நீட் தேர்வு விலக்கு: மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் புதிய முயற்சி!
புதுடில்லி, ஜூலை 26- நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்னும் தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் எல்லா மக்களுக்கும் நீட் தேர்வு சமவாய்ப்பு வழங்கவில்லை என்பதை தமிழ்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கிராமப்புற மற்றும் ஏழைகளின் மருத்துவக் கனவை சிதைப்பதாக ‘நீட்' அமைந்துள்ளது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்பை அழுத்தமாக பதிவு செய்து வருகிறது. தி.மு.க. அரசு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழுத்தம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா காரணமாக இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும் டில்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார்.
இதுதவிர தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் டில்லி சென்று, ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்தித்து இதே கோரிக் கையை வலியுறுத்தினார்.
நீதிபதி ஏ.கே.ராஜன்குழு
நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர் நிலை குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழ்நாட்டு மக்களிடம் கருத்துக் கேட்டு தனது, அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில், உச்சநீதி மன்றத்தை அணுக தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு ஏதிராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் நாட்டில் ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு, உச்சநீதி மன்றத்தின் கிளை அமர்வுகளை அமைக்க கோரியும் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் உருவாக்கும் வகையிலான இரண்டாவது மசோதாவை கொண்டு வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் தங்களது அதி காரத்துக்கு உட்பட்டு புதிய சட்டம் கொண்டு வருவதற்கான தனிநபர் மசோதாக்களை தாக்கல் செய்யலாம். இதன் மூலம் எந்த ஒரு பிரச்சினை குறித்தும், புதிய சட்டத்தையோ அல்லது சட்ட திருத்தத்தையோ கொண்டு வருவதற்கான மசோதாக்களை தாக்கல் செய்ய உறுப்பினர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் திமுக உறுப்பினர் பி.வில்சன் மாநிலங்களவையில் இரண்டு முக்கிய மான தனிநபர் மசோதாக்களை கொண்டு வந்துள்ளார். இதில் ஒன்று ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு நீட் விலக்கு அளிக்க வகை கோரும் மசோதா வாகும். இதேபோல் உச்சநீதிமன்ற கிளைகளை உருவாக்கும் வகையிலான இரண்டாவது மசோதாவையும் அவர் கொண்டு வந்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் அதிகாரத்தை வரையறுக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்து சென்னையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்கவேண்டும் என்று தனிநபர் மசோதாவில் அவர் கோரிக்கை விடுத் துள்ளார். இந்த இரண்டு தனிநபர் மசோதாக்களும் பல மாநிலங்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றன. எனவே இந்த மசோதாக்களுக்கு பலத்த ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment