உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 7, 2021

உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (2)

 


 'பெரியார்' படம் திறக்க அனுமதியளிக்க மாட்டேன் (மின் அலுவலகத்தில்) என ஆவேசமாகக் கூறியதைக் கேட்ட தங்கதுரை பதற்றமடையாமல், நிதானமாக 'சார் தமிழ்நாடு அரசு, எந்த தலைவர்கள் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என்ற பட்டியலில் தந்தை பெரியார் பெயரும் உள்ளது; அதனால் நீங்கள் மறுக்க முடியாது" எனக் கூறினார்.

"நான் அனுமதியளிக்க மாட்டேன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார் அந்தப் பெரிய அதிகாரி!

"நான் (தங்கதுரை) உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள். பெரியாரின் படத்திறப்பு நிகழ்ச்சி குறித்த நாளில் கண்டிப்பாக நடைபெற்றே தீரும்" எனக் கூறி வந்தேன்.

சென்னை கோட்டையில் அப்போதிருந்த மின்சாரத்துறை அமைச்சர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்து படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வரும்படி அழைத்தேன். அவரும் கண்டிப்பாக பங்கேற்பதாக ஒப்புக்கொண்டார். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. ஆனால், அலுவலக அனுமதி நிகழ்ச்சிக்கு முந்திய நாள் வரை கிடைக்கவில்லை.

உடனே, தலைமை அலுவலகம் சென்று உரிய பிரிவில் கேட்டேன். சம்பந்தப்பட்ட எழுத்தர் சற்று பொறுங்கள் எனக்கூறி சென்றார். சிறிது நேரத்தில் என்னிடம் வந்து தங்களை செக்ரட்டரி வரச்சென்னார் என்றார். நான் சென்று மின்வாரிய செயலாளரை சந்தித்தேன். 'நீங்கள் யார்?' என்றார். நான் எனது பெயரைச்சொல்லி 'எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றுகிறேன்' என்றேன். அவர் மிகுந்த கோபத்துடன் “ பெரியார் படத்தைத் திறக்க வீரமணி தான் வரவேண்டுமா? சங்கத்தலைவர் களை அழைக்கலாம், மின் வாரிய பொறியாளர்களை அழைக்கலாம்! அதனை ஏன் செய்யவில்லை?" என்றார். நான் அமைதியாக, "படத்திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது நாங்கள். பெரியார் படத்தை யார் திறந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை முடிவு செய்வதும் நாங்கள் தான், அதனால் அய்யா வீரமணியை அழைத்துள்ளோம்" என்றேன். சில நிமிடங்கள் அமைதியாக இருந்த மின்வாரிய செயலாளர், 'சரி நீங்க போகலாம்' என்றார். நிகழ்ச்சி நாளன்று படத்திறப்பு அனுமதி வந்து விட்டது. 

நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பிற்பகலில் தோழர்களுடன் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்களை வரவேற்க முன்வாசலில் நின்றோம். கடும் மழை பொழிந்தது, ஆசிரியர், கவிஞர் கலி பூங்குன்றன், பேராசிரியர் இறையன் உட்பட ஏராளமான தோழர்கள் வந்து சேர்ந்தார்கள். 

மேடையில் தலைவர் ஆசிரியர், மற்றும் தலைமைப் பொறியாளர், கழக முன்னோடிகள் தொழிற் சங்க தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மழை விடுவதாக இல்லை. தோழர்கள் மழையில் நனைந்து கொண்டே மேடை முன்பு திரண்டிருந்தனர்.

பேச வேண்டியவர்கள் பேசிமுடித்த பின், இறுதியாக தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து, ஆசிரியர் அவர்கள் சுமார் 1லு மணி நேரம் பேசினார்கள். இல்லை, பெரியாரின் மனித நேயக் கொள்கையை முழங்கினார்கள். கேட்டவர் களின் செவிக்கு அறிவு விருந்தாக அமைந்தது. மேடையில் இருந்த தலைமைப் பொறியாளர் என்னை அழைத்து, "தயவு செய்து தலைவரை எனது அறைக்கு வரச்செய்ய முடியுமா?" எனக் கேட்டார். உடனே நான், 'தலைவரிடம் கேட்டு சொல்கிறேன்' என்றேன். ஆசிரியர் அய்யாவிடம் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். தந்தை பெரியாரின் வாரிசு ஆசிரியர் அவர்கள் மறுக்கவா செய்வார்கள்? நிகழ்ச்சி மிக, மிக சிறப்பாக நடந்து முடிந்தது. தலைமைப்பொறியாளர் அறைக்கு ஆசிரியரை அழைத்து சென்றோம். அனை வருக்கும் தலைமைப் பொறியாளர் சிற்றுண்டி அளித்து சிறப்பித்தார்கள். எந்த பொறியாளர் “நான் ஒரு தீவிர இந்து பக்தன், கோயம்புத்தூர் கவுண்டர் - பெரியாருக்கு எதிரானவன்'' என என்னிடம் கூறினாரோ அதே தலைமைப் பொறியாளர்தான் ஆசிரியரை அழைத்து அனைவருக்கும் விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மேடையில் இருந்த அனைவருக்கும் "தந்தை பெரியார்” வாழ்க்கை வரலாறு நூல் ஆசிரியரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி தொடர்பான செய்திகள், ஆசிரியரின் முழுஉரை ஆகியவை “விடுதலை” யில் மூன்று தினங்கள் தொடர்ந்து வெளிவந்தது. அனைவருக்கும் நான் நன்றி கூறினேன்." 

பெரியாரின் மனிதநேயம் வென்றது!

எப்படிப்பட்ட உறுதியான கொள்கை வாழ்க்கை; நேர்மையும், ஒழுக்கமும் வாளும் கேடயமுமானால் அரசு அதிகாரிகள் எங்கும் எந்த நிலையிலும் உறுதியோடு இருக்க முடியும்.

அதை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டுபவர்தான் நமது தங்கதுரை!

வாழ்க பல்லாண்டு உடல் நலத்துடன்!

No comments:

Post a Comment