சுற்றுலாத் தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் டில்லி எய்ம்ஸ் இயக்குநர் அறிவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 2, 2021

சுற்றுலாத் தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் டில்லி எய்ம்ஸ் இயக்குநர் அறிவுரை

புதுடில்லி, ஆக. 2   சுற்றுலாத் தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடினால் வைரஸ் பரவலுக்கு வழிவகுத்துவிடும்.

நமது நாட்டில் தினசரி கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது பெரிய அளவு மாற்றமில்லாமல் சுமார் 41 ஆயிரம், 42 ஆயிரம் பேருக்கு தினமும் தொற்று உறுதியாகி வருகிறது.

இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்தியாவில் ஜைடஸ் கெடில்லா உள்ளிட்ட நிறுவனங் களின் கரோனா தடுப்பூசிகள் விரைவில் அறிமுகமாக உள்ளன. இந்த நேரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசியால் மட்டுமே கரோனாவில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

இப்போதைய நிலையில் கரோனா அச்சுறுத்தல் ஓயவில்லை. இந்த சூழ்நிலையில் சுற்றுலாத் தலங்களில் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். கூட்டம் கூடினால் வைரஸ் பரவலுக்கு வழிவகுத்துவிடும். முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடுதலாக ஒரு தவணை கரோனா தடுப்பூசி கூட போட்டுக் கொள் ளலாம் என்று பல்வேறு நிபுணர்கள் கூறி வருகின்றனர். இது அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இந்த சூழலில் ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக் கொண் டவர்களுக்கு 3ஆவது தவணை தடுப்பூசி போடுவது ஏற் புடையது கிடையாது. உலகம் முழுவதும் அனைத்து தரப் பினருக்கும் தடுப்பூசி போடப்பட்டால் மட்டுமே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய

மேற்கூரை ஓடுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, ஆக. 2- புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானத்தின் மேற்கூரைக்கு பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பொற்பனைக் கோட்டையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையிலான குழுவினர் கடந்த 3 நாட்களாக அக ழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அகழாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களில் மண்ணிலிருந்து பழங்கால பொருட்கள் பிரித்து எடுக்கப்பட்டு வருகின்றன.

தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் .மணிகண்டன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆனந்தன், இளங்கோ, .மணிகண்டன் உள்ளிட்டோர் பொற்பனைக்கோட்டை மேற்கு சுவரின் மீது 1.8.2021 அன்று மேலாய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கட்டுமானத்தின் மேற்கூரைக்காக பயன்படுத்தப் பட்ட உடைந்த நிலையிலான ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து .மணிகண்டன் கூறியது: கோட்டையின் மதில் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஆயுதங்கள் தாங்கிய வீரர்கள் தங்குவதற்காக 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை யான ஓடுகளால் வேயப்பட்ட அரண்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேற்கூரையின் மீது ஓடுகளை அடுத்தடுத்து பொருத்து வதற்கு ஏற்ப ஒவ்வொரு ஓட்டிலும் காடிகள் அமைக்கப் பட்டுள்ளன. சங்க காலத்திலேயே இவ்வாறு நேர்த்தியாக வடிவமைத்து இருப்பது வியக்கும் வகையில் உள்ளது.

மேலும், சில ஓடுகள் துளையிடப்பட்டு உள்ளதால், இப்பகுதியில் இருந்த உருக்கு ஆலையில் இருந்து கம்பிகள் தயாரித்து துளையில் பொருத்தப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுபோன்ற ஓடுகள் இந்த மாவட்டத்தில் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. இது மாதிரியான ஓடுகள் இங்கு ஏராளமாக புதைந்துள்ளன. 3 அடி ஆழத்துக்கு அகழாய்வு செய்த பிறகே கட்டுமானங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றார்.

இந்நிலையில், அகழாய்வு பணியை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் சென்று பார்வையிட்டார்.

அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு 160 பேர் விண்ணப்பம்

சென்னை, ஆக.2 அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, 160 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களின் பட்டியலை வெளியிடாமல், 9ஆம் தேதி நேர்காணல் நடத் தப்பட உள்ளது.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா பல்கலை. துணைவேந்தராக, கருநாடக மாநி லத்தை சேர்ந்த, பேராசிரியர் சூரப்பா பதவி வகித்தார். அவரின் பதவிக்காலம், ஏப்ரல் 11இல் முடிந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்யவதற்கான அறிவிப்பு வெளியானது.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் தலைமையில், ஓய்வு பெற்ற அய்..எஸ்., அதிகாரி ஷீலாராணி சுங்கத் மற்றும் சென்னை பல்கலை. முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் ஆகியோர் இடம் பெற்ற தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் சார்பில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம், 160 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 10 பேரை தேர்வு செய்து, ஆளுநரிடம் அளிக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கான நேர்காணல், 9ஆம் தேதி நடக்க உள்ளது.

அண்ணா பல்கலைக்கு, இந்த முறை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே துணைவேந்தராக தேர்வு செய்யப் பட வேண்டும் என்பதில், தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.

No comments:

Post a Comment