தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருத்தங்கள்:மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 13.3.2021 அன்று வெளியிட்டார். இதில், தற்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன..
இதுகுறித்து தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (14.3.2021) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதி 43இல், விவசாயிகளுக்கு எதிரான சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படாது என்பதையும், வாக்குறுதி 367இல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை 2020 நிராகரிக்கப்படும். காட்டுப்பள்ளித் துறைமுகம் அமைக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்பதையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய அரசிடம்வலியுறுத்துவோம்
மேலும் வாக்குறுதி 500இல் நேர்ந்துள்ள எழுத்துப் பிழையைப் பின்வருமாறு சரி செய்து, படித்திடவும் கேட்டுக் கொள்கிறேன்.
* இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-அய் திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* இலங்கையில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
சட்டமன்றத்தில் தீர்மானம்
இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019-அய்ப் பொறுத்தவரை, அதை தொடக்கத்தில் இருந்தே எதிர்த்ததோடு மட்டுமின்றி, நானே வீதிகளில் இறங்கி ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று அச்சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை மனுவை குடியரசுத் தலைவரிடம் தி.மு.க. கொடுத்திருக்கிறது.
அத்துடன் நில்லாமல், தொடர்ந்து அந்தத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தி வருகிறது.
எனவே, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அச்சட்டம் ரத்து செய்யப்படுவதற்கு தி.மு.க. அழுத்தமான குரல் கொடுக்கும் என்று மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்
சென்னை, மார்ச் 15 திருவாரூரில் இருந்து தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (15.3.2021) மாலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை சந்திப்பதற்கான ஆயத்த பணிகளை தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டே தொடங்கிவிட்டார். ஒன்றிணைவோம் வா.., மக்கள் கிராம சபை கூட்டம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல், ஸ்டாலின்தான் வாராரு... விடியல் தர போராரு, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று விதவிதமான தலைப்புகளில் அவரது பிரச்சார பயண திட்டம் அமைந்தது.
இந்தநிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்கள் குறைகேட்பு பிரச்சார பயணத்தை மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (14.3.2021) நிறைவு செய்தார்.
திருவாரூரில் தொடக்கம்
இதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறார். இதுகுறித்து தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 15ஆம் தேதி (இன்று) கலைஞர் பிறந்த மண், திருவாரூர் தெற்கு ரத வீதியில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்குகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
வேட்பாளர்கள் அறிவிப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டி யிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட் டணியில் இணைந்து போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு காட்டுமன்னார்கோவில், வானூர், அரக்கோணம், செய்யூர், திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 இடங்களில் வேட்பாளர்களை அறிவிக்கிறோம்.
1.காட்டுமன்னார் கோவில் (தனி) - சிந்தனை செல்வன்
2.வானூர் (தனி) - வன்னி அரசு
3.அரக்கோணம் (தனி) - கவுதமசன்னா
4.செய்யூர் (தனி) - பனையூர் பாபு
5.திருப்போரூர் (பொது) - எஸ்.எஸ்.பாலாஜி
6.நாகப்பட்டினம் (பொது) - ஆளூர் ஷா நவாஸ்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தனிச்சின்னம்
6 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் தனிச்சின்னத்தில் போட்டியிட இருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
வேட்பாளர்கள் விவரம்
1. திருத்துறைப்பூண்டி- க.மாரிமுத்து
2. தளி - தி.ராமச்சந்திரன்
3. பவானிசாகர் - பி.எல்.சுந்தரம்
4. திருப்பூர் வடக்கு - ரவி (என்கிற) மு.சுப்ரமணியன்
5. வால்பாறை - மா.ஆறுமுகம்
6.சிவகங்கை- சு.குணசேகரன்
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் விவரம்
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாழ்க்கை குறிப்பு.
1. - கீழ்வேளூர் (தனி) - நாகை மாலி
2. திருப்பரங்குன்றம் - எஸ்.கே. பொன்னுத்தாய்
3. கோவில்பட்டி - கே. சீனிவாசன்
4. கந்தர்வக்கோட்டை (தனி)- எம். சின்னதுரை
5. அரூர் (தனி) - ஏ. குமார்
6. திண்டுக்கல் - என். பாண்டி
அதிமுக தேர்தல் அறிக்கை 2021
அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில வாக்குறுதிகள்:
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை நேற்று (14.3.2021) அறிவித் துள்ளது அதிமுக. ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும், பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் அதில் அடங்கும்.
அனைவருக்கும் வீடு
குலவிளக்கு திட்டம்,
பேருந்தில் மகளிருக்கு சலுகை
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
விலையில்லா ஆறு சமையல் எரிவாயு உருளை
அனைவருக்கும் சூரிய சக்தி சமையல் அடுப்பு
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2ஜி
வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி
விலையில்லா அரசு கேபிள்
தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம்
எழுவர் விடுதலை
தமிழ் அகதிகளுக்கு இரட்டை இலங்கைக் குடியுரிமை
காத்திருக்கும் விவசாயிகளுக்கு மின் இணைப்பு
நம்மாழ்வர் பெயரில் வேளாண் ஆராய்ச்சி மய்யம்
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு
100 நாட்கள் வேலை 150 நாட்களாக உயர்வு
மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்
சிஏஏ-அய் கைவிட வலியுறுத்தல்
கல்வியை மாநில பட்டியலில் சேர்த்தல்
போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.