என்பதை அவரதுதமிழன்இதழின் பக்கங்கள் மூலமாகச் சொல்லி இருக்கிறேன்.

1930-1945 காலகட்டத்தில் தமிழின எழுச்சிக்கு பெரியாரின் பங்களிப்புகளை முழுமையாக அறியலாம். ‘தமிழ்த்தேசியம்என்பதற்கு சோழகந்த சச்சிதாநந்தன் ஆற்றிய பங்களிப்பு இன்றைய தமிழ்த்தேசிய மேதைகள் அறியமாட்டார்கள். அதே போல் இவர்களுக்கு பண்டித எஸ்.எஸ்.ஆனந்தரைத் தெரியாது. இவர்கள்விடுதலையில் அதிகமாக எழுதி உள்ளார்கள். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பெரியார்தமிழியமே பேசினார் என்பதையும், அனைத்துத் துறைகளிலும் தமிழே இருக்க வேண்டும் என்பது குறித்து எழுதியதையும் விரிவாக எடுத்துக் காட்டி இருக்கிறேன்.

இறுதியாக, தமிழீழமும் தந்தைப் பெரியாரும் என்ற கட்டுரை உள்ளது. தனித்தமிழீழம் காண அறவழியில் முயற்சித்த தந்தை செல்வாவையும், ஆயுதவழியில் அன்று போராடிய சத்தியசீலனையும் (இவரது அமைப்பில் தான் மாணவர் அமைப்பில் புலித்தலைவர் பிரபாகரன் இருந்தார்) நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கியவர் பெரியார் என்பதையும் சொல்லி இருக்கிறேன்.

நன்றி: 'அந்திமழை', செப்டம்பர் 2021

No comments:

Post a Comment