பெண்கள் கோடாரிகளாம்! கோடாரிகள் என்ன செய்யும் தெரியுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

பெண்கள் கோடாரிகளாம்! கோடாரிகள் என்ன செய்யும் தெரியுமா?

மின்சாரம்

(பார்ப்பனதுக்ளக்தொடர்ந்து பெண்களை இழிவு படுத்தி வருகிறது. ‘பெண்களுக்கு இரங்க நாங்கள் என்ன பேய்களா? பிசாசுகளா?’ என்று கேட்கிறது.

பெண்ணுரிமை என்னும் கோடாரிகளால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றனவாம் - இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பார்ப்பனர்களின் மனப்பான்மை இது தான் - புரிந்து கொள்வீர்!)

சில கேள்விகளும் பதில்களும்

கேள்வி: புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்க்கும் ஸ்டாலின் கலைஞர் நினைவு நூலகத்தை மதுரையில் அமைக்க ரூ. 70 கோடி செலவழிக்கிறாரே?

பதில்: “கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனைஎன்பார்கள். நூலகம் அமைப்பது என்பது அறிவு சார்ந்தது - அவசியமானது. தமிழ் அறிஞர்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

- ‘துக்ளக், 23.6.2021

நாடாளுமன்ற கட்டடம் என்பது இன்றைய பொருளாதார நெருக்கடியில் ரூ.13 ஆயிரம் கோடி செலவு செய்வது அவசியமா? 450 ஆண்டு கால வரலாறு படைத்த ஒரு மசூதியை இடித்துவிட்டு ரூ. 1,100 கோடி செலவில் ராமன் கோயில் கட்டுவது எல்லாம் எந்த அளவுக்காவது மக்கள் நலக் கண்ணோட்டத்தில் உகந்ததாக இருக்க முடியுமா?

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட வேண்டாம். நூலகம் வேறு - கோயில் வேறு.

கேள்வி: இன்றைய காங்கிரஸ் பதாகைகளில் காந்தி, நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோரின் படங்கள் இருப்பதை ஜீரணிக்க முடிகிறதா?

பதில்: நேரு கொள்ளு தாத்தா, இந்திரா பாட்டி, ராஜிவ் அப்பா என்று அவர்கள் படங்களை வைத்துக் கொள்கிறார் கள் என்பதால் ஜீரணித்துக் கொள்ளலாம்.

ஆனால் எதை வைத்து, காந்தி, நேரு படத்தை வைத்துக் கொள்வதை ஜீரணம் செய்வது? தெரியவில்லை.

- ‘துக்ளக், 23.6.2021

நேரு முதல் ராஜீவ் வரை காங்கிரஸ்காரர்கள்தாம். காந்தி யாரும் காங்கிரஸ்காரர்தாம். அந்த வகையில் காங்கிரஸ்காரர் கள் தங்கள் பதாகைகளில் அவர்களின் படங்களை வைத்துக் கொள்கிறார்கள். இதிலென்ன என்ன குற்றம்?

ஆனால் நாடாளுமன்றத்தில் காந்தியாரையும் - அவ ரைப் படுகொலை செய்வதற்கு மூளையாக இருந்து செயல் பட்ட சாவர்க்காரையும் ஒன்றாக வைத்திருப்பது எந்த வகையில் சரி என்றுதுக்ளக்விளக்குமா?

கேள்வி: ‘கணவனும், மனைவியும் ஈகோவைக் காலணியாகக் கருதி வீட்டுக்கு வெளியே விட்டுவிட வேண்டும்என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.செந்தில்நாதன் கூறி இருக்கிறாரே?

பதில்: குடும்ப அமைப்பு தொடங்கி, சமுதாயம், கட்சி, ஆட்சி அமைப்புகள் வரை நிலையாக இருக்க காஞ்சிப் பெரியவர் ஒரு தாரக மந்திரத்தை அளிக்கிறார். ஒன்றுஅபரிகிரஹ’ (இதுபோதும் என்ற திருப்தி), அடுத்ததுநிரகம் பவானா’. (ஈகோ) அகம்பாவம் இல்லாமல் இருப்பது; இந்த இரண்டு குணங்களும் இல்லை என்றால் குடும்பம் தொடங்கி எதுவும் நிலைக்காது. இரண்டும் கடமை உணர்வால்தான் வரும். உரிமைக்குரல் அழியும். இன்று தனி நபர் உரிமை, பெண்ணுரிமை எனும் கோடாரிகளால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றன. இதை வெளிப்படையாகக் கூறாத நீதிமன்றம், சுற்றி வளைத்துஈகோவை விடுங்கள்என்று கூறுகிறது. ஈகோ தனி நபர் உரிமையின் வாரிசு, தனி நபர் உரிமை குடும்பத்துக்கு எதிரான கோஷமாக மாறும்போது குடும்பங்கள் அழிகின்றன - என்பதுதுக்ளக்குருமூர்த்தி பார்ப்பனரின் பதில்.

பெண்கள் குறித்த சிந்தனையில் வடியும் மனுதர்மப் புத்தியின் துர்நாற்றத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதோ சோ ராமசாமி பேசுகிறார்

கேள்வி: ‘கொலம்பியாவில் வீட்டு வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்ளாவிடில், அதைக் காரணம் காட்டி விவாகரத்துக் கோரலாம்என்று சட்டம் கொண்டு வரப்போகிறார்களாமே?

பதில்: வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்த பிறகுதான் பெண்களுக்குப் புத்தி வரும்! ‘அய்யய்யோ! எல்லாம் இப்படி குளறுபடி ஆகிறதேஎன்று அலறி புதிய சட்டம் கோருவார்கள். “வீட்டு வேலைகளை ஆண்கள் கவனிக்க ஆரம்பித்தால் அதையே காரணம் காட்டி, பெண்கள் விவாகரத்துக் கோரலாம்‘’ என்று புதிய சட்டம் வரும் (‘துக்ளக்‘, 10.5.2005).

வீட்டு வேலைகளை ஆண்களும் செய்யலாம், பெண்களும் செய்யலாம். தவறு ஏதுமில்லை என்று சொல்ல மனம் வருகிறதா இந்த மனுதர்மவாதிகளுக்கு? எப்படி எப்படியெல்லாம் கேலி - கிண்டல்!

அதைவிட இன்னொரு கேள்வி - பதில்.

கேள்வி: ஆனானப்பட்ட அரசியல்வாதிகளே பெண்களுக்காக மனம் இரங்கும்போது உங்கள் மனம் மட்டும் அவர்கள் மீது இரக்கம் கொள்ள மறுப்பது ஏன்?

பதில்: பெண்களைப் பார்த்து மனம் இரங்க நான் என்ன அரசியல்வாதியா, பேயா, பிசாசா? (‘துக்ளக்‘ 14.9..2005)

இதற்கு விளக்கமும் வேண்டுமா? சோ ராமசாமி இப்படி என்றால் இந்த குருமூர்த்தி எப்படிப்பட்டவர்?

கேள்வி: பெண்களைப் பற்றி உங்களின் உண்மையான அபிப்ராயம் தான் என்ன?

பதில்: உயர்ந்தவர்கள், அப்படி இருக்க விருப்பம் இல்லாதவர்கள் (‘துக்ளக்‘ 18.3.2009)

இதுதான்துக்ளக்பார்ப்பனர்களின் பார்வையாகி விட்டபிறகு - அவர்கள் வேறு விதமாக எழுது வார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

சோ ராமசாமி தனக்குப் பிறகுதுக்ளக்கைநடத்த அந்தத் தரத்தில் உள்ள பார்ப்பனரைத்தானேபொறுக்கிஎடுத்து அந்த இடத்தில் நியமனம் செய்வார்.

காஞ்சிகாமகோடி சங்கராச்சரியார் ஜெயேந்திர சரஸ்வதி தனது மடத்துக்கு வந்த எழுத் தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்தார். இந்தத் தகவலை கண்ணீரும் கம்பலையுமாகக் கதறி கதறிக் கூறியதை தொலைக் காட்சி களும் ஒளிபரப்பின.

பாதிக்கப்பட்ட பெண்ணே பதறிப்பதறி சொல்லுகிறார். அந்த நேரத்தில் இந்த குருமூர்த்தி குருக்கள் என்ன செய்தார் - சொன்னார் தெரியுமா?

அனுராதா ரமணனுக்குப் பக்கவாத நோய் வந்ததாகவும், காஞ்சி ஆச்சாரியாரின் அனுக்கிரகத்தால் தான் குணம் பெற்றதாக வும், இதே அனுராதா ரமணன் கூறியதாகக் குருமூர்த்தி அண்டப்புளுகை அவிழ்த்துக் கொட்ட (‘துக்ளக்‘ 29.12.2004) பாதிக்கப்பட்ட அந்த எழுத்தாளரான அனுராதா ரமணனும் செவிளில் அறைந்த மாதிரி பதிலடி கொடுத் தாரே!

காஞ்சி சங்கராச்சாரியாருடன் காம்பர மைஸ் ஆகி விட்டதாக அவிழ்த்து விடும் அவர்களை என் கண் எதிரே கொண்டு வந்து நிறுத்துங்கள் பார்க்கலாம். மிரட்டல் களையும், துரத்தல்களையும் எப்படி நிறுத்தி னேன் என்று சொல்லுகிறேன்” (‘குமுதம்‘ 10.1.2005, பக்கம் 61-63) என்று சொன்னாரே - ஆசாமி குருமூர்த்தி எங்கோ மூலையில் முக்காடு போட்டுப் பதுங்கியது எல்லாம் மறந்து போச்சா?

சங்கராச்சாரியாரையும் இழுத்து வந்து குளிர்காய்கிறாரே. பெண்களைப் பற்றி இந்த சங்கராச்சாரியார்களின் யோக்கியதை என்ன?

பிராமணப் பெண்கள் வரதட்சணை தர முடியாவிட்டால் அதற்காக இன்னொரு ஜாதிக்காரரைத் திருமணம் செய்து கொள் வது சரியல்ல.

பெற்றோர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைமரத்திற்கு அந்தப் பெண் ணைத் திருமணம் செய்து வைத்துவிடுங்கள். பிறகு அந்த வாழை மரத்தை வெட்டி விடுங்கள். இப்பொழுது அந்தப் பெண் விதவையாகி விட்டாள் என்று விதவைக் கோலம் கொடுத்துவிடுங்கள். அந்த நோன்பை வாழ்நாள் முழுமையும் இருந்து கன்னியாகவே அவர் நம் மதத்தைக் காப்பாற்ற வேண்டும்!”

- என்று சொன்னாரே அந்த சங்கராச் சாரியாரைத்தான் (சந்திரசேகரேந்திர சரஸ் வதி) குருமூர்த்தி சாட்சிக்கு அழைக்கிறார்.

இன்னொரு சங்கராச்சாரியார் - ஜெயி லுக்கும் பெயிலுக்கும் அலைந்து திரிந்தவர். ஒரு கொலை வழக்கில் சிறைக்குள் கம்பி எண்ணியவர் என்ன சொன்னார் தெரி யுமோ!

விதவைப் பெண்கள் தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள்!” என்றாரே (‘தினமணிதீபாவளிமலர் 1997).

அதனைக் கண்டித்து காஞ்சி சங்கர மடம் முன் திராவிடர் கழக மகளிரணியினர் போராட்டம் நடத்தியதுண்டே!

அதோடு நின்றாரா? வேலைக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவான வர்கள் என்று சொல்லி பெண்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?

எந்த தைரியத்தில் இந்த 21ஆம் நூற் றாண்டிலும்துக்ளக்குகள், குருமூர்த்திகள் பெண்களைக் கேவலமாக இழிவாக எழுது கிறார்கள் - பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்ற துணிச்சலாலா?

இன்று தனி நபர் உரிமை, பெண்ணுரிமை என்னும் கோடாரிகளால் குடும்பங்கள் பிளக்கப்படுகின்றனவாம்‘’ - எழுதுகிறார் குடுமி குருமூர்த்தி.

ஆக பெண்கள் என்றால் உரிமை கோரக்கூடாது - குஷ்டரோகி கணவனை தாசி வீட்டுக்குத் தூக்கிச்சென்ற நளாயினி களாக இருக்க வேண்டும், அய்வருக்கும் தேவியாக இருக்க வேண்டும் - அப்படித் தானே?

ஒன்றை எண்ணிப்பாருங்கள் - பேய் தான் பெண்களுக்காக இரங்கும் என்று சொல்லுகிற இவர்கள் வீட்டிலும் பெண்கள் இல்லையா? தாய் இல்லையா? மகள்கள் இல்லையா? சகோதரிகள் இல்லையா?

இந்த இரக்கமற்ற மனுவாதிகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இதற்கு ஒரு முடிவை பெண்கள் தான் காண வேண்டும். பெண்கள் கோடாரிகளாம் - கோடாரிகள் என்ன செய்யும் தெரியுமா?

அடக்க நினைத்தால், அடக்கப்பட்ட வர்கள் அரிமாக்களாக எழுவார்கள் - எச்சரிக்கை!

No comments:

Post a Comment