ஒரு இடத்தில் கூட அ.தி.மு.க., பா.ஜ.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது
தளபதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்றும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்றுவிடக்கூடாது என்றும் தளபதி மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டார்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கும்மிடிப்பூண்டியில் நேற்று (18.3.2021) தேர்தல் பிரச்சாரம் செய்தார். பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:-
உங்களுடன் இருப்பவன்
நான் உங்களை எல்லாம் தேடி - நாடி வந்திருக்கிறேன். தேர்தலுக்காக மட்டும் வந்து போகிறவன் இந்த ஸ்டாலின் அல்ல; எப்போதும் எந்த நேரத்திலும் உங்களோடு இருப்பவன், உங்களுடைய சுக துக்க நிகழ்ச்சி களில் உரிமையோடு கலந்து கொள்பவன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த உரிமையோடு, உணர்வோடு உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். 50 ஆண்டு கால அரசியல் பாரம்பரியத்தை - வரலாற்றைப் பெற்றிருப்பவன்தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தி.மு.க.வில் ஒரு தொண்டனாக 14 வயதில் கோபாலபுரத்தில் என்னை இணைத்துக் கொண்டு, அங்கே இருக்கும் மாணவர்களை ஒன்று திரட்டி ஒரு முடி திருத்தும் நிலையத்தில் இளைஞரணி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அந்த வட்டத்தில் பகுதி பிரதி நிதியாக, சென்னை மாவட்ட பிரதிநிதியாக, பொதுக்குழு உறுப்பினராக, செயற்குழு உறுப் பினராக, இளைஞரணி செயலாளராக, துணைப் பொதுச்செயலாளராக, பொருளா ளராக, கலைஞர் உடல் நலிவுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது இந்த இயக்கத்தின் செயல் தலைவராக, இன்றைக்கு தி.மு.க. தலைவனாக பொறுப் பேற்று பணியாற்றும் வாய்ப்பை பெற்றிருக் கிறேன்.
அலைபேசி கொடுத்தார்களா?
கலைஞர் ஆட்சிக்காலத்தில் நிறை வேற்றப்பட்டவற்றை நான் பட்டியல் போட்டு சொல்லி வருகிறேன். இதேபோல இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் செய்தவற்றைப் பட்டியல் போட்டு சொல் வதற்கு தயாராக இருக்கிறாரா?. ஆளுங் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதாவது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக் கையை அப்படியே காப்பியடித்து வெளியிட்டிருக்கிறார்கள்.
செய்ய முடியாத காரியங்களை-வாய்க்கு வந்த படியெல்லாம்-பொத்தாம் பொதுவாக பல உறுதிமொழிகளை சொல்லி இருக்கிறார். அதில் எது நடக்கும் எது நடக்காது என்று மக்களுக்கு தெரியும். உதாரணமாக, அனை வருக்கும் அலைபேசி இலவசமாக கொடுப் போம் என்று சொன்னார்கள். அதை இப் போதும் சொல்லி இருக்கிறார்கள். இங்கு இருக்கும் யாருக்காவது அ.தி.மு.க. ஆட்சியில் இலவசமாக அலைபேசி கொடுத்து இருக் கிறார்களா?.
ரூ.4 ஆயிரம் வழங்குவோம்
விவசாய கடன் ரூ.14,000 கோடி தள்ளுபடி செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் வெறும் ரூ.5,000 கோடிதான் செய்திருக் கிறார்கள். மீதமிருக்கும் அந்த கடனை நாம் ஆட்சிக்கு வந்துதான் தள்ளுபடி செய்யப் போகிறோம். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு இருக்கும் நகைக் கடனைத் தள்ளுபடி செய்வோம் என்று நான் சொன்னேன். இதை கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலும் சொன்னேன். அதை மிட்டாய் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டதாக முதல்-அமைச்சர் பழனிசாமி அப்போது விமர்சித்தார். இப்போது அறிவித்திருக்கிறீர்களே, நீங்கள் அல்வா கொடுத்து ஏமாற்றப்போகிறீர்களா?
கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் கொடுங்கள் என்று சொன்னோம். நிதி இல்லை என்று வெறும் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்தார்கள். மீதம் 4,000 ரூபாய் நாம் ஆட்சிக்கு வந்த அடுத்த நாள் பாதிக்கப்பட்டிருக்கும் மக்க ளுக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்ற அந்த உறுதியையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜவுளிப்பூங்கா
கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளா தாரத்தை மேம்படுத்தும் வரையில் சொத்துவரி அதிகரிக்கப்படாது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப் படும். மீஞ்சூர்-பொன்னேரியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும். மெட்ரோ ரயில் சேவை திருவொற்றியூரில் இருந்து மீஞ்சூர் வழியாக கும்மிடிப்பூண்டி வரையிலும் நீட்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும். கும்மிடிப் பூண்டிக்கு கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப் படும்.
எல்லாபுரம் ஒன்றியம் ஏனம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை உரு வாக்கப்படும். பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகில் சுற்றுலாத்தலம் அமைக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் குளிர் பதனக் கிடங்கு உருவாக்கப்படும். பொன்னேரி அரசு மருத்துவமனை நவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதிமொழி களைச் சொல்லி இருக்கிறோம்.
ஒரு இடத்தில் கூட...
200 அல்ல 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடக்கூடாது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது பா.ஜ.க.வின் வெற்றிதான். இன்றைக்கு அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபை பொதுத் தேர்தலையொட்டி தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 7 லட்சம் அழியாத மை பாட்டில்கள்
சட்டசபை பொது தேர்தலையொட்டி தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 7 லட்சம் அழியாத மை பாட்டில்கள் மைசூருவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
மைசூரு நகரில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இலியாக் அண்ட் பெயிண்ட் தொழிற்சாலையில் தேர்தலின்போது வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படும் அழியாத மை பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தேர்தலின்போது இந்த நிறுவனத்தில் இருந்துதான் அனைத்து மாநிலங்களுக்கும் அழியாத மை பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கர்நாடகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இலியாக் அண்ட் பெயிண்ட் தொழிற்சாலை சார்பில் மேற்கண்ட தேர்தல்களுக்கான அழியாத மை பாட்டில்களை தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 6.99 லட்சம் அழியாத மை பாட்டில்கள் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
மேற்கு வங்காள மாநிலத்துக்கு 2.7 லட்சம் மை பாட்டில்கள், அசாம் மாநிலத்திற்கு 83,860 மை பாட்டில்கள், தமிழகத்திற்கு 2.37 லட்சம் மை பாட்டில்கள், கேரளா மாநிலத்திற்கு 1.02 லட்சம் பாட்டில்கள், புதுச்சேரிக்கு 6,000 பாட்டில்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவரை 3,293 வேட்புமனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனைப் போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர்.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம்தேதி தொடங்கியது. 13ஆம் தேதி (சனிக்கிழமை), 14ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் தவிர்த்து, வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரையில்3,293 வேட்புமனுக்கள்
தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்பாளர்கள் அளிக்கும் வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று (18.3.2021) இரவு 7 மணி நிலவரப்படி 3 ஆயிரத்து 293 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 721 மனுக்களும், பெண்கள் 571 மனுக்களும் தாக்கல் செய்துள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில் மட்டும் திருநங்கை ஒருவர் போட்டியிட வேட்புமனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 51 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல் ஆகிய 2 தொகுதிகளில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கலாகி உள்ளன.
மனுக்கள் மீது நாளை பரிசீலனை
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது.
வேட்புமனுத் தாக்கல் இன்று (19.3.2021) நிறைவு பெற்றவுடன், அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வேட்புமனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும். இப்பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப்படுத்தப்படும். எனவே இந்தக் கால அவகாசம் முடிவடைந்தவுடன், அன்றைய தினம் மாலையிலேயே அந்தந்த தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயார் செய்யப்படும்.