ஒடுக்கப்பட்ட மக்கள் தலையெடுக்காமல் தடுக்கும் பா.ஜ.க. - துணை போகும் அ.தி.மு.க.வைத் தோற்கடிப்பீர்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரின் முக்கிய
அறிக்கைபொதுவாக ‘நீட்' தேர்வே கூடாது என்ற கோரிக்கை எல்லாத்தரப்பினராலும் எழுந்து நிற்கும் நிலையில், இப்பொழுது செவிலியர் படிப்புக்கும் ‘நீட்' என்று மத்திய அரசு அறிவித்திருப்பது - ஒடுக்கப்பட்ட மக்களைத் தலை யெடுக்க விடாமல் தடுக்கும் சமூக அநீதியாகும்; இதற்குக் காரணமான பா.ஜ.க. - அதற்குத் துணை போகும் அ.தி.மு.க.வை வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியுறச் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் புகுத்தப்பட்ட ‘நீட்' தேர்வை எதிர்த்து தமிழ் நாட்டு மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
எட்டாக் கனியாகவே, கிட்டாத வாய்ப்பாகவே...
அனிதா முதல் பல மாணவிகள், பெற்றோர் உயிரைப் பலி வாங்கி வருவது ‘நீட்!' இந்த மருத்துவப் படிப்பினை ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கும், கிராமப்புற, ஏழை, எளிய பெற்றோரின் பிள்ளை களுக்கும் தடை செய்துவருவது இந்த ‘நீட்!' மருத்துவப் பட்டப் படிப்பும், மேல் பட்டப் படிப்பும் இவர்களுக்கு எட்டாக் கனியாகவே, கிட்டாத வாய்ப்பாகவே ஆக்கப்படுகின்றன இந்த ‘நீட்' தேர்வின்மூலம்.
மத்திய அரசின் சுகாதாரப் பிரிவில் மற்றொரு உள் தனிப் பிரிவு இத்தேர்வினை இந்தியா முழுவதும் நடத்துவது - நாடு முழுவதற்கும் ஒரே தேர்வு - அதற்கு ஒரு தனித் தேர்வுக் குழு என்று நடத்துவது அப்பட்டமான அரசமைப்புச் சட்ட விரோதமாகும்.
இதற்கு உச்சநீதிமன்றமும், அரசமைப்புச் சட்ட விதிகள்படி தேர்வு நடத்தும் உரிமை, பல்கலைக் கழகங்களின் தனி உரிமை என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காது, ஏதோ முந்தைய முறையில் ஊழல் நடந்ததைக் களைவதற்கும், மருத்துவக் கல்வி வணிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளால் ஆக்கப்பட்டுள்ள நிலையை மாற்றவும் இப்படி ஓர் ‘ஊழலற்ற', தகுதி, திறமையுள்ள ஒருமுறைதான் ‘நீட்' தேர்வு என்று கூறப்பட்டே, மாநிலங்கள்மீது அவற்றின் உரிமைளைப் பறித்து திணிக்கப்பட்டு வருகிறது!
சட்ட விரோத நடத்தைக்கு உடந்தையாவதும் கண்டனத்திற்குரியது!
விரும்பாத மாநிலங்கள் சட்டமியற்றியும்கூட அவற்றிற்கு விதிவிலக்கு அளிக்க மறுத்து, உச்சநீதி மன்றத்தைக் காட்டி பயமுறுத்தும் செயலும், மாநிலங் களும் கைகட்டி, வாய்ப்பொத்தி இந்த அரசமைப்புச் சட்ட விரோத நடத்தைக்கு உடந்தையாவதும் கண் டனத்திற்குரியது.
கடந்தகால ‘நீட்' தேர்வு அனுபவங்கள் அதன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளனவா என்ற நமது கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத் துறையும், ‘நீட்' தேர்வு ஆதரவாளர்கள், உச்சநீதி மன்றம் உள்பட பதிலளித்து தெளிவுபடுத்த முன் வருவார்களா?
1. அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின்கீழ் இந்த ‘நீட்' தேர்வு - நாடு முழுவதும் ஒரே தேர்வு என்பதை ஒரு தனிக்குழு நடத்த உரிமை உண்டு?
2. ஊழல் இதன்மூலம் ஒழிக்கப்பட்டு விட்டதா? வினாத்தாள்களில் குளறுபடிகள் - உயர்நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியுள்ளன - மறுக்க முடியுமா? முந்தைய நுழைவுத் தேர்வு முறையில் நடந்திராத ஆள் மாறாட்ட வழக்குகள் ஏராளம் - லஞ்சம், லாவண்யம், ஊழல் பெருகியுள்ளதை கண்கூடாக வழக்குகள்மூலம் தெரியவில்லையா?
3. கல்வி வணிக மயமாகாமல் தடுத்ததா ‘நீட்' தேர்வு முறை? மாறாக, பயிற்சி வகுப்பு என்பவைமூலம் பல லட்சக்கணக்கான ரூபாயை ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த பெற்றோர் கட்டியும், தங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்புக் கிடைக்காத நிலையை எண்ணி மனமுடைந்ததுதானே மிச்சம்- இல்லையா?
பல, தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களும் முன்பு தனியே வாங்கிய தங்களது நன்கொடைகளை எப்படி கணக்கில் கொண்டு வருவது என்பதற்கு - கட்டண மாகவே அதனை உயர்த்திப் பெறுங்கள் - என்று அவர்களுக்கு எளிய வகையில் வழிகாட்டி அக்கல் லூரி, பல்கலைக் கழகங்களில் இடங்களை நிரப்பச் செய்து, அவர்களுக்கு உதவியது ‘நீட்' தேர்வு தேவை என்பதற்கான காரணங்களைப் பொய்யாக்கி விட்டதே!
இந்நிலையில், ‘நீட்' தேர்வு என்ற ஆக்டோபஸ் - எட்டுக்கால் பிராணியின் கொடுங்கரங்கள் - இப்போது பிளஸ் டூ படித்து, பிஎஸ்.சி., நர்சிங் மற்றும் செவிலியர் படிப்புப் பயில வரும் மாணவ - மாணவியருக்கும் வருகின்ற ஆண்டிலிருந்து ‘நீட்' தேர்வு என்பது ‘‘ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்'' என்பதுதானே!
மருத்துவப் படிப்பு - எம்.பி.பி.எஸ். படிப்பை படிக்க வைக்க முடியாவிட்டாலும், தமது பிள்ளைகள் நர்சாகவாவது ஆகட்டும் என்று கருதிய பெற்றோரின் எண்ணத்திலும் மண்ணை வாரிப் போடும் ஆபத்தான அறிவிப்பு - முயற்சி அல்லவா? செவிலியர் (நர்சு) கல்விக்கு மட்டுமல்ல; ஆயுர் எனப்படும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி படிப்பு களுக்கும் ‘நீட்' தேர்வு திணிக்கப்பட்டுள்ளது.
நாளொருமேனியும் சமூகநீதியை ஒழிக்கும் உயர்ஜாதி மனப்பான்மையோடு மத்திய பா.ஜ.க. அரசு ஆக்ரோசத்துடன் செயல்பட்டு வருகிறது.
ஜனநாயகத்தின் பேரால் நடக்கும் மாநில உரிமைப் பறிப்பு, மக்களை வாட்டி பிழிய வைக்கும் கொடுமை!
நர்சிங் படிப்பு உட்பட ‘நீட்' தேர்வு
திணிக்கப்படும் பேராபத்து!
இதற்கு ஒரே தீர்வு - வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று வாக்காளர்கள் - மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் மத்திய அரசு கொண்டுவரும் ‘நீட்' போன்ற மக்கள் விரோதத் திட்டங்களுக்குத் தலை யாட்டும் அ.தி.மு.க.விற்கும் - பா.ஜ.க.விற்கும் படு தோல்வியைப் பரிசாகக் கொடுத்து, தி.மு.க. கூட்ட ணியை பெருவாரியாக வெற்றி பெறச் செய்து ஆட்சி யில் அமர்த்தினால், நர்சிங் படிப்பு உட்படத் திணிக்கப்படும் இந்த ‘நீட்' தேர்வு பேராபத்தையும் தடுத்து நிறுத்த முடியும்.
காவிக் கட்சியும், அதன் சர்வ அடிமையான அ.தி.மு.க.வும் எல்லாத் தொகுதிகளிலும் மண்ணைக் கவ்வ வைக்க, பெற்றோர்களே, தாய்மார்களே, உங்கள் பிள்ளைகளின் கல்வியைக் காப்பாற்ற கவனத்துடன் வாக்களியுங்கள்!
தலைவர்,
திராவிடர் கழகம்
15.3.2021