கடலில் மிதக்கும் மிகப் பெரிய சூரிய ஒளி மின்சார நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 27, 2021

கடலில் மிதக்கும் மிகப் பெரிய சூரிய ஒளி மின்சார நிலையம்

உலகெங்கும் மின்சாரத்துக்கான மாற்று ஏற்பாடு பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் மிதக்கும் சூரிய ஒளி மின்சாரநிலையம்  அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சாரநிலையங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்பதும், நிலப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு ஏற்றதாகவும் சூரிய சக்தி உற்பத்தி திட்டங்கள் கருதப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே சூரிய சக்தி உற்பத்தியை சிங்கப்பூர் அரசு ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இடையேயான ஜோகூர்  நீரிணையில், கடல் மீது மிகப் பெரிய சூரிய ஒளி மின்சாரநிலையம் ஏழு கால்பந்து  திடல்களுக்கு சமமான பரப்பளவில் அமைத்துள்ளனர்.

ஆண்டு தோறும் சுமார் ஆறு மில்லியன் கிலோவாட் மணிநேர எரிசக்தியை இந்தப் நிலையம் மூலம் உற்பத்தி செய்ய முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதைவிட குறிப்பாக நான்காயிரம் டன் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைப்பதற்கு இப்புதிய ஏற்பாடு உதவும் என்பதைதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டு வரவேற்கிறார்கள்.

கடல் நீர்ப்பரப்பின் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் சூரிய ஒளி மின்சாரநிலையம் ஏராளமான மின் பேனல்களும், 22 கிலோவாட் சக்தி கொண்ட  டிரான்ஃபார்மர்களும் உள்ளன. கடல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சூரிய சக்தி பண்ணை எத்தகைய பருவ நிலை மாற்றங்களையும் தாக்குப்பிடித்து நிற்கும் வகையிலும், முக்கிய செயல்பாட்டு இயந்திரங்கள் எல்லாம் கச்சிதமாக இயங்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரநிலையம் அமைப்பதில் எதிர்கொள்ள வேண்டிய இதர பல சவால்கள் குறித்து கடல்சார் நிபுணர்கள் விளக்கி உள்ளனர்.

அலைகள், கடல் நீரோட்டங்களின் போக்கு, நுண்ணுயிரிகள் சூரிய தகடுகளில் படிந்துவிடாமல் தடுத்தல் ஆகியவற்றை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மின்  அமைப்புகள், இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இயங்குவதும் உறுதி செய்யப்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்த ஏற்பாட்டின் மூலம் கிடைக்கும் சூரிய சக்தியைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் பகுதி பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment