உணவு - நெருப்பு - பெண்கள் : தெரிந்து கொள்ள வேண்டியவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 23, 2021

உணவு - நெருப்பு - பெண்கள் : தெரிந்து கொள்ள வேண்டியவை!

நம் உணவு முறையில் உட்கொள்ளப்படும் உணவுகளை வைத்து, காய்கறி உணவு உண்ப வர்கள்  (Vegetarian),  இறைச்சி உணவு உண்ப வர்கள் (Non-Vegetarian) என்று பிரித்துக் கூறு கிறோம்.

நம் நாட்டில் 'சைவ உணவு', 'அசைவ உணவு' என்று குறிப்பிட்ட பிரிவினர் ஏற்றுக் கொண்ட - மதம், ஜாதி அடிப்படையிலான பெயர்களாக பின்னாளில் புழக்கத்தில் வந்துவிட்டது!

ராணுவத்தில் பணிபுரிவோருக்கு காய்கறி உணவு போதிய சத்தையும், உடல் பலத்தையும் தராது என்பதால் அவர்களுக்கு இறைச்சி உணவு களாகவே அவர்களது உணவுக் கூடங்களில் தரப்படும். அதனால் இறைச்சி உணவு விற்கும் உணவுச்சாலை - ஓட்டல்களுக்கு "மிலிட்டரி ஓட்டல்" என்று பெயர்ப் பலகைகளில் பாமர மக்களுக்கும் இந்த உணவுக் கடையைப்பற்றி புரிந்துகொள்ளும் வகையில் விளம்பரப்படுத்து கின்றனர் போலும்!

இந்த இரு வகை உணவு முறை மனித குல வரலாற்றில் எப்படி உருவாகியது என்பதை "பெண்களும் சமூகமும்" என்ற (திராவிடர் கழகம் 2018இல் வெளியிட்ட) ஈழத்து ஆய்வறிஞர் .சி. கந்தையா அவர்கள் எழுதிய நூலில் எளிமையாக தெளிவுற விளக்குகிறார்!

"கொரில்லாக்களிடையே காணப்பட்ட இவ் வகை வாழ்க்கையை நாம் இன்றும் தாழ்நிலையில் உள்ள மக்களிடையேயும் காணலாம்.

மக்களின் உடல் அமைப்பும், பற்களும் தாவரம், ஊன் என்று இரு வகை உணவுகளையும் கொள்வதற்கேற்றவை (இதுபற்றி சிலர் காய்கறி - தாவர உணவுகளைச் சாப்பிடும் வகையில்தான் நம் பற்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை  காய்கறி உணவைப் 'பிரபலப்படுத்த' இப்படி ஒரு தவறான கருத்தைப் பரப்புகின்றனர்." - -ர்).

ஆகவே முற்காலத்தில் உணவு தேடும் வேலைகளில் ஆண் - பெண் என்று இருபாலி னரிடையே பிரிவு உண்டாயிருத்தல் வேண்டும்.

ஆண்கள் வேட்டையாடி, ஊன் உண்ணவும், பெண்கள், சிறுவர்கள், வயது முதிர்ந்தவர், வேட் டையாட மாட்டாதவர்கள் என்போர், பழங்கள், கிழங்குகள் போன்றவற்றையும் தேடினார்கள்.

ஆடவர் தாம் வேட்டையாடிய உணவை தாமே வேட்டையாடிய இடத்தில் பச்சையாக உண்பார்கள்! உறைவிடத்துக்குச் சென்று, பெண்கள் சேகரித்த தாவர உணவின் பங்கையும் பெற்றார்கள். இறைச்சியை பக்குவம் செய்வ தெப்படி என்று அறியாத பழங்காலத்தில் ஊன் உணவு அதிகம் கிடைத்தமையால் ஆண்களும், பெண்களும் உணவுப் பொருள்களை மாற்றிக் கொண்டார்கள்!

இது ஆண் - பெண் என்ற இருபாலரும் ஒருவர்மீது ஒருவர் கொண்ட விருப்பினாலும், இரக்கம், தருமம் என்னும் உணர்ச்சிகளாலும் நடைபெற்றதாகலாம்!

ஆடவனுக்குத் தாவர உணவு வேண்டியிருந்தது. இதனை அவன் பெண்ணிடம் பெற் றான். இதனால் ஆடவருக்கும், மகளிருக்குமி டையில் ஒரு வகைத் தொடர்பு உண்டாயிற்று! இத்தொடர்பு பெண்ணுக்கு வாய்ப்புடையதாயிருந்தது.

மனிதன் நெருப்பை உண்டாக்க அறிந்து அது அணைந்து போகாதபடி காப்பாற்ற வேண்டிய போது இவ்வாய்ப்பு மேலும் பலமடைந்தது.

உறை பனிக்கால மனிதன் நெருப்பைக் குளிர் காயவும், அக்காலத்தில் நடமாடிய பெரிய காட்டு விலங்குகள் தம்மைத் தாக்குவதினின்று பிழைக் கவும், இறைச்சியைச் சுடவும் பயன்படுத்தினான்.

முற்காலத்தில் நெருப்பை அணையாதபடி பாதுகாத்தல் பெண்ணின் கடமையாக இருந்தது! வேட்டையாடச் செல்லும் ஆடவன் நெருப் பையும் உடன் கொண்டு செல்லுதல் ஆபத்தாயும், முடியாததாயும் இருந்தது.

பெண்கள் நெருப்பை ஓரிடத்தில் வைத்துக் காக்க வேண்டியிருந்தமையின் காரணமாக உறைவிடங்களை அடிக்கடி மாற்றுதல் முடியா திருந்தது.

முற்காலத்தில் ஆடவன் பெண்ணிடம் கொண்ட கவர்ச்சியினால் உறைவிடத்துக்குச் சென்றான். பிறகு இடையிடையே வந்து போனான்!

நெருப்பு அவர்களின் தோழமையை வலுவுள்ளதாக்கிய கதை எப்படி பார்த்தீர்களா!

முற்காலத்தில் குறிக்கப்பட்ட சில காலத் திலேயே ஆடவன் பெண்ணின் தோழமையுடை யவனாக இருந்தான். இப்பொழுது அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் எப்பொழுதும் சென்றான். அவன் நெருப்பின் பொருட்டு அவளிடம் தங்கியிருந்தான். தான் வேட்டையாடிப் பெற்ற ஊன் உணவைச் சமைத்து உண்ணும் பொருட்டு உறைவிடத்துக்கு வந்தான்!

தான் செய்யும் வேலைக்காக உணவில் ஒரு பங்கைக் கேட்கக் கூடிய நிலையைப் பெண் அடைந்தாள். இது பெண்ணின் நிலையை சிறிது உயர்த்திற்று.

பழைய ரோமில் பரிசுத்த நெருப்பை அணையாமல் காப்பதற்கு கன்னிப் பெண்கள் நியமிக்கப்பட்டார்கள்!"

- இவ்வாறு அழகாக மனிதகுலம்  எப்படி பெண், நெருப்பு, உணவு முறையை அணுகி இதில் பிறகுதான் கடவுளும், மதங்களும் நுழைக்கப்பட்டன என்பதை இதன் மூலமே எவரும் புரிந்து கொள்ளலாம்.

வாழ்வியலில் மூடத்தனம் முளை விட்டுக் கிளம்பியது -  எப்படி புரிகிறதல்லவா?

No comments:

Post a Comment