‘‘ஊசிமிளகாய்'' - ‘இன்னுமா கரோனா கவலை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

‘‘ஊசிமிளகாய்'' - ‘இன்னுமா கரோனா கவலை?

ஜெய் அனுமான் சொல்லுங்கள் ஓடிவிடும்!'

பழையஅலகாபாத்' பெயரைபிரயாக் ராஜ்' என்ற பெயர் மாற்றிய நிலையில், லட்சக்கணக்கான ஹிந்து குடும்பங்களைச் சார்ந்த சாமியார்களும், சாமியாரிணிகளும், குருஜிகளும், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் இணைந்துஹனுமான் சாலிஸா' மந்திரங்களை 11 முறை நேற்று (செவ்வாய்) உச்சரித்து கரோனாவை விரட்ட .பி.யின் 26 மாவட்டங்களில் ஏற்பாடு செய்து நடந்ததாம்!

காலை 8.30 மணிக்கு ஆர்.எஸ்.எஸின்குடும்ப பிரபோதன்' செயல் திட்டமாக கரோனாவை அழிக்க சக்தி வாய்ந்த இந்த மந்திர உச்சாடனை பலன் தருமாம்!

இனிமேல் யாருக்கும் கவலை வேண்டாம்!

பல மடத் தலைவர்களான பிரயாக் பீடேஸ்வரர் - ஜகத்குரு சுவாமிவாசுதேவானந்த் சரஸ்வதி - (அகில பாரதீய அகாரா பரிஷத் நரேந்திர கிரி என்ற அமைப்பின் தலைவர்), சுவாமி ஜித்தேந்திரஜி, சுவாமி காவ்வாயாஜி, சுவாமி பிரிஜ் சைதன்யஜி, மகராஜ் ஆகிய பல ‘‘பிரபல''ங்களும் இந்த ‘‘ஹனுமான் மந்திர' உச்சாடனம்மூலம் கரோனாவை ஒழிக்க - அழிக்க சக்தி ஏற்படும் என்று நம்பி - இவர்கள்ஜெய்ராம், ஸ்ரீராம் ஜெய்' - மந்திரங்களைக் கூடவே உச்சரித்தனராம்.

இனிமேல் கவலையே வேண்டாம் - கரோனாவுக்குத் தடுப்பூசியாவது வெங்காயமாவது! அதெல்லாம் அட்டர் (Utter) வேஸ்ட்; வீண் - ஹனுமான் மந்திரமே போதுமானது!

அதுமட்டுமா?

குஜராத் மாடல்' என்ற புது மாடல் மாட்டுச் சாணத்தை உடல் முழுவதும் பூசிக் குளியல் செய்வதோடு, பசு மாட்டு மூத்திரத்தை - கோமியத்தை - தினமும் குடித்தால் கரோனா ஓடோடிப் போகுமாம்!

அப்புறம் ஏன் இவ்வளவு ஆஸ்பத்திரி, டாக்டர் - செவிலியர்கள் - இவர்கள் எல்லாம்? தேவையே இல்லை! ‘ஜெய் ஹனுமான்' போதாதா!  அது சரி, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு  ஏன் உலக நாடுகளுக்கு அலையவேண்டும்; எதற்குத் தொழிற்சாலைகளில் உற்பத்தியைப் பெருக்க முனையவேண்டும்?

வாயு புத்திரர்தானே ஹனுமான் - அவர் பார்த்தால் ஆக்சிஜனைப் பஞ்சமில்லாமல் உற்பத்தி செய்து தரமாட்டாரா?

எல்லாம் இனி ஹனுமான்  எனக் கோவில் கட்டி, நிஜ ஹனுமான்களைப் பிடித்துக்கொண்டு வந்து, கர்ப்பக் கிரகத்தில் வைத்து பூஜித்து, ‘வாயு புத்திரா, வரம் தா' என்று பூஜை புனஸ்காரம் செய்தால் போதாதோ!

‘‘கரோனா கிருமியும், உயிர் அணுதானே - அதுவும் வாழத்தான் வேண்டும்'' என்று அருள் உபதேசம்  செய்யும் உத்தரகாண்ட் பா... முதலமைச்சர் ரவாத் அவர்கள்!

மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளி  - ஜாமீனில் உள்ள எம்.பி., பிரயாக்சிங் தாக்கூர் அம்மையார், ‘‘நான் தினமும் பசு மாட்டு மூத்திரம் (கோமியம்) குடிக்கிறேன்; எனக்குக் கரோனா வரவில்லை. எனவே, எல்லோரும் இதைப் பின்பற்றுங்கள்'' என்கிறார்.

என்னே, அறிவியல் கொழுந்துகள் பார்த்தீர்களா? பரந்த பாரத புண்ணிய பூமியின் வேத கலாச்சாரத்தின் விளைவு எப்படி, என்ன  வழியை நாட்டோருக்குச் சொல்லுகிறது பார்த்தீர்களா?

இனி நமக்கில்லை கரோனா பயம் -

ஜெய் அனுமான், உய் - கோமியம்!

No comments:

Post a Comment