அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் கேள்விக் கணைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 23, 2021

அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா.வின் கேள்விக் கணைகள்

"பெண்ணை இந்த தேசத் திலே  மனித ஜென்மம் கொண்ட வளாகவே கருதவில்லை. அவள் ஆண் பிள்ளையின் சொத் தாகத்தான் பாவிக்கப்பட்டு வந்திருக்கிறாள்.

ஓர் அரசன், தன் மனைவி யையே, விலைக்கு விற்றான். இன்னொருவன், தன் மகனுக்குப் பேசிய பெண்ணைத் தானே மணந்து கொண்டான்;  ஒரு பேர் வழி, தன் தகப்பன் கட்டளைக் கிணங்கி தாயைக் கொன்றான். ஓர் அரசன் நாட்டியம் ஆடிய பெண்ணின் மேலே மோகம் கொண்டு, அவளை பட்டமகிஷி ஸ்தானத்தில் வைத்து, பட்ட மகிஷியைத் துரத்தி விட்டான்.

ஒருவன் எத்தனையோ தாரங்களை மணந்து கொண்டான். ஒருவன் தன் மனைவியின் கற்பைச் சோதிக்க எண்ணி, அவளைத் தீயில் குதித்து எழு என்று கட்டளை இட்டான். அரசன் எவ்வழி - குடிகள் அவ்வழி! பெண்ணின் கதியைப் பற்றி என்ன சொல்வது?"

***

"பெண்ணைத் தேவதாசியாக்கினார்கள். பெண்ணுக்கு நேர்ந்த அவமானங்களுக்குள், இதைக் காட்டிலும் பயங்கரமானதும், கேவலமான தும் வேறு எதுவும் இருக்க முடியாது. இந்த ஆபாசமான வழக்கத்தைச் சிலர் சாஸ்திர மேற் கோள்களுடன் ஆதரிப்பதை பார்க்கும் பொழுது, அவர்களை அப்படியே சித்திரவதை செய்யலாம் போல - அவ்வளவு ஆத்திரம் உண்டாகின்றது. பெண்களை இதைக் காட்டிலும் கொடுமையாகக் கேவலப்படுத்த முடியுமா?"

"அக்கிரகாரத்து அதிசய மனிதர்" என்று அறிஞர் அண்ணாவால் வர்ணிக்கப் பட்ட .ரா. என்ற

.இராமசாமி அய்யங்கார் என்ற முற்போக்கு எழுத் தாளர் 1945இல் அதாவது சுமார் 76 ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'கோதைத்தீவு' புதினத்தில் மேற்காட்டிய கருத்துகளை தனது பாத் திரங்கள் வாயிலாகப் பேச வைத்தவர்.

தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் போன்ற பெருமக்களை அக்காலத் திலேயே அடையாளம் கண்டு "தமிழ்நாட்டுப் பெரியார்கள்" என்ற  நூல் எழுதி பெருமைப்படுத் திய பெரு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்!

தேசியவாதி - விடுதலைப் போராட்டத்தில் உப்பு சத்தியாகிரகத்தில்  6 மாத தண்டனை அடைந்து அலிப்பூர் ஜெயிலில் இருந்தவர்!

'மணிக்கொடி' ஏட்டின் ஆசிரியராக, ஏராள மான புதுமை எழுத்தாளர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தவர்!

எனது பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் நான் விரும்பி சேகரித்த நூல்களில், '.ரா.'வின் நூல்களும், மராத்திய வி.ஸி. காண்டேகரின் புதினங்களும்தான் - தமிழில் இலக்கிய ரீதியாக இளைப்பாற்றிக் கொள்ள!

1919களில் 'சுந்தரி' என்ற அக்கிரகார இளம் விதவைபற்றிய - புதினம் சமூகக் கொடுமைகளை அப்படியே 'ஸ்கேன்' செய்துகாட்டும் யதார்த்த நாவல்!

சமூகத்தில் எதிர்நீச்சல் எழுத்தாளர் இவர்! பாராட்டைப் பற்றி கவலைப்படாத யதார்த்த எழுத்தாளர். மற்றவர்கள் போற்றிய இராமாயணப் பாத்திரங்களை கடுமையாக விமர்சித்து, தன் நெஞ்சுக்கு நீதி சொன்ன நேர்மையாளர்!

இதே 'கோதைத் தீவு' புதினத்தில் "விபீஷணனோ லங்கா பட்டணத்தின் மகுடத்தை இராமனிடமிருந்து பெற்றுக் கொண்டான். இந்த மகுடம் அண்ணன் இராவணனைக் காட்டிக் கொடுத்ததற்குப் பரிசு என்று ஏன் சொல்லக் கூடாது!"

"பரதனுடைய பக்தியை விபீஷணனிடம் காண முடியவில்லை! அண்ணனுடைய மகு டத்தை தம்பி கூச்சமில்லாமல் வாங்கிக் கொண் டானே என்று லோகா பவிதம் ஏற்படுமே என்பதற்குக்கூட, விபீஷணன் பயப்படாமல் காரியம் செய்ததைப் பார்த்தால் அவன் மறுக்கலப்பில்லாத பக்தன் என்று திட்டமாகச் சொல்ல முடியாது. அண்ணனைக் காட்டிக் கொடுத்துப் பட்டத்தைப் பெறும் தம்பியை பக்தன் என்று சொல்ல முடியுமா?"

"விபீஷணனுடைய செயலை பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள்  ஆகிவிட்டார்கள்"

-அருமையான நெத்தியடி பார்த்தீர்களா? பதில் எவரால் கூற முடியும்!

அவரது நினைவு நாள் (23.8.2021) இன்று. 17.9.1889இல் பிறந்தார். 23.8.1951இல் மறைந்தார்.

என்றாலும் புதுமை இலக்கிய உலகில் என்றும் வாழுகிறார் - இந்த அக்கிரகாரத்து அதிசய மனிதர்! இல்லையா?

No comments:

Post a Comment