திருமாவளவன் எம்.பி. வலியுறுத்தல்
சென்னை, ஏப்.7 வாக்குப்பதிவு இயந்திரங் களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தொல். திருமாவளவன் இன்று (ஏப். 07) வெளியிட்ட அறிக்கை:
“தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. எனினும், எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை.
சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம்.
அதேநேரத்தில், வாக்கு எண்ணப்படும் மய்யங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
கோடை வெயில், கரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75% வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment